அவன் உறங்குவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அன்பானவன் இவன்... இவனுக்கு ஏன் அந்தக் கடவுள் உறவுகளைக் கொடுக்கவில்லை?? இவன் முகத்தைப் பார்த்தால் பகை கூட மறந்துவிடும் போல் இருக்கின்றதே?? அவ்வாறிருக்க இவன் தாய், தந்தை எப்படிதான் இப்படி இவனைத் தனியே தவிக்க வைக்கின்றனரோ? என யோசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவளது தொலைபேசி ஒலிக்க.... அவளது கவனம் சிதறியது. மதனா தான் அழைத்திருக்கிறாள். அப்பொழுதுதான் மணியைப் பார்ததாள். சிவ்விற்கு சமைக்க வேண்டுமே... மதிய உணவு வேலை வந்துவிட்டதே என்று எண்ணியவாறே போனை எடுத்தாள்.
சொல்லு மதனா...
என்னடி சொல்லு... நீ முதலில் எங்கு போகிறாய் என்று சொல்லிவிட்டா சென்றாய்?? நான் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கிறேன்.. நீயோ பேசாமல் வைத்துவிட்டாயே...
ஏய்... சாரி டி மதனா. சிவ்விற்கு உடல்நிலை சரியில்லை. அவனை அப்படி பார்த்ததும் மனது தாங்கவில்லை. அதான், வெளியில் செல்கிறேன் என்று வைத்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன்.
என்ன..! சிவ்விற்கு உடல்நிலை சரியில்லையா?? என்னவாகிற்று?உனக்கு எப்படி தெரியும்?
அது.... அவன் அலுவலகம் வந்திருந்தான்.
என்ன!!!! எதற்காக? அவன் இன்று விடுப்பு எடுத்திருந்தானே?
ம்... ஆனால் காலையில் நான் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டதால் அவன் உடனடியாக கிளம்பி வந்துவிட்டான். அவனைப் பார்த்தப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று... அதான்...
அதுசரி... ரெண்டு பேரும் பர்பெக்ட் பேர் தான்... அவன் ஒரு லூசு.. நீ அவனுக்கேற்ற லூசு... இரண்டு லூசும் இப்போ எங்க இருக்கீங்க?
அது...அது... அவன் வீட்டில்...
ம்..சரி.. சரி... இப்போ எப்படி இருக்கின்றான்?
ம்.. பரவாயில்லை.. மருந்து கொடுத்திருக்கின்றேன்.. தூங்கிக் கொண்டிருக்கிறான்.
ம்.. சரி மட்சியா.. பார்த்துக்கோ... ஏதாவதென்றால் கால் செய். பணம் வைத்திருக்கின்றாயா?? இல்லை டிரான்ஸ்பர் செய்யவா?
ம் இருக்குடி..
சரி... ஈவ்னிங் சீக்கிரம் வந்துவிடு மட்சியா. ரெகுலர் டைமிற்கெல்லாம் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும்.
ம் சரி மதனா.
வீடு என்றதும் தன் தாய், தந்தையைப் பற்றி யோசித்தாள். நான் அவர்களுக்குத் தெரியாமல் இங்கு வந்திருக்கின்றேனே... மறைப்பது குற்ற உணர்ச்சியைத் தூண்டியது..
சிவ்வின் இருமல் சத்தத்தில் மனம் கலைந்தாள். அவனுக்கு மதிய உணவு செய்ய ஆரம்பித்தாள். சமையலைச் செய்து கொண்டே அவன் வீட்டையும் சிறிது மாற்றியிருந்தாள்.
கஞ்சி சாதம், காரச் சட்னி, ரசம் என காய்ச்சலின் போது உண்ணத் தோன்றும் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் சிவ் உறக்கம் கலைந்து அவளைத் தேடிக் கொண்டு சமயலறைக்கு வந்தான்.
