என்னப் பெண் அவள்... பேசிய இரண்டு நிமிடங்களில் மனதைக் கவர்ந்துவிட்டாளே.... அவள் பேச்சினைப் போலவே அவளது தோற்றமும் எவ்வளவு வசீகரமாய் உள்ளது. இளம் வயதில் மற்றவர்களைப் பற்றியும் யோசிக்கிறாளே.... நன்முறையில் வளர்த்து இருக்கின்றனர்.. என்று அவளை எண்ணியவாறே படுத்திருந்தான்.
அவளும் அப்படித்தான்.... அவனுடைய குணங்களைப் பற்றியே யோசித்து யோசித்து வியந்தாள். தன் வீட்டையே இப்படி மாற்றியிருக்கிறான்? எத்தனை அன்பானாக இருந்திருந்தாள் அந்தப் பெண் இரண்டு மாதத்தில் அவள் பெற்றோரை மறந்து அண்ணா அண்ணா என்று உருகுவாள்?? அவனுடைய குணம், பாசமும் அவளை அவனைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க விடவில்லை.
அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து, மறுநாளே அங்கு சென்றாள். அனைவரிடமும் பழகினாள். வெகு சீக்கிரத்திலேயே எளிதில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தாள். ஈஸ்வருடன் பேசி சிறு தொழில் ஒன்றை தொடங்கினாள். ஒவ்வொருவரின் குணத்திற்கேற்ப வேலையை பகிர்ந்து கொடுத்தாள். ஆர்வமும் சுறுசுறுப்பும் அதிகம் கொண்டவர்களுக்கு உருவாக்கும் பொறுப்பினைக் கொடுத்தாள். பொறுமையை கையாள்பவர்களுக்கு அந்தப் பொருள்களை பரிசோதித்து அனுப்பும் பொறுப்பினைக் கொடுத்தாள். தீர ஆராயும் குணம் கொண்டவர்களுக்கு சூப்பர் வைஸிங் என ஒவ்வொருவருக்கும் வேலையைப் பகிர்ந்தாள். ஈஸ்வரையும் விட்டுவிடவில்லை.
உங்களுக்கு தான் பிஸ்னஸ் ட்ரிக்ஸ் தெரிந்திருக்குமே, அதனால் நீங்கள் தான் நம் உற்பத்திப் பொருளின் மார்கெட்டிங் மேனேஜர்.
நானுமா??
என்ன நானுமா?? எல்லோரும் வேலை செய்றப்போ நீங்கள் மட்டும் சும்மா இருந்தாள் எப்படி?
ஓ.... நான் சும்மாதான் இருக்கேன்னு முடிவே பண்ணிட்டியா நீ....
அதெல்லாம் எனக்குத் தெரியாது.நம்ம வீட்டு வேலைல உங்களுக்குனு ஒரு பங்கு வேண்டாமா??
சரி தாயே.... நீ என்ன வேலைக் கொடுத்தாலும் அப்படியே செய்கிறேன் என்று கை கூப்பிக் கும்பிட்டுச் சிரித்தான்.
ம்... அப்படி வாங்க வழிக்கு என பதிலுக்குச் சிரித்தாள்.
இப்படியே நாட்கள் பல நகர சதி அந்த வீட்டின் ஒரு அங்கமானாள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் வீடே களையிழந்ததைப் போல உணர்ந்தார்கள்.
அவளின் துருதுரு பேச்சும், விளையாட்டுக் குணமும் தினம் தினம் அவனை ரசிக்கத் தூண்டியது.
அவளும் அதே நிலையில் தான் இருந்தாள். அவனுடைய நிர்வாகத் திறனைக் கண்டு வெகுவாக வியப்புற்றாள். எவ்வளவு புத்திசாலித்தனம் இவனுக்கு.... என்று எண்ணினாள். அவனுடைய கள்ளம்கபடமற்ற பேச்சும், வசீகரிக்கும் சிரிப்பும், குறும்புப் பார்வையும் அவளை கவர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லையே தவிர ஒருவர் மனதினை இன்னொருவர் நன்றாக அறிந்திருந்தனர்.
