கூட்ட நெரிசலில் சப்பானியாக சாய்ந்து வந்த அந்த அரசு பேருந்து, பஸ்டாண்டை அடைந்து உஷ்ஷ்ஷ்... என கடைசி மூச்சுடன் அணைந்து போகவும், பண்டத்தை மொய்க்கும் ஈ போல மக்கள் கூட்டம் அதனை மொய்த்தது. காலி இருக்கைகளை நோக்கி படையெடுத்த அந்த கூட்டத்தின் நடுவே, அவனின் கண்கள் பேருந்திலிருந்தவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தன.
' இந்த பேருந்து தானா.. இது தான்..' அவன் கண்கள் ஒவ்வொரு ஆட்களையும் நோட்டமிட்டவாறே நகர்ந்து, ' எங்கே.. எங்கே.. அதோ.. அவளே தான்.. ' ஒரு பெண்ணிடம் தேடலை தொலைத்து நின்றது. வெள்ளை சுடிதார்.. அவன் முதலில் அவளை கண்ட பொது அணிந்த அதே நிறம். பின்ஜடை அவசரத்தில் அரை குறையாக நின்றிருந்தது. நெற்றியில் எப்போதும் போல நுண்ணிய கரும் பொட்டு. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் இறங்க, கடைசியில் அவளும் வந்தாள்.
இருபுறமும் தோழிகள் காவலுடன், இவனை நெருங்கிய அவள், தற்செயலாக கூட பார்த்து விட கூடாதென, நேர் எதிர் திசையில் தலையை திருப்பியவாறு நகன்றாள். அந்த நொடி அவனுக்கு இவ்வுலகமே அன்னியமாக பட்டது. தன்னை சூழ்ந்த அனைவரும் தீண்டாமல் நகர்வது போல இருந்தது.
இவள் தானா தன்னை யாரோ போல கடப்பது..
தன் பார்வைக்காக காத்திருந்த இவளா..
தன்னை காதலித்த இவளா..
காதலித்த.. இந்த வார்த்தை ஜீரணிக்க முடியாமல் போக, காதலிக்கும் என திருத்திக் கொண்டான்.
ஜனனினினி.. அவளை அழைத்தான்.. திரும்பவில்லை.. வேகமாக இவனை விட்டு விலகி சென்று கொண்டிருந்தாள். இன்னும் உரக்க அழைத்தான்.. ஜனனினினி......
இம்முறையும் திரும்பவில்லை.. கேட்டிருக்காதோ.. கூட்டத்தை கடந்து அவளை நெருங்கி மீண்டும் அழைத்தான்
"ஜனனி.. ஜனனி.. இம்முறை நிச்சயம் கேட்டிருக்க வேண்டும் .. அவள் தோழி திரும்பிவிட்டாள்.. இவள் கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.. அவள் முன் வழி மறித்து நின்றான்.
அவள் விழிகள் இன்னும் நிலம் கண்டவாறே இருந்தான..
" ஜனனி... " அவளை நோக்கி சிரம் தாழ்த்தி மெல்லிய குரலில், " ஜனனி.. என்னை பாரு.. என்ன நடந்துது.. என்கிட்டே பேசு.. "
" அவ பேச மாட்டா.. நீ போய்டு அர்ஜுன்.. " அவள் சிநேகிதி தான் பேசினாள்,
" நீ மூடிட்டு போய்டு.. உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல.. இது எங்க விஷயம்.. " அடக்கி வைத்திருந்த கோபம் வார்த்தைகளில் வெளிப்பட.. அதன் உஷ்ணம் தாங்காமல் உதடுகள் துடித்தன.
" நீ வாடி.. " இப்போது பேசினாள் ஜனனி, இவனை கண்டுகொள்ளாமல், தன் தோழியின் கைகளை இழுத்தவாறு இவனிடமிருந்து நகன்றாள். அதற்கு மேல் சினம் தாளவில்லை. நழுவிய அவள் கைகளை எட்டி பிடிக்க முயன்றான். வளையல் தான் சிக்கியது, கண்ணாடி வளையல்கள்... இவன் வேகத்தை தாளாமல் நொறுங்கின. அவளை கிழித்திருக்கும்.. இவனுக்கு வலித்தது.