என்னடி இவ்வளவு சமைத்துக் கொண்டிருக்கிறாய். நான் ஒருவன் தான் இங்கு இருக்கப் போகிறேன் என்பதை மறந்துவிட்டாயா??
இல்லைடா... காய்ச்சலின் போது நமக்கு என்ன சாப்பிடத் தோனுகின்றதோ அதைச் சாப்பிட வேண்டும். அதான்... உனக்கு காரமா சாப்பிடனுமா.. இல்லை புளிப்பாக சாப்பிடனுமானு தெரியலை... எல்லாவற்றையும் செய்துவிட்டேன்... சாப்பிடுகிறாயா??
வேணாம் மட்சியா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்... நீ வந்து அமர்ந்து கொள். எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே இருப்பாய்?
அவ்வளவு தான்டா வேலை முடிந்தது. சரி வா.. நீ முதலில் வந்து அமர்.
தாங்க்ஸ் மட்சியா...
எதுக்குடா??
யோசிக்காமல் என் வீட்டிற்கு வந்ததற்கு... என் அன்னையைப் போல் என்னை பார்த்துக் கொண்டதற்கு.... சிறு வயதிலேயே இழந்துவிட்ட பாசத்தினை, அரவணைப்பினை மீண்டும் தந்ததற்கு...
டேய்... என்னடா... இப்படி ப்பீல் பண்ற?? உன்னை நான் ரொம்ப ஜாலி டைப்னு அல்லவா நினைத்தேன்....
ம்.... ஆமா... ஆனாலும் நானும் சாதாரண மனிதன் தானே... என்ன.. என் உணர்வுகளை பல நேரங்களில் வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்து வைத்திருக்கின்றேன் அவ்வளவுதான். உன் முன்னால் நான் வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நீ என் மனைவி ஆகிற்றே.... என் சுக துக்கங்களை உன்னிடம் பகிர்வது தான் நியாயம். பணத்தால் கிடைக்கக்கூடிய அனைத்தும் கிடைத்தது... எனினும் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை... உறவு.. பாசம்.. உணர்வுகள்னு எதுவுமே இல்லாமல் தனிமையில் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்.. இந்த வீடு மட்டும் தான் எனக்கு ஆறுதல். இதற்குள் வந்தால் ஒரு நிம்மதி... ஆனால் அது உன்னோடு இருக்கும் பொழுதுதான் முழுமையடையும் என்றும் தோன்றுகிறது.
டோன்ட் வொரி சிவ்... இனி நான் இருக்கின்றேன், நீ இழந்த அத்துனையையும் உனக்கு வழங்குவதற்கு...
ம்.. உன்னை பார்த்த நொடியில் நான் உணர்ந்துவிட்டேன். எனக்கானவள் நீ என்றும்.. நான் இழந்ததை நீ மீட்டுத் தருவாய் என்றும்....
ம்.. கரெக்டா தான்டா நினைத்திருக்கிறாய்... நான் பார்த்துக் கொள்கிறேன்...
தாங்யூடி... என்று ஹக் பண்ண வந்தவனை... டேய்.. என்று செல்லமாய் எச்சரித்தாள்...
ஸாரி... ஸாரி டி... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். கல்யாணம் ஆகலைங்கிறதையும் மறந்துட்டேன்...
ம்..ம்...
ரியலி ஸாரி டி...
இட்ஸ் ஓகே டா . உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா... விடு.. வா சாப்பிடலாம்.
ஒரு டம்பளரில் கஞ்சி சாதமும், பிளேட்டில் ரசம் சாதமும் கொஞ்சம் காரச் சட்னியையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
பர்ஸ்ட் இந்த கஞ்சி சாதத்தைக் குடி... அது பிடிக்கலைனா இந்த ரசம் சாதத்தை சாப்பிடு டா...