இப்படியாக நாட்கள் கடந்தோட காதலை சொல்லாமலே இருவரும் நாட்களை ரசித்தனர்.
திடீரென்று பிஸ்னஸ் விசயமாக வெளிநாடு செல்ல வேண்டியாயிருந்தது. சதியை அழைத்து விவரம் கூறி இரண்டு நாட்களில் வந்துவிடுவேன் அதுவரை வீட்டினைப் பார்த்துக் கொள் என்றான்.
இரண்டு நாட்களா?? நீங்கள் நேரில் போய்தான் ஆக வேண்டுமா என்ன??
கட்டாயம் போகத்தான் வேண்டும். இல்லையேல் உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய மாட்டீர்களா என என் வீட்டில் இருக்கும் ஒருப் பெண் கேள்வி மேல் கேள்வியாய் கேட்பாள் எனக் கூறிச் சிறித்தான்.
ஐய்ய.... காமெடியாக்கும்... சிரிப்பே வரலை.
நான் காமெடினு சொல்லவே இல்லையே....
போங்க ஈஸ்வர். இரண்டு நாட்கள் நான் எப்படி தனியா... என ஆரம்பித்தவள் சட்டென நாக்கினைக் கடித்துக் கொண்டு அமைதியானாள்.
தனியா....? என்றான் ஆர்வமாக
அ...அது... நான் மட்டும் தனியாக எப்படி அனைவரையும் பார்த்துக் கொள்வது எனக் கேட்க வந்தேன்...
ஓ..... இரண்டு நாள் தானே... அதெல்லாம் நீ பார்த்துக் கொள்வாய்...
நீங்களே சொல்லிக்குவீங்களா??
எனக்குத் தெரியாதா என் சதியைப் பற்றி....
என்ன.... என்றாள் வெட்கத்தோடு...
எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா எனக் கேட்டேன்.
இல்லை முன்பு வேறு மாதிரி.... என்றாள் நாணத்துடன்.
நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.... இன்னொரு முறையெல்லாம் கூற முடியாது....
சரிடா.....
ஏய்.. என்ன சொன்னாய்....
சரிங்கனு சொன்னேன்... என்று ஓடினாள் அங்கிருந்து.
சிரித்துவிட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானான்.முன்பெல்லாம் வெளிநாடுகளில் இரண்டு நாள் என்பது அவனுக்கு நிமிடத்தில் கடந்துவிடும். ஆனால் இப்போது எப்படி இரண்டு நாட்கள் தங்குவது... சதியைப் பிரிய வேண்டுமே என எண்ணினான்.
அனைவரிடமும் கூறிவிட்டு சதியைப் பார்த்துக் கொண்டே பிரியா விடை பெற்றான்.
தன் தோழிகளுடன் பேசுவதற்கு 24 மணி நேரம் போதவில்லையே என்று எண்ணியவள் இப்போது அந்த 24 மணி நேரத்தை யுகமாய் நினைக்கத் துவங்கினாள். யாருக்கு போன் செய்து பேசினாலும் நேரத்தினைக் கடத்த முடியவில்லை. வேலைகளையும் ஏதோ கடமைக்காக செய்தாள். அவனிடம் இருந்து கால் வரும் என்று போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ அங்கு வேலைப் பளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஓய்வு நேரத்தில் கால் செய்யலாம் என்று நினைத்தால் அப்போது இந்தியாவில் இரவாகியிருக்கும், அப்போது எப்படி கால் செய்வது என அவனும் துடித்து தான் போயிருந்தான்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிந்திருந்தும் வராமல் வேலை நீடித்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு இது பழகிய விசயம் என்பதால் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் பிரிந்ததே அவளுக்கு புதிது, அதிலும் இரண்டு நாட்கள் மூன்றாவது நாளாக நீடித்தது, அவளுக்கு கொடுமையாய் தெரிந்தது.
சதியின் தந்தையோ அவளுக்கு வரன் பார்த்துவிட்டார், அதைப் பற்றியும் அவள் ஈஸ்வரிடம் பேச முடியாமல் தவித்தாள்.
