ராகவ் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஆரவின் கார் பொறுமையின்றி நின்றது.
உள்ளே இருந்து பதட்டத்துடன் வெளி வந்தவனை அங்கு நின்றிருந்த ராகவ் கண்டு அவனிடம் நெருங்க,
"என்னாச்சி இங்க எதுக்கு வர சொன்னிங்க?" என்றவனின் பதட்டம் நிறைந்த கேள்விக்கு, அமைதியான பார்வையோடு,
"நியூஸ் பார்த்தியா?" என்றார்.
"பார்த்தேன் இப்போ.. அதுக்கு என்ன?" என்றவனின் குரலில் பயம் அதிகமிருக்க,
"இன்னைக்கு காலைல கண்டுப்பிடிச்ச கார் வினையோடது. அதில இருந்த பாடியும் மாயாவுடைய அப்பா மிஸ்டர் வினையோடது தான்னு போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கன்பார்ம் ஆகிடுச்சி." என அவர் கூறிய நொடி வினையின் சிரித்த முகம் அவன் மனதில் மின்னி மறைய, அவனுக்கு மிகவும் பிடித்த நபரில் ஒருவரான அவர் இப்பொழுது அவன் வாழும் இந்த மண்ணில் இல்லை என்னும் உண்மையை அவன் சிந்தை உணர்ந்த நொடி கால்கள் வழுவின்றி கண்ணில் நீர் தேங்கி, சட்டென தள்ளாடியவனை தாங்கிப்பிடித்த ராகவ், ஒரு இருக்கையில் அமர வைத்து அவனுக்கு குடிக்க குளிர்பானம் வாங்கிக்கொடுத்தார்.
ஆனால் எதையும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. இது கனவாய் இருந்திடக் கூடாதா என ஏங்கிய அவன் மனம் மாயாவைப் பற்றின கவலைக் கூட இன்றி ஊமையாய் உள்ளே கதறிக்கொண்டிருந்தது.
"ஆரவ் ஆரவ்.. நீயே இப்படி உடைஞ்சு போய்ட்டினா மாயாவை யார் டா தேத்துறது?" இடிந்துப் போய் அமர்ந்திருந்தவனிடம் கூறியவர்,
"மாயாக்கிட்ட இந்த உண்மையை கண்டிப்பா சொல்லனுமா?" என கேட்க,
"அவ அப்பாவை பத்தின உண்மையை மறைக்க எனக்கு என்ன ப்பா உரிமை இருக்கு. ஏற்கனவே மறைச்சது போதும். கடைசியாவாது அவ அவளோட அப்பாவை பார்க்கட்டும்." என்று அந்நிலையிலும் தெளிவாய் பதிலுரைத்தவன் அறியவில்லை அவனவளை இப்பெரிய இழப்பிழிருந்து எப்படி மீட்கப் போகிறான் என்று.
முதலில் அவன் மீளவே எத்தனை நேரம் பிடிக்குமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை. வினை என்றால் அவனுக்கு அத்தனை பிரியம். ஒரு தந்தை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அவன் மனதின் கற்பனைக்கு, நிஜமான உருவமாய்த் தான் வினை அவனுக்கு எப்பொழுதும் தெரிவார்.
அவன் ஆசைப்பட்ட தந்தை போல் மட்டுமில்லை உலகிலுள்ள அத்தனை பிள்ளைகளின் ஆசை தந்தையும் அவராகத் தான் இருப்பார்.
ஏன் இத்தனை கொடிய முடிவு அவருக்கு என எண்ணும் வேலையிலேயே அவர்களின் முதல் சந்திப்பு அனுமதியின்றி அவன் நினைவில் வந்து போனது.
June 28, 2017.
அந்த உயர்ரக ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு வெளியே இறங்கிய மாயாவின் கண்கள் அங்கிருந்த அனைத்துக் காரையும் அலசிக்கொண்டிருந்தன.
அதில் தன்னவனின் கார் இல்லை என்று உணர்ந்து லேசான கோபமுடன் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தவளிடம், "மாயா ஏன் நிக்குற வா உள்ளேப் போகலாம்." என்றார் அவளோடு வந்த அவளது தந்தை வினை.
