கதிரும், சந்தனாவும் சாப்பிட்டு முடிப்பதற்குள் சஞ்சீவும், ஜெபாவும் திரும்பி வந்திருந்தனர். தன்னுடைய கைகளில் ஒரு பெரிய கேக் பெட்டியுடன் வந்து அவளது முன்பிருந்த டேபிளில் அதை வைத்தவன் சந்தனாவிடம்,
"மிஸ் சந்தனா.... ஸாரி! உங்க நிச்சயதார்த்தம் பத்தி உங்களோட எக்ஸ்பெக்டேஷன் என்னன்னு நான் கேட்டுருக்கணும்; அத செய்யாம விட்டது என் தப்பு!
கடையில ரெடியா இருந்த கேக்க உங்களுக்காக அப்டியே வாங்கிட்டு வந்துட்டோம். ப்ளேவர் மட்டும் நீங்க நெனச்சது மாதிரி இருக்குமான்னு தெரியல! அத கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க!" என்று சொன்னான். அவனது பேச்சைக் கேட்டவள் வியந்த குரலில்,
"நெஜமாவே ரெண்டு பேரும் போயிட்டு கேக் வாங்கிட்டு வந்தீங்களா? தே.... தேங்க் யூ சோ மச் சஞ்சீவ்! இவங்கிட்ட நான் சும்மா கம்ப்ளைண்ட் பண்ணுனேன் தான்.... ஆனா திடீர்னு கேக் எல்லாம்..... இத சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணல!" என்றாள் உற்சாகம் குறையாமல்.
"ஆமா....... நீ குடுக்குற இம்சைக்கு மதிப் பாப்பாங்களே பரவாயில்ல!
பலூனு வேணும், கேக்கு வேணும்னு கைய கால ஒதச்சு அழுதா, ஒம்புலம்பல கேக்குறவன் இதல்லாம் வாங்கிட்டுத் தான் வருவான்! எப்டி என் அஸிஸ்டெண்ட்...... சும்மா லோட் பண்ணி வச்ச கன் மாதிரி தெறிக்குறான் பாத்தியா? இந்தா.... உங்க தம்பியாரு கொண்டு வந்துருக்குற பலூனயும் கையில வாங்கிக்க..... இப்ப சந்தோஷமா?" என்று கதிர் கேட்க சந்தனா அவனிடம் உச்சுக்கொட்டி விட்டு,
"இல்ல..... இன்னும் எதோ குறையுது!" என்றாள் உதடுபிதுக்கி.
"டேய் சேகர்..... இப்டி எப்ப பாத்தாலும் நம்ம எல்லாரையும் ஒரு பதட்டத்துலயே வச்சுருந்தான்னா அவளுக்குத் தான் நல்லதில்ல பாத்துக்க! ஒருநேரம் இல்லாட்டி ஒருநேரம் கடுப்புல இவள ஓங்கி அப்பிருவேன். அப்புறம் உங்க அக்காவுக்கு ஏத்துக்கிட்டு நீ எங்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது! சொல்லி வைடா இவகிட்ட!" என்றான் கதிர்.
"பாரு....பாரு! இதத்தான் சொன்னேன். ஒரு எக்ஸைட்மெண்ட் இருக்கா இந்த இடத்துல? எம்மேல கோபப்பட்டு ஜெபாட்ட
மூஞ்சிய காட்டிக்கிட்டு இருக்க!" என்று உதடுபிதுக்கியவளின் முகத்தைப் பார்த்தவன் ஆயாசமாக சேரில் அமர்ந்து விட்டான்.
"யேய் என்னடா ஆச்சு? நிக்க முடியாம பொத்துன்னு விழுற?
டையர்டா இருக்கா?" என்று கேட்டு அவனுடைய நெற்றியில் கை வைத்தவளிடம்,
"அறிவுகெட்டவளே.....
கொலப்பசியில இருக்கேன்டீ! மனுஷன சோறு திங்க உடுறியா ஒழுங்கா.....?" என்று களைத்த குரலில் கேட்டான்.
"ஏ சந்து.... இந்தப் பையனும் இன்னும் சாப்டலமா! கதிர்ணாவும், சஞ்சீவும் சாப்ட்டு முடிக்கட்டும்! அதுக்கப்பறம் நம்ம செலிபரேஷன்லாம் வச்சுக்கலாம்! பசிச்சா நீயும் ஏதாவது சாப்ட்டுக்க!" என்றான் ஜெபா.