" என்னம்மா.. பிரச்சனை.. யாரு இவன்.. " என்றது பெண்களுக்கு மட்டும் பாய்ந்து வரும் ஒரு நாப்பத்தைந்து வயது உதவிக்கரம்.
" தெரிஞ்சவங்க தான் .. நான் பாத்துக்கறேன் ." என்று உதவிக்கரத்தை வந்த பாதை அனுப்பியவள்,,
பின் இவனை நோக்கி, இவன் கண்ணை லாவகமாக தவிர்த்து..
" அர்ஜுன் உனக்கு என்ன வேணும்.. "
" என்ன வேணுமா.. என்ன நடக்குது.. " அவள் கையை விடுவித்தான். " என்ன ஆச்சு உனக்கு.. அவங்க சொல்றதெல்லாம் உண்மையா.. நீ.. நீ.. " வார்த்தைகள் வெளிவராமல் வதைக்கவே .. கைகளால் தொண்டையை பிடித்தான்.
" நீ.. என்ன தப்பா.. உன்ன.. அப்படி பண்ணுனேன்னு.. நீ சொல்லல தானே.. ப்ளிஸ் சொல்லு.. நீ.."
" உண்மை தான்.. நான் தான் சொன்னேன்.. வேறேதும் பேசாதீங்க.. என்ன மறந்திடுங்க.. "
அவள் விலகி நகலும் போது , உயிர் பிரிவது போல உணர்ந்தான். அவள் வார்த்தைகள் இவன் செவி விட்டு நகரவில்லை, மீண்டும் மீண்டும் ஒலித்து.. இவனை உருக்குலைத்துக் கொண்டிருந்தது. அனாதையாக தனித்து விடப்பட்டதை போல நிழலும் அண்ட மறுத்தது, துக்கம் தொண்டையை நெரித்தது. கண்கள் சூடாகின.. கண்ணீர் வெளிவர துடித்தது, கோவம் அதை தடுக்கவே அங்கிருந்து நகன்றான்.
காணும் ஒவ்வொருவரும் இவனை பார்த்து சிரிப்பதாக தோன்றியது. இவனை தவிர அனைவர் முகத்திலும் சந்தோசம்...
விறு விறுவென நகன்றான். தன் பைக்கை உதைத்து கிளப்பினான். கால்கள் கைகளின் செயல்பாடுகள் அன்னிச்சையாக மாறி போயின.
அவன் கட்டிய கோட்டைகள், ஜனனியுடன் சேர்த்த நினைவுகள் , கண்ட கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் தூள் தூளாகி போயின.. இதிலிருந்து அவனால் மீள முடியாது.. மீளவே முடியாது.. இந்த துக்கம் இவனை சும்மா விட போவதில்லை வாழ்க்கை முழுவதும் துரத்தும்.
துரோகம்.. குரோதம்.. இன்னும் எத்தனை வார்த்தைகள் தொடுத்தாலும் போதாது, அவள் இவனுக்கு இழைத்த கொடுமைக்கு.. அவளை வெறுப்பது தான் வழி.. வெறுக்க வேண்டும்..
" பார்த்து வண்டி ஓட்டுடா.. " இவன் பைக்கின் வேகத்தில் காலை இழக்க எத்தனித்தவன் குரல் இவன் செவியை அடையவே இல்லை.
வெறுத்தாலும் போதாது.. மறக்க வேண்டும்.. நெஞ்சம் வலித்தது. அமிலம் ஊற்றியது போல உடல் எங்கும் பரவியது வலி..
அவள் நினைவுகள் ஊறிப் போன உடலின் இடமெங்கும் சுட்டது வலி..
அவளை வெறுக்க வேண்டும்.. கண்ணீர் பொல பொலவென பெருகி.. இவன் செல்லும் வேகத்தில் பறந்து காற்றில் கலந்தது..