"அ.. அது.. ஒன்னுமில்லை வினு. வா போகலாம்." என்றவள் அவரின் பின்னால் சென்றப்படியே, 'இவன் இருக்கானே.. இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள்.. இன்னைக்குக் கூட சீக்கிரம் வரலை.' என்று ஆரவை மனதில் அர்ச்சனை செய்தப்படி தன் தந்தையை தொடர்ந்தவள், தன் போனில் பதட்டத்துடன் வேகமாய் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
பதட்டம் இருக்காதாப் பின்னே தான் மணமுடிக்க நினைப்பவனை தன் தந்தைக்கு அறிமுகம் செய்யப் போகிறாள் அல்லவா. தட்டுத் தடுமாறி நேற்றிரவு இந்த விஷயத்தைப் பற்றி வினையிடம் சொன்னப் போது அவரின் முகமே அவருக்கு இதில் பெரிதாய் இஷ்டம் இல்லை என்பதை காட்டிக்கொடுத்து விட்டது. இருப்பினும் ஒன்றும் கூறாமல் அவனைப் பார்க்க சம்மதித்திருக்கும் தன் தந்தைக்கு அவனை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயம் வேறு விடாமல் அவளை துரத்திக் கொண்டே இருந்தது.
அவன் "ஹலோ.." என்றது தான் தாமதம், "இன்னும் வராம என்ன டா பண்ணிட்டு இருக்க.. எதாவது சொதப்புனனு வையேன்.." எனத் தன் தந்தைக்கு தெரியாமல் கண்களை உருட்டி கிஸுகிஸுவென பேசியவளிடம், "கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு.." என்றவனை இடைமறித்தாள்.
"என்னச் சொல்லப் போற? படத்துல வர்ற ஹீரோஸ் மாதிரி, 'வழில ஒருத்தருக்கு ஆக்ஸிடென்ட். அவரை ஹாஸ்பிடல்ல சேர்க்கப் போயிருக்கேன்னு கதை விடப் போறியா?" என்றவளின் சொற்களைக் கேட்டு களுக்கென சிரித்தவன், தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவர்களுக்கு கைக் காட்டினான்.
அப்பொழுது தான் தாங்கள் உணவகத்தினுள் நுழைந்து விட்டோம் என்பதையே உணர்ந்தவள், விரிந்த விழிகளோடு அழைப்பை துண்டித்து விட்டு, 'எப்படி வந்தான்?', என குழப்ப ரேகைகளோடு அவனை நெருங்கிய தன் தந்தையை தொடர்ந்தாள்.
ஆரவும் வினைய்யும் ஒருவருக்கொருவர் கைக்குழுக்கிக் கொண்டு எதிரெதிர் நாற்காலியில் அமர, தன் தந்தையின் அருகில் அமர்ந்துக்கொண்டாள் மாயா.
முதலில் வினைய்யே பேச்சை ஆரம்பித்தார்.
"மிஸ்டர் ஆரவ் ஆதித்தியன். ஆதித்தியன் க்ரூப் ஆஃப் கம்பெனியின் எம்.டி. ராகவ் ஆதித்தியனோட பையன்.. ரைட்? " எனத் தனது விரல்களை பிணைத்தப் படி அவர் கேட்க, எப்பொழுதும் தன் தந்தையின் பெயர்கொண்டு தன்னை அடையாளப்படுத்த விரும்பாதவனுக்கு அவரது இந்த வாக்கியத்தைக் கேட்டு சுள்ளென்று கோபம் ஏறியது.
அவனது முன் கோபத்தையும் அதுவும் இந்த விஷயத்தில் அவனுக்கு ஏற்படும் கோபத்தையும் நன்கு அறிந்தவள் தன் தந்தையையும் ஆரவையும் மாறி மாறி அவஸ்தையுடன் விழிப்பிதுங்கி பார்த்துக்கொண்டிருந்தாள் மாயா.
"அப்கோர்ஸ் ரைட் மாமா. பட் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். எனக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்குற வரைக்கும், நீங்க மட்டும் இல்லை. இந்த உலகமே என்னை அவரோட பையன்ங்குற அடையாளத்தை வச்சி ரிகங்னைஸ் பண்ணும். ஐ திங் நான் உங்களை பார்க்க வந்தது ரைட் டைம் இல்லைனு நினைக்குறேன். நம்ப முடிஞ்சா இன்னுனொரு நாள் மீட் பண்ணலாமே. அதாவது 'ராகவ் ஆதித்தியனோட மகன் ஆரவ் ஆதித்தியனா' இல்லாமல் வெறும் 'ஆரவா' எனக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்ட பிறகு." எனப் பொறுமையாகவும் அதே சமயம் வார்த்தைகளை அழுத்தமாகவும் கூறியவன் விடைப்பெறும் பாணியில் எழுந்து நின்றான்.