"இல்ல.... இதெல்லாம் பாத்தவுடனே எனக்கு சுத்தமா பசி போயிடுச்சு! எனக்கு ஒரு ஜுஸ் மட்டும் சொல்லிடுடா ஜெபா. கதிர், சஞ்சீவ் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஸாரி..... நீங்க பொறுமையா சாப்ட்டு வாங்க! அதுக்குள்ள நாங்க எல்லாம் அரேன்ஜ் பண்ணி வைக்கிறோம்!" என்றவள் ஜெபாவிடம்,
"டேய்.... இன்னிக்கு இந்த ரெஸ்டாரெண்ட்ல ரொம்ப கூட்டம் இல்ல.... ஆனாலும் நம்ம குட்டியா பங்ஷன் மாதிரி கேக் கட்டிங்லாம் பண்றதுக்கு தனியா பெர்மிஷன் எதுவும் வாங்கணுமா?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு சந்து. நம்ம ஜனா ஸார் எங்க கிட்ட ப்ளான் கேட்டுட்டு இந்த ரெஸ்டாரெண்ட் மேனேஜர்ட்ட பேசிட்டாங்க. ரொம்ப ஆள் வரலையின்னா இந்த ரெஸ்டாரெண்ட் பார்ட்டி ஹாலாவும் மாறிடும் போலிருக்கு! ஸோ நமக்கு ஒரு கஷ்டமும் இல்ல....
இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நாம இந்த இடத்துக்கு எந்த தொந்தரவும் குடுக்காம,
இங்க என்ன வேணும்னாலும் பண்ணலாம். நீ உன் பேவரைட் ஜோஸஃபின இங்க வரச்சொல்லி
கூப்டலாமே?" என்று கேட்டவனிடம் கண்கள் மலர்ந்து,
"ஹே....சூப்பர் ஐடியா குடுத்தடா ஜெபா!" என்று சொல்லி விட்டு அடுத்த பத்து நிமிடங்கள் அலைபேசியில் பிஸியாக பேசிக் கொண்டிருந்தாள் சந்தனா.
இதற்கிடையில் இரண்டு பரிதாபகரமான ஜீவன்கள் எங்களுக்கு சோறு தான் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி அவர்களுடைய வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டிருந்தனர்.
"பாப்பா.... நம்ம ஆளுங்கள்ல கதிரும், சஞ்சீவ் தம்பியும் மட்டுந்தான சாப்ட்டுட்டு இருக்குறாங்க? நாம ஏன் இன்னும் வீட்டுக்கு கெளம்பாம இருக்கோம்? இங்க என்னடா பாப்பா பண்ணப் போறீங்க?" என்று கேட்ட பாகேஸ்வரியிடம்,
"அது ஒண்ணுமில்ல பாகேஸ் ஆன்ட்டி.... கதிருக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்துடுச்சுல்ல? அதான் இங்க ஒரு சின்ன கொண்டாட்டம்! பலூன் கட்டி, கேக் வெட்டி கொண்டாடப் போறோம்! உங்களுக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகணுமா? எப்டியும் அங்கிள் இப்ப வீட்ல இருக்கப் போறதில்ல! தெளிஞ்சு ஒக்காந்து எங்கையாவது ரவுண்ட்ஸ் அடிக்க கிளம்பியிருப்பார்!" என்று சொன்னாள் சந்தனா.
தனது வருங்கால மருமகளின் பேச்சைக் கேட்ட பாகேஸ்வரிக்கு ஒரு வருத்த முறுவல் தான் கிளம்பியது.
"கதிரப்பா அவரு வர்ற நேரம் வீட்டுக்கு வந்துக்கட்டும் கண்ணு. நீங்க போயி உங்க வேலையப் பாருங்க; கதிரு மொகம் அசதியா தெரியுற மாதிரியிருந்துச்சு; கேக்கு வெட்டி நல்லா கொண்டாடுங்க! புள்ள மொகத்துல தானா தெளுச்சி வந்துடும்!" என்று சொன்ன பாகேஸ்வரி அதற்கு மேல் சந்தனாவிடம் வேறு கேள்வி எதுவும் கேட்காமல் கல்பனாவிடம் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தார்.
ஜனார்த்தனன் இரண்டு குழந்தைகளையும் கை கழுவ கூட்டிச் சென்றிருக்க, ஆலெனும், சுமலதாவும் பாகேஸ்வரியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.
"என்ன சுமாம்மா..... சார் உங்கள சமாதானம் பண்ணிட்டாங்களா?" என்று கேட்ட பாகேஸ்வரியிடம்,
"ம்ம்ம்! அதெல்லாம் நல்லாவே சமாதானம் ஆகிட்டோம் பாகேஸ்வரி.... பாருங்க, நாங்க ரெண்டு பேரும் ஜாலியா சிரிச்சுப் பேசிட்டு தான இருக்கோம்!" என்று கேட்டார் சுமலதா.