அடுத்த நாள் காலை வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் வெளியில் செல்லக் கிளம்பியிருந்தனர்.
ஆஹா.... என்னை விட்டுவிட்டு காலைலயே அவுட்டிங்கா?? என்றான் ஈஸ்வர்.
வாப்பா ஈஸ்வர். இப்போதான் வர?? என்ன ரொம்ப வேலையா??
ம் ஆமாம்மா... நீங்களாம் எங்க கிளம்பறீங்க?
என்னப்பா இப்படி கேட்குற... இன்னிக்கு நம்ம சதிய பொண்ணு பார்க்க வறாங்க. அதுவேற பிடிக்கலை பிடிக்கலைனு புலம்பிட்டே இருந்துச்சு. அதான் நாம போன கொஞ்சம் தைரியமா இருக்குமேனு கிளம்பறோம். உன்கிட்ட சொல்லலையா??
எ..என்ன?? பெண்ணு பார்க்கவா???
உன்கிட்ட பேசியிருக்கும்னு நினைச்சோம். நீ என்னப்பா இப்படி கேக்குற?
நீங்க எங்கயும் போக வேண்டாம். இங்கயே இருங்க, நான் முக்கியமான விசயமா வெளியில் சென்று வருகிறேன்.
வந்ததும் வராததுமா ஈஸ்வர் தம்பி இவ்வளவு அவசரமா எங்கப் போகுது. ஏதாவது பிரச்சனையா எனப் பயந்தனர் வீட்டிலிருந்தவர்கள்
என்னம்மா... பொண்ணு பார்க்கத்தானே வராங்க... கல்யாணமா பண்ணப்போறோம்?? வரவங்க முன்னாடி ஒருமுறை வந்து நின்னுப் பார்த்துவிட்டு பிறகு பிடிக்கவில்லை என்று கூறு நான் விட்டு விடுகிறேன். ஆனால் பார்க்கவே மாட்டேன் என்றால் எப்படி? பார்த்தால் தானே பிடிச்சிருக்கா இல்லையானு தெரியும்??
ஈஸ்வரைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது அப்பா என சொல்ல வேண்டும் என்று அவள் உதடுகள் துடித்தது. ஆனால் அவள் மூளையோ அவனிடம் இதைப்பற்றி ஒருமுறையேனும் பேச வேண்டும் எனக் கூறியது. பிறகு தான் தந்தையிடம் வெளிப்படையாய்க் கூறமுடியும் என யோசித்தாள்.
சார்... என்று கூப்பிட்டவாறு உள்ளே வந்தான் ஈஸ்வர்.
அவன் குரல் கேட்டு சதியும், அவள் தந்தையும் வெளியில் வந்தனர்.
ஈஸ்வரைக் கண்டு நிம்மதி அடைந்தாள். பெண் பார்க்க வரும் விசயம் தெரிந்திருக்குமே என அவனைப் பார்க்க முடியாமல் கலங்கி நின்றாள்.
வாங்க தம்பி... கரெக்டான நேரத்திற்கு தான் வந்திருக்கீங்க. சதிய இன்னிக்குப் பெண் பார்க்க வருகிறார்கள். நீங்க வெளிநாடு போயிருக்கிறதா சொன்னாங்க. எப்போ வந்தீங்க??
இப்போ தான் சார் வந்தேன். நான் சதியிடம் சிறிது நேரம் பேச வேண்டும். முக்கியமான விசயம். ஸோ ப்ளீஸ் பர்மிஷன் கொடுங்க.
அதற்கென்ன தம்பி பங்சன் முடிஞ்சதும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்க. இப்ப மாப்பிள்ளை வீட்ல வர நேரமாச்சே.. இவ வேற கிளம்பமாட்டேனு அடம் பிடிக்குறா...
ஈஸ்வர் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவள் ஈஸ்வர் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் கலங்கிக் கொண்டிருந்தாள்.
இல்ல சார். ஜஸ்ட் 5 மினிட்ஸ். ப்ளீஸ்.....
நீங்க உள்ள வாங்க ஈஸ்வர் என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
சரி சீக்கிரம் பேசிட்டு வாங்க... என்றார் அவள் தந்தையும்.