"என் பதிலை கேட்காமல் போக போறிங்களா?" என்ற வினையின் கேள்வியில் அப்படியே நின்றவனுக்கு, "ஹம் உக்காருங்க ஆரவ்." என இருக்கையை நோக்கி கையைக் காண்பித்தவர் அவன் விருப்பமில்லாமல் அமர்ந்தவுடன் மீண்டும் தொடர்ந்தார்.
"ஐ லைக் யுவர் கான்பிடன்ஸ். அப்பா பணத்துல சொகுசா இருக்குற பசங்களுக்கு நடுவுல உங்களுக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க நினைக்குறது ரொம்பவே கர்வப் பட வேண்டிய விஷயம். முதல்ல, நீங்க என்னை மாமானு சொன்னது.
இரண்டாவது, உங்களுக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டப் பிறகு உன் பொண்ணை குடுத்தாப் போதும்னு நீங்க சொல்லாமல் சொன்னது. மூணாவது, உங்க அடையாளத்தை ஏற்படுத்துற பயணத்துல நீங்க நினைச்சதை அடையுற வரைக்கும் என் பொண்ணு உங்களுக்காக காத்திருப்பானு நீங்க நம்புறது. இது எல்லாமே உங்க மேல உங்களுக்கு இருக்குற நம்பிக்கையைக் காட்டுது." என அவனின் ஒரே ஒரு உரையாடலில் ஒளிந்திருந்த உள் அர்த்தங்களை அக்கு வேறாய் ஆணி வேறாய் பிரித்து இத்தனை துள்ளியமாய் அவர் அவனை எடைப் போட்டதில் ஆடித் தான் போனான் ஆரவ். தன் தந்தையைப் பற்றி அறிந்திருந்த மாயாவிற்கு பெருமிதத்தில் தலைக் கால் புரியவில்லை.
"என்னை உங்கள் மருமகனா நீங்க ஏத்துக்குறதுக்கு, நான் யாரு எப்படி பட்டவன் இது மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருந்தா போதாது மாமா. என் குடும்பத்தைப் பற்றியும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே.." என்றவனை கத்தரித்தவர்,
"எல்லாம் எனக்கு தெரியும் பா. மாயா சொல்லிட்டா. அவ கட்டிக்கப் போறது உன்னைத் தான். உன் குடும்பத்தை இல்லை. என்ன ஒன்னு நாங்க மிடில் க்லாஸ் ஃபேமிலி. உங்க வீட்ல உங்க காதலையும் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. அதுக்காக எந்த ஒரு சூழ்நிலையிலயும் என் பொண்ணை நீ கை விட்டுட மாட்டேங்குற நம்பிக்கை எனக்கு முழுசா இருக்கு. ஆனாலும் எனக்கு ஒன்று மட்டும் நெருடலா இருக்கு."
"என்ன மாமா?"
"மிடில் க்லாஸ் பொண்ணு ஹை க்லாஸ் பையனை விரும்புனாலே நம்ப சமூகம் அதுக்கு ஒருப் பேரு வைக்கும் ஆரவ்..." என அவர் எதைப் பற்றி கூற வருகிறார் எனப் புரிந்துக்கொண்டவன்,
"மாமா.. நான் அவளை காதலிச்சேன். அவளும் என்னை காதலிச்சா. பட் அதை அவ என்கிட்ட சொல்லவும் இல்லை. வெளிக்காட்டிக்கவும் இல்லை. காரணம் இப்போ நீங்க சொல்றது தான். எங்க அவ பணத்துக்காகத் தான் என்னை காதலிக்குறதா நான் நினைச்சிட கூடாதுங்குறதுக்காகத்தான். நான் பணக்காரனா இருந்தா மட்டும் இல்லை.. நாளைக்கு நான் ஒன்னுமே இல்லாமல் நடு ரோட்டுல வந்து நின்றாலும், இப்படி பேசுறவன்லாம் வேடிக்கைத் தான் பார்ப்பான்.. ஆனா அப்பவும் என்கூட என் மாயா நிப்பா. அது அவளைப் பார்த்த நிமிஷமே எனக்கு தெரிஞ்சிடுச்சி.." என்றவன் உணவகத்தின் ஊழியரை கையசைவில் அழைத்து அவனுக்கு தேவையானதையும் மற்ற இருவருக்கு தேவையானதையும் ஆர்டர் செய்து அனுப்பினான்.