பிடிக்கலைனாவா? எனக்காக நீ இவ்வளவு செய்திருக்கிறாய் இது எப்படி டி பிடிக்காமல் போகும். கொடு இரண்டையும் நான் சாப்பிடுவேன் என்று வாங்கிச் சாப்பிட்டான். ஒரு வாய் வைத்துவிட்டு.. செம்மடி... சூப்பர்.. உனக்கு இவ்வளவு நல்லா சமைக்கத் தெரியும்னு எனக்குத் தெரியாது..
ம்.. அப்படியா என்று முகம் சிவந்தாள்.
சாப்பிட முடியாமல் உமட்டிக் கொண்டு வந்தபோதும் அவன் முழுவதுமாய் சாப்பிட்டான்.
டேய். டேய்.. போதும்னா விட்டுடுடா... பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரேடியாகச் சாப்பிட்பு முழுவதுமாக வாமிட் செய்துவிடப் போகிறாய்...
இல்லைடி... நல்லா சாப்பிட்டால் தானே சீக்கிரம் சரியாக முடியும்... அப்பொழுது தானே நான் நாளையே வந்து உன்னைப் பார்க்க முடியும்?
அப்படியா..?? சரி சரி நல்லா சாப்பிடு...
அவள் கொண்டு வந்த முழுவதையும் சாப்பிட்டு முடித்தான். ம்.. பினிஸ்டு...
ம்... குட் பாய்... சரி டா.. டேபிளட் போடனும்.. உடனே போட முடியாது.. ஸோ ஹால்ல இரண்டு முறை நடந்துவிட்டு வா... போ..
நீயும் வாடி...
நீ நட டா.. நான் சமைச்ச பாத்திரத்தைலாம் கழுவிவிட்டு வந்துவிடுகிறேன்..
அதை அப்படியே விடுடி.. நான் நைட் வாஷ் பண்ணிடுறேன்.
போடா.. நீ வேற இன்னும் நைட்ல தண்ணில நினைஞ்சா இன்னும்தான் பீவர் அதிகம் ஆகும்...
அப்போ வா நான் ஹெல்ப் பன்றேன்.
டேய்... ஒழுங்கா வாக் போ.. என்று மிரட்ட அவனும் அமைதியாய் ஹாலை நோக்கி நடந்தான்.
அவள் சிரித்துக் கொண்டே சமையலறையை நோக்கி நடந்தாள்.
மட்சியா.... என்று ஹாலில் இருந்து அழைத்தான்.
என்னடா..? என்றாள் சமையலறையில் இருந்துக் கொண்டே...
வாக் ஹால்ல மட்டும் தான் போகனுமா?
ஐய்யோ.... இதுலாம் ஒரு கேள்வியாடா? எங்க வேண்டுமானாலும் நட டா.
சரி... என்றுவிட்டு நேரே கிச்சனுக்கு வந்தான். முடிச்சிட்டியா டி?
இல்லடா.. நீ ஏன் இங்கு வந்தாய்? உன்னை என்ன செய்யச் சொன்னேன்?
நீதானே எங்கு வேண்டுமானாலும் நட என்றாய்? அதான் கிச்சனில் நடக்கின்றேன்.
ஐய்யோ.... முடிலைடா...
போடி... உன்னை இங்க வேலை செய்ய விட்டுவிட்டு நான் அங்கு நடந்து கொண்டிருப்பேனா?
சரிங்க சார்.. நீங்க இங்கயே நடங்க..
ம்... ஆமா நீ சாப்பிடலையா டி?
இல்லைடா.. டிபன் பாக்ஸ் ஆபிஸ்லயே இருக்குல?? வீட்டுக்கு போயி தான் சாப்பிடனும்... அதுவுமில்லாமல் பசிக்கவும் இல்லை..
வீட்டிற்கு போயா?? அப்படியே அறைஞ்சேனா பாரு.. என்று அவளை பிடித்து இழுத்து அவள் கைகளை கழுவிவிட்டு குழாயை மூடினான். வந்து சாப்பிடு முதலில்...
இல்லை சிவ் எனக்குப் பசிக்கவில்லை...