உள்ளே சென்று கண்ணாடி முன் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.
சதி...
சொல்லுங்க ஈஸ்வர். எப்போ வந்தீங்க என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.
என்னைப் பார்... எதுவாக இருந்தாலும் என்னைப் பார்த்து பேசு.
பரவாயில்லை அப்படியே கூறுங்கள்.
அவளைப் பிடித்து அவன் புறம் திருப்பினான். அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி.. நான் சொல்ல நினைத்ததை உன் கண்கள் பல முறை சொல்லிவிட்டது. அது உண்மையெனில் நாம் காதலித்துக் கொண்டிருக்கின்றோம். நம் காதலுக்கு வார்த்தையின் வடிவம் தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன். நீ.... என்றான் அவள் கண்களை நேராகப் பார்த்து.
சதியோ ஊமையாகிப் போயிருந்தாள். காதலித்துக் கொண்டிருக்கின்றோம் என அவன் கூறியதும், தன்னைத் தானே கடிந்து கொண்டாள். அவன் புரிந்திருந்த அளவிற்கு நீ புரிந்து கொள்ளாமல் இருக்கின்றாயே சதி என்று மனதினுள் திட்டிக் கொண்டாள்.
எனக்கும் தான் என்று கூறி தலை குனிர்தாள், அவனது கூரிய பார்வைகளை எதிர் கொள்ள முடியாமல்.
இதை உன் தந்தையிடம் கூறாமல் எதற்காக பயந்து கொண்டிருக்கின்றாய் என அவள் நெற்றியில் அவன் இதமாய் முத்தமிட, அவனுடைய முதல் ஸ்பரிசத்தில் சப்தநாடியும் ஒடுங்கிப் போனாள்.
வா என்னுடன் என்று அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். சார் நானும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். உங்க இடத்தை எப்பயும் என்னால நிறைவு செய்ய முடியாது. ஆனால் அவளுக்கு நல்ல துணைவனா, நல்ல நண்பனா என்னால இருக்க முடியும். அந்த விதத்தில் நான் உங்களை விட நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என் மீதி வாழ்க்கைய அவள் தான் என் உலகம்னு வாழ ஆசைப்படுறேன். சதிய எனக்கே கொடுத்திடுங்க சார்.
நீங்க நல்ல பையன், நல்லா படிச்சிருக்கீங்க, நல்ல வேலைலயும் இருக்கீங்க... ஆனால் என் பெண்ணை திருமணம் செய்ய இது மட்டும் போதாது. குடும்பம் வேண்டும்... நல்லது கெட்டது சொல்வதற்கும், ஏதாவதுன்னா கூட நின்னு பார்க்கிறதுக்கும் குடும்பம் வேணும்பா...
அப்பா...
நீ சும்மா இரு சதி...
என் பொண்ணு தனியா பிறந்து, தனியாவே வாழ்ந்தவ... மிச்சம் இருக்க வாழ்க்கையவாது அவள் குடும்பத்தோட சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன்.
என் வீட்டிலும் குடும்பமாகத் தானே இருக்கின்றோம்??
அடைக்கலம் தேடி வந்தவர்கள் எல்லாம் குடும்பம் ஆகிவிட முடியாதுப்பா.
ஏன் சார் முடியாது?? இதுவரை எனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட் பண்ணவங்க அவங்கதான். நான் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். நல்ல மனிதனாய் இருக்கின்றேன் என்றால் அதற்கு அவர்கள் அறிவுரைகள் தானே காரணம்... இதைவிட வேறு என்ன வேண்டும்...?
நீ ஆயிரம் கூறினாலும் அவர்கள் அநாதைகள் தான். உன் குடும்பம் அல்ல...
சார் என்று கத்தினான். இன்னொரு முறை என் குடும்பத்தில் உள்ளவர்களை அப்படிக் கூறாதீர்கள். நான் மனிதனாய் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு விருட்டெனக் கிளம்பினான்.
அவன் கோபத்தில் அதிர்ந்து, அவன் செல்வதையே பார்த்துக கொண்டு நின்றாள் சதி..