பின் உணவு வரும் வரை சிறு உரையாடல் நடக்க, தான் இருப்பதையே மறந்து விட்டார்கள் என்றெண்ணி, கன்னத்தில் கை வைத்தப்படி இருவரின் வாயையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மாயா.
அவளை ஓரக்கண்ணால் தீண்டியவன் தன் மாமா பேச்சு சுவாரஸ்யத்தில் இருப்பதை உறுதிச் செய்துக்கொண்டு, தன்னவளை நோக்கி கண்ணடிக்க, அதில் விக்கித்தவள் தன் தொண்டையை செறுமிக் கொண்டு நிமிர்ந்து அமர, அதைக் கண்டு மந்தகாசப் புன்னகை உதிர்த்தான் ஆரவ்.
'எதுல வந்த?' எனக் காற்றில் பேசியவளின் குரல் மிதந்து சென்று அவளின் காதலனின் செவிகளை சென்றடைந்தது.
'பைக்கில்..' என்றான் கை இரண்டையும் முறுக்கி காண்பித்து.
பைக் என்றவுடன் அவன் எப்படி தாறுமாறாய் ஓட்டுவான் என்றறிந்து முறைத்தவள், கண்களை சுறுக்கி தன் முன் இருந்த ஸ்போக் ஸ்பூனை வைத்து அவனை மிரட்டுவதுப் போல் பாவனை செய்ய, ஆரவ், முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு காதைப் பிடித்து 'ஸாரி' என்றான் கெஞ்சுவதுப் போல்.
"அம்மா இல்லாதப் பொண்ணுனு ரொம்பவே செல்லம் குடுத்து வளர்த்துட்டேன். இத்தனை நாள் நான் மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருந்தேன். இனிமே பாவம் நீ.." எனத் தனியாய் பேசிக்கொண்டிருந்த வினை, இவ்விரு காதலர்களின் சேஷ்டையை கண்டு அப்படியே நிறுத்தி விட்டு, ஆரவை சீண்ட நினைக்க,
"என்னப்பா ஆரவ். எதுவும் சொல்ல மாட்டேங்குற.. அப்போ உனக்கு மாயாவைக் கட்டிக்க இஷ்டம் இல்லையா?" என முகத்தை மிகச் சீரியஸாய் வைத்துக்கொண்டு சம்மந்தமே இல்லாமல் வினை வினவவும்,
தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் அரண்டு முழித்தவன், "அ.. அப்படி எல்லாம் இல்லை மாமா.." எனத் தடுமாற அதைக் கண்டு அப்பாவும் மகளும் விழுந்து விழுந்து சிரிக்கவே, தன்னை வைத்து விளையாடுவதை உணர்ந்தவனுக்கு அப்பொழுதே மூச்சுக் காற்று சீராய் ஆனது.
அதேச் சமயம் உணவும் வர, அனைவரும் அதில் மூழ்கிப் போயிருந்த நேரம், ஆரவின் செல்பேசி சிணுங்கியது.
'மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லிப்புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
ஊருக்குள்ள என்ன பத்தி
கேட்டுக்கங்க நல்ல புள்ள
உத்தமனா வாழ்ந்து வந்தேன்
தப்பு தண்டா ஏதும் இல்ல..'
அவனது ரிங்டோனைக் கேட்டு சட்டென மாயாவிற்கு புரை ஏறவே, சங்கடம் கலந்த வேகத்துடன் காலை அட்டெண்ட் செய்து, காதிற்கு கொடுத்தவன், "ஹலோ மாமா.. நான் வெளியே இருக்கேன்.. அம்மாக்கிட்ட பேசனும்னா வீட்டுக்கு கால் பண்ணுங்க."
என்று திரும்பி, அவசரமாய் பேசி அழைப்பை அணைத்து வைத்தான்.