ப்ச்... ஸ்ஸு... எதுவும் பேசாதே... என்று அடுப்புத் திட்டிலேயே உட்கார வைத்து அவனே உணவினை தட்டில் பரிமாறி ஊட்டினான்.
இல்ல சிவ்.. நானே..
காலைல நீ மட்டும் ஊட்டிவிட்டில்ல? இப்போ கம்முனு சாப்பிடு..
அவனையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.
இன்னும் கொஞ்சம் போடுறேன் ஒழுங்கா சாப்பிடு...
இல்லை சிவ் எனக்கு போதும். ப்ளீஸ் டா.. போதும்...
கொஞ்சம் தான்டி சாப்பிப்டிருக்கிறாய்..?
போதும்டா.. பசி இல்லை அல்லவா அதான்...
சரி வீட்டிற்குப் போனதும் சாப்பிடனும் சரியா?
ம்.. ஸ்யூர்.. ஸ்யூர்... நீ இப்போ டேபிளட் போடு என்று எடுத்து வந்துக் கொடுத்தாள். இதைப் போட்டுவிட்டு மறுபடியும் நட... பிறகு தூங்கு...
மறுபடியுமா.??
ஆமா அப்போ தானே சரியாகும்... என்றவாறு மறுபடியும் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.
வேலையை முடித்துவிட்டு.. முடிந்தது சிவ். நான் கிளம்புகிறேன். நீ தூங்கு... நன்றாக ஓய்வு எடு... இரவு உணவும் வைத்திருக்கிறேன்... மறக்காமல் எழுந்து சாப்பிட்டுவிடு...
என்னடி.. போகிறாயா?? என்று கவலையாய் கேட்டான்.
போய்தானே ஆகவேண்டும்.??
ஆமாம்.. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போகலாம் அல்லவா??
இல்லடா. இப்போ கிளம்பினா தான் ரெகுலர் டைம்கு வீட்டிற்கு போக முடியும்.. என்றைக்கு இருந்தாலும் நான் வரப் போகிற வீடு தானேடா... அதுவரைக்கும் இந்த நினைவுகள் போதும்.. எனக்கும் உன்னை விட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் போய்தான் ஆக வேண்டும். கூடிய சீக்கிரம் வந்துவிடுவேன் என்றுதான் நினைக்கின்றேன்.
நிஜமாவா???
சத்தியமா டா.... சொல்லும் போதே கனவினைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தாள்.
பை டா நாளைக்குப் பார்க்கலாம்...
ம்.. பைம்மா...
வேகமாக வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவள் தினமும் அலுவலகத்திலிருந்து வந்து இறங்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அவளுக்காகவே மதனாவும் காத்திருக்க, அவளது பேக்கினை வாங்கிக் கொண்டு..மதனா டயர்டா இருக்குடி... நான் வீட்டிற்கு சென்று கால் செய்கிறேன் பிறகு பேசிலாமே..
ம் சரிடி.. பார்த்து போ...முதலில் ரெஸ்ட் எடு... பிறகு கால் பண்ணு...
தாங்க்ஸ் டி... எப்பவும் என்னை புரிஞ்சுக்ற...
போதும்.. போதும்... பர்ஸ்ட் போடி.. என்றாள் சிரித்துக் கொண்டே..
வீட்டிற்குச் சென்றதும் தாயிடம் களைப்பாக இருப்பதாய் கூறி எதுவும் வேண்டாம் என்றும் கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.
சிவ் வீடு.. ... இதை.. இதைத் தானே நாம் கனவில் பார்த்தோம்... கனவில் அவன் அங்கு தானே என்னை முதல் முறையாக பார்த்தேன் என்று கூறினான்?? கனவில் பார்த்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் சிறிதளவு மாற்றங்கள் மட்டுமே... நானோ இன்று தானே முதல் முறையாக சிவ் வீட்டிற்குச் சென்றேன். பிறகு எப்படி கனவில் அந்த வீடு.....
வெகுவாய் குழம்பினாள்.