ஓய்....
ம்.....
ஓய்ய்....
என்னடி....
எவ்வளவு நேரம்தான் இப்படியே பார்க்கிறது...?
ஏன்... பார்க்க வேண்டாமா... சரி நீ வேண்டுமானால் பார்க்காமல் திரும்பிக்கொள்... நான் மட்டும் பார்த்துக் கொள்கிறேன்...
அப்படி இல்லை சிவ்... நீ இப்படியே எவ்வளவு நேரம் நிற்பாய்? கால் வலிக்கும்... அத்தோடு நீ உன் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் எப்படி தூங்குவாய்? எவ்வாறு காலை அலுவலகம் வந்து வேலையைச் செய்வாய்??
அதைப் பற்றி நீ ஏன்ம்மா யோசிக்கின்றாய்.... நான் பார்த்துக் கொள்கின்றேன் விடு...
இல்லை நீ முதலில் வீட்டிற்குச் செல்...
நீ எப்பொழுது காலடி எடுத்து வைக்கின்றாயோ.. அப்பொழுது தான் அது வீடாகும் மட்சியா.... அதுவரை அது எனக்கு வீடல்ல... என்னை நானே அடைத்து வைத்துக் கொள்ளும் சிறை...
அப்படியா.... சரி.... உன் தனிச்சிறை வெகு விரைவில் மாறட்டும்..... ஆனால் அதன் பிறகும் நீ சிறையில் தானே இருப்பாய்...
என்ன....? ஓ... நீ அதைச் சொல்கிறாயா...? உன் சிறை என்றால் நான் ஆயுள் முழுவதும் ஆனந்தமாய் இருப்பேனே...
அப்படியா.... எல்லா ஆண்களும் சொல்வது தான் இது... ஆனால் திருமணத்திற்குப் பிறகு அப்படியே மாற்றிக் கூறும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கின்றேன்...
ஏய் லூசு இல்லைடி... நான் உண்மையாகத் தான் சொல்கின்றேன். நம் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் இருப்பது உண்மையானால் உனக்கும் நிச்சயம் இதுபோலத் தான் இருக்கும்.
அவன் கூறும்பொழுது தான் அவளும் அதை உணர்ந்தாள்... அவனிடம் சிறைபடுவதென்றால் ஆயுள் கைதியாகவும் தயார் என்று அவள் மனதும் உரைத்தது.
காதலைச் சொன்ன முதல் நாளே இவ்வளவு பேச வேண்டுமா... முதலில் நீ வீட்டிற்கு கிளம்பு என்றாள்...
ஏய் பேச்சினை மாற்றாதே....
கிளம்புடா... எனக்கு தூக்கம் வருகிறது என்றாள் பொய்யாய்...
சரிபோ... நான் போகிறேன்.... காலையில் பார்க்கலாம்... பை...
டாடா... டா
ம்... டாடா... டி..
வெகு நேரமாய் உறங்காமல் படுக்கையில் புரண்டாள். சிவ் மீது எனக்கிருக்கும் காதல் அளவில்லாமல் இருக்க.. அவன் மீது கோபம் ஏன்?? அந்தக் கோபத்தின் காரணம் என்ன?? அடிக்கடி என் கண்முன் தோன்றும் காட்சிகள் ஏன்... அது உண்மையில் நடந்துவிடுமோ?? அவ்வாறு ஏன் நடக்கப் போகிறது.. தந்தை மிகவும் நல்லவர்... அத்தோடு நான் சிவ்வை காதலிப்பதாகக் கூறினாலும் தடுப்பவரும் கிடையாது... பிறகு எப்படி அவர்களுக்கு இடையே சண்டை நடக்கும்? கேள்விக்கு மேல் கேள்வியாய் மனம் அடுக்கிக் கொண்டே போனது... மூளையோ விடை தெரியாமல் திணறியது....
சூரியன் தன் ஒளிக் கற்றையால் தீண்டி, நான் வந்துவிட்டேன் இன்னும்மென்ன தூக்கம் என்பதைப் போல அவளைச் சுட்டது.. எப்பொழுது தூங்கினோம் என்பதே தெரியாமல் அதற்குள் விடிந்துவிட்டாதா என்று சலித்துக் கொண்டாள்.
மட்சியா.... என்ன இன்று இவள் இவ்வளவு நேரம் தூங்குகிறாள்? அலுவலகத்திற்கு விடுப்பேனும் சொல்லிவிட்டாளா? மட்சியா... என உரக்க அழைத்தார் அவர் அம்மா.
ம்.. இதோ வரேன்மா...
என்னம்மா... இவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறாய்?? அதுவும் நேற்று மாலையிலும் தூங்கினாயே... உடம்பிற்கு ஏதும் சரியில்லையா??
அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா... இரவு தூங்குவதற்கு லேட் ஆகிவிட்டது. மாலை தூங்கியதாலோ என்னவோ இரவு சீக்கிரம் தூக்கம் வரவில்லை. அதனால் தான்...
சரிடா... நீ சிக்கிரம் அலுவலகம் கிளம்பு நான் வந்து பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றேன்...
ம் சரிப்பா.... அரைமணி நேரத்தில் கிளம்பிவிடுகிறேன்.
முதலில் இந்த டீயை குடித்துவிட்டு செல்... என்று அவள் தாயார் கூறினார்.
அம்மா.. காலை உணவையும் பாக்ஸில் வைத்துவிடு. நான் அலுவலகம் சென்று சாப்பிட்டுக் கொள்கிறேன்.
சரிம்மா...
தேநீரை குடித்து முடித்து, நான் கிளம்பிவிட்டு வருகிறேன் என்று அறையை நோக்கி ஓடினாள்.
சொன்னதுபோல் அரைமணிக்கு முன்னதாகவே வந்தாள். எப்பொழுதும் மட்சியா அதிகம் ஒப்பனைகள் செய்ய மாட்டாள். அவள் சாதாரணமாய் பார்ப்பதற்கே மிக அழகாகத் தெரிவதால் ஒப்பனைகள் மிகையாகத் தெரியுமோ என்று மிகவும் சிம்பிளாகவே கிளம்புவாள்.
இன்றும் அப்படித்தான். வெகு சாதாரணமாய் கிளம்பியும் கூட அழகு தேவதையாய்த் தெரிந்தாள்.