மாயாவும், அவனது வருங்கால மாமாவும் அவனைப் பார்ப்பதை உணர்ந்து, "அது.. ஆளுக்கு ஏத்த மாதிரி காலர் டியூன் வைக்கிறது என் பழக்கம்.." என அசடு வழிந்தவனை லேசனான முறைப்புடன் பார்த்தவர்,
"இருந்தாலும் இது சரியில்லை." என கூறியதும் தொண்டையில் இறங்க மறுத்த உணவுடன் அவரைக் கண்டவனிடம்,
"எனக்கு வைக்க வேண்டிய ரிங்டோனை நீங்க எப்படி வேற ஒருத்தருக்கு வைக்கலாம் மாப்பிள்ளை.." என இதுவரை அவர் தன் சம்மதத்தை வெளிப்படையாய் சொல்லாமலே அதை உணர்த்தியிருந்தாலும், முதல் முறை ஆரவை மாப்பிள்ளை என அழைத்ததும் மாயாவின் இதழும், ஆரவின் இதழும் புன்னகையில் விரிந்தது.
"ஐ லவ் யூ வினு.." என அவரை கழுத்தோடு அணைத்துக்கொண்ட மாயாவின் கண்கள் கலங்கியிருந்தன.
பின் அங்கே மூவரின் சிரிப்பலைகளும், பேச்சு சத்தமும் தான் நிறைந்திருந்தது.
ஆரவின் சிந்தனை முழுதும் வினையைச் சுற்றியிருக்க அவன் அருகில் வந்த ராகவ்,
"ஆரவ் மாயாவை ஆதிரா கூட்டிட்டு வரா." எனக் கூற, தன்னிலை சமன் செய்யவே வழித்தெரியாதவனுக்கு மாயாவை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற எண்ணம் கூட இன்றி வினையை பற்றின எண்ணம் மட்டுமே சிந்தனையெங்கும் நிறைந்திருந்தான் அவன்.
மாயா வந்தவுடன் வினையின் சடலத்தை வெள்ளைத் துணிப் போர்த்தி, ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு ஆம்புலன்ஸில் ஏற்ற, கண்களில் தேங்கிய கண்ணீரோடு ஸ்ட்ரெச்சர் மறையும் வரை பார்த்துக்
கொண்டிருந்தவனுக்கு மாயாவின் அழுகுரல் கூட செவிகளில் எட்டாமல் இருக்க, பிரம்மை பிடித்தார் போல் நின்றுக்கொண்டிருந்தவனுக்கு தங்களின் முதல் சந்திப்பில் வினை சொன்ன ஒன்று நினைவில் வந்தது.
'எந்த ஒரு சூழ்நிலையிலயும் என் பொண்ணை நீ கை விட்டுட மாட்டேங்குற நம்பிக்கை எனக்கு முழுசா இருக்கு'
என்ற அவரின் வாக்கியம் அவன் காதினோரம் ஒலித்துக் கொண்டே இருக்க, அழுது அரற்றிய மாயாவை நெருங்கி இறுக்க அணைத்துக்கொண்டான்.
அந்த அணைப்பின் வழி 'இனி உனக்கு எல்லாமும் நானாக இருப்பேன்.' என உணர்த்த முயன்றானோ என்னவோ அவளின் அழுகை சில நிமிடங்களில் குறைந்து சோர்ந்து அவன் நெஞ்சிலே முகம் புதைத்திருந்தாள் அவள்.
தன் தந்தையை விட அவர் மேலே அதிக அன்பும் மரியாதையையும் வைத்திருந்தான் ஆரவ். எந்த ஒரு முக்கியமான விஷயமாய் இருந்தாலும் அவரிடம் தான் முதலில் ஆலோசனை கேட்பான்.
அந்த சந்திப்புக்குப் பின் வினையும் ஆரவும் மாமா, மாப்பிள்ளை என்ற உறவைத் தாண்டி மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர் என்பது தான் உண்மை. எந்த அளவுக்கு என்றால் ஆரவிற்கு, வினை.. 'மாமா' என்பதிலிருந்து 'வினு' வாக மாறிப்போனார். வினையிற்கு ஆரவ், 'மாப்பிள்ளை' என்பதிலிருந்து 'டேய் ஆரவாய்' மாறிப்போயிருந்தான்.
விழியின் தேடல் தொடரும்🖤