" பாம்ம்மம்ம்ம்ம்..... " கதறியது ஒரு மஞ்சள் நிற லாரி.
பைக்கை திருப்பினான், பாலத்தின் விளிம்பு தெரிந்தது, ப்ரேக்... என நினைப்பதற்குள் வண்டியின் முன் சக்கரம் பாலத்தில் மோத.. தூக்கி எறியப்பட்டான்.. பறந்தான்.. கீழே பாறை.. முட்புதர்..மீண்டும் பெரும் பாறை.. அம்மாமாமா.....
சட்டென உறக்கத்திலிருந்து துள்ளி எழுந்தான் அர்ஜுன்., அம்மாவென்ற அவன் அலறல் ஒலி லேசாக ஒரு முறை எதிரொலித்து அடங்கியது.
அதே கனவு.. சில வருடம் வராமல் ஒளிந்திருந்த அதே கனவு மீண்டும் எட்டி பார்த்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் , நேற்று நடந்தது போல அவன் மனதில் இன்றும் அப்படியே பதிந்திருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிக் கொண்டான், கண்ணாடியில் நீர் திவலைகள் அலங்கரித்த தன் முகத்தை பார்த்தான், ஏழு வருடங்களில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. பாதி முகத்தை மறைத்த மீசை தாடியை தவிர வேறேதும் மாறவில்லை.
நீண்ட புருவங்களுக்கு கீழே கரு விழிகளில் இன்னும் அந்த ஏமாற்றத்தின் எச்சங்கள் தெரிந்தன. இதழ்கள் சிகரெட்டின் தாக்கத்தில் லேசாக கருத்திருந்தாலும் இன்னும் செந்நிறத்தை இழக்கவில்லை. மார்பில் இடது பக்கத்தில் ஒரு தழும்பு, அந்த விபத்தின் விழுப்புண், கழுத்து வரை நீண்டிருந்தது. பார்க்க மனமின்றி டீசர்ட்டால் மறைத்துக் கொண்டான். வெளியே வந்து, ஜன்னல் திரையை நீக்கினான் வெண்ணிலவு சிரித்தது, நிலவொளிக்காக ஜன்னலை திறந்தான், அழையா விருந்தாளியாக பனிக் காற்றும் புகுந்து கொண்டது. பிரிட்ஜில் இருந்த ஸ்காட்சால் பனிக்கட்டிகளை குளிப்பாட்டி கண்ணாடி க்ளாசில் எடுத்துக் கொண்டு, சன்னலருகே அமர்ந்தான், குளிருக்கு போர்வையாக சிகரெட்டை எடுத்து லைட்டர் நெருப்பால் அக்னி முத்தமிட்டு இதழ்களில் செலுத்தினான்
( குடி மற்றும் புகை பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது.. J )
வெண்ணிலவும் குளிர் காற்றும் குருதியில் கலந்த ஸ்காட்ச் நிக்கோட்டின் கூட்டணியில் சேர்ந்து கொள்ள, வானில் நிலா தண்ணீர் பிம்பமாக நெளிந்தது, நினைவலைகள் பின்னோக்கி படை எடுத்தன, பத்து வருடங்களுக்கு முன் அவள் இவனை கவர்ந்த நொடிகளுக்கு , இவன் அவள் மனதை களவாடிய பொழுதுகளுக்குள் நுழைந்தன. தன்னை சுற்றிய தனி அறை கூட்டமிக்க பேருந்தாக மாறிப் போனது.. பக்கத்திலிருந்த ஜன்னல் வழியே பச்சை பசேல் வயல் வெளிகள் தெரிந்தன, நம்மூர் ரோடுகளின் குலுக்கம் உணர முடிந்தது,
அர்ஜுனின் வாழ்வில் ஜனனியின் தாக்கம் எங்கே தொடங்கியதோ அங்கேயே நாமும் தொடர்வோம் அடுத்த அத்தியாயத்தில்.
தொடரும்.