ஐ லவ் யூ
சத்தம் வந்த திசையை நோக்கினாள் மட்சியா.
சிவ்னேஷ்...
கைகளை கட்டிக் கொண்டு சுவர் மீது ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு நின்றிருந்தான் சிவ்னேஷ் என்ற அந்த இளைஞன். மட்சியா.... பேசாமல் மட்டும் போகாதே.... பதில் கூறு....
எனக்கு வேலை இருக்கிறது... நான் செல்ல வேண்டும்...
வேலை தானே... தாராளமாக செய். ஆனால் பதிலைக் கூறிவிட்டுச் செல்...
இல்லை என்றால் என்ன செய்வாய் என்றாள் கொஞ்சம் திமிராகவும், கொஞ்சம் கிண்டலாகவும்.
நீ லவ் யு டூ னு சொல்கிற வரை நான் கூறிக் கொண்டே இருப்பேன்... உன் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்.... என்று கண்ணடித்தான்.
போடா என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மட்சியா.
அவள் கூறிய அந்த "போடா"வில் அவனுடைய காதல் அவனுக்கு கிடைத்துவிட்டதைப் போல் ஆனந்தமடைந்தான்.
ஏன்டி மட்சியா...
ம் சொல்லு மதனா.
நம்ம சிவ்னேஷ்ம் நாம கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே உன் காதலைப் பெற்றே தீருவேன் என்று இருக்கிறான். நீயோ... அவனை சில நேரங்களில் திட்டுகிறாய், பல நேரங்களில் அவன் பேசுவதை அமைதியாய் ரசிக்கின்றாய்... இதற்கு என்ன தான்டி பதில்.. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறு, அப்படி இல்லையென்றால் உன் சம்மதத்தைக் கூறு... ஏன்டி அலைய வைக்கின்றாய்...?
ம்.... சொல்லலாம்.. சொல்லலாம்...
என்னடி இழுக்கின்றாய்... நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லவா...
மதனா.. உன் வேலையை மட்டும் பார்.... என்று ஒரு நிமிடத்தில் அவளின் சாந்தமான முகம் வெகு கோபமாய் மறியதைக் கண்டு பயந்தே போனாள் மதனா..
ஏய் மட்சியா.. என்னாச்சுடி நான் ஏதோ விளையாட்டாக கூறியதற்குப் போயி இப்படி....
ஸா..ஸாரி மதனா. அது.. ஏதோ சடெர்னா கோபம்.. ஸ..ஸாரி டி. ரியலி சாரி. அவன்கிட்ட நானே பேசிக் கொள்கிறேன்.. இனிமேல் இதைப் பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ்..
ம் சரிடி. பரவாயில்லை. நீ டென்சன் ஆகாதே. முதலில் வேலையை முடித்துவிட்டு நேரத்தில் வீட்டிற்கு கிளம்புவோம்.
இருவரும் வேலையில் மும்பரமாகினார்கள்.
மட்சியா..... பட்டம் முடித்து ஒரு தனியார் அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் பெண். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவள் மட்சியா. அவளின் விருப்பத்திற்காக மட்டுமே வேலைக்கு வருகிறாள். கருகருவென அடர்த்தியான நீளமான கூந்தல், வட்டமான முகம் அதில் தண்ணீர் இல்லாமல் வாழக்கூடிய அதிசய மீன்களாய் இரு கண்கள். ரோஜா இதழ்களை விட மென்மையான அவளது இதழ்கள், ஆசையாய் கிள்ளினால் கூட இரத்தமாய் சிவந்துவிடும் கன்னங்கள் என கதைகளில் சொல்லப்படும் தேவதையையே மகளாகப் பெற்றிருந்தனர் அவளின் பெற்றோர். ஒரே பெண் என்பதால் செல்லமாய் வளர்த்தனர். செல்லங்கொடுத்து வளர்த்தால் பிள்ளைகள் தலைக்கு மேல் ஏறி ஆடுவார்கள் என்று கூறுபவர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு அடக்கமும், அன்பான குணமும் கொண்டிருந்தாள் மட்சியா. பெயருக்கு ஏற்றார் போல் எப்பொழுதும் தெளிவான சிந்தனையையும், மனதினை ஒருநிலைப்படுத்தியும் வைத்திருப்பாள். மட்சியாவின் தந்தை ஒரு தனியார் அலுவலகத்தின் மேலாளராக பணிபுரிகின்றார். அம்மா வீட்டின் மேலாளராக இருந்து, மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நிர்வாகம் செய்து வருகிறார். சொந்தங்கள் என்று கூறிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை என்பதால் மட்சியிவிற்கு தூரத்து உறவில் கூட சகோதர, சகோதரிகள் கிடைக்கவில்லை. ஆகையால் பக்கத்து வீட்டு வாண்டுகளிடமும் அவளது நட்பு வட்டாரம் அதிகமாய் வளர்ந்திருந்தது. அலுவலகம் செல்வது, வீட்டில் இருக்கும் பொழுது குட்டிக் குழந்தைகளுடன் விளையாடுவது, தோழிகளுடன் போனில் உரையாடுவது, சமைப்பது என எப்பொழுதும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வாள். தனிமையை அவள் உணர்ந்ததே இல்லை. அந்த அளவிற்கு அவள் பெற்றோரும் விடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்சியாவுடன் வெளியில் சென்று நேரத்தைக் குதூகலமாய் செலவிடுவார்கள். மட்சியாவின் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது.
சிவ்னேஷின் வாழ்க்கை அதற்கு நேர் மாறாய் இருந்தது. அவன் பெரும்பாலும் தனிமையை நாடினான். நட்பு வட்டாரங்கள் வெளித் தொடர்பில் மட்டுமே இருந்தன. எதையாவது யோசிப்பது, நினைப்பதை வரைவது என அமைதியாய் நாட்களை கடத்தினான். பெற்றோர்கள் பெயரளவில் மட்டுமே.. கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழும் தாய், தந்தை நடுவில் சிறு வயதிலேயே சிக்கித் தவித்ததால் உறவுகள் மீதும் உடன்பாடின்றி வாழ்ந்தான். ஆனால் மட்சியாவைப் பார்த்த நொடியில் அவனது இந்த எண்ணம் மாறிப் போகுமென்று அவன் அப்போதே அறியவில்லை.