கை, வாய் அனைத்தையும் கழுவி விட்டு வந்த பிள்ளைகள் இருவரும்
சந்தனாவின் கையில் இருந்த பலூன்களைப் பார்த்து விட்டு,
"ஐ.... எங்களுக்கு பலூன்!" என்று கேட்க இருவரிடமும் ஆளாளுக்கு இரண்டு பலூன்களை கையில் கொடுத்த சந்தனா, தானும் கையில் நிறைய பலூன்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
கதிரும், சஞ்சீவும் சாப்பாட்டை முடித்து வருவதற்குள் ஜெபாவும், சந்தனாவும் டேபிளை தயார்
செய்து டேபிளின் நான்கு மூலைகளிலும் கலர் கலர் பலூன்களை கட்டியிருந்தனர்.
"ஜெபா.... பலூன எல்லாம் நீங்க ரெண்டு பேரும் தான் ஊதுனீங்களாடா?" என்று கேட்ட தன்னுடைய அக்காவை முறைத்தவன்,
"அப்புறம் அதுக்கு தனியா வள்ளியூர்ல இருந்தா ஆளுங்க வருவாங்க? நாங்க ரெண்டு பேருந்தான் பலூனையும் வாங்கி கட்டி வச்சுக்கிட்டு கேக்கையும் வாங்கிட்டு வந்தோம்.... உனக்காக நான் இத செய்றது ஓகே தான் சந்து; பட் நம்ம தலைவன் இருக்கான் பாரு..... கேக் எங்க வாங்கணும், அத கார்ல எப்டி பத்திரமா வச்சுட்டு உட்காரணும்னு சின்ன சின்ன விஷயத்துல கூட
முழுசா அவனோட 100 பர்சென்ட்ட குடுக்குறான் தெரியுமா? கதிர்ணாவுக்கு ஒரு தம்பி இருந்துருந்தான்னா, அவங்கூட இப்டி அவருக்காக ஓடியிருப்பானான்னு தெரியல சந்து!" என்று சந்தனாவிடம் சொன்னான் ஜெபசேகரன்.
"சில விஷயத்துல நம்ம ரேஷன் அன்லக்கியா இருந்தாலும், கல்பனா, சஞ்சீவ் மாதிரி ரிலேஷன்ஸ் கிடைச்சதுல அவன் ரொம்ப லக்கிடா! பாவம் ரெண்டு பேரும் ரொம்ப பசியில இருந்தாங்க போலிருக்கு..... இப்பதான் அவங்க மொகத்துல ஒரு ப்ரைட்னெஸே தெரியுது!" என்றாள் சந்தனா.
அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு தேவையான அனைத்து கொண்டாட்டங்களுடன் பாகேஸ்வரி மற்றும் சந்தனாவின் ஸ்டாஃப்ஸ் பதினைந்து பேர் அங்கு வந்துவிட உற்சாகங்களுக்கு பஞ்சமில்லாமல் கதிரும் சந்தனாவும் தங்களுடைய நிச்சயதார்த்த கேக்கை வெட்டினர்.
ஜோஸஃபினும் மற்ற இளம் பெண்களும் சந்தனாவை சுற்றி நின்று கொண்டு,
"ஹலமிதிஹபிபூ.....
ஹலமிதிஹபி வந்தாளே.....!" என்று பாட ஆரம்பித்திருக்க,
"யே....யே...யேய்! பாட்டெல்லாம் அப்புறம்....! அதுவும் நாந்தான் பாடுவேன்!" என்று ஓடி வந்து அவர்களுடைய பாட்டை நிறுத்தியிருந்தான் ஜெபா.
"என்னங்க......?" என்று அழைத்து அவனை பக்கவாட்டில் சுரண்டினாள் சந்தனா.
"ஆத்தாடி.... என்னங்கன்னு கூப்டுறாளே? இப்ப என்ன சூனியத்த சொருவப் போறான்னு தெரியலயே?" என்று
நினைத்தவன் தைரியத்துக்காக
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அவளிடம்,
"யாரங்க கூப்டீங்க.....? என்னையாவங்க? உண்ட மயக்கமா, நீங்க என்னங்கன்னு கூப்ட மயக்கமான்னு தெரியலங்க..... ஆனா ஒரு மாதிரி மயக்கம் மயக்கமா வருதுங்க!" என்றான் உதட்டில் உறைந்த சிரிப்புடன்.
"ச்சீ போடா..... ஆசையா இருக்குன்னு உன்னைய ஒருவாட்டி அப்டி கூப்டா நீ கிண்டல் பண்ற...! இப்ப ஒருக்க நம்ம ரிங் எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாமா?" என்று அவனிடம் கேட்டதும் கதிரின் முகம் சட்டென மாறியது.
"எ....தே.... இப்ப ஒருக்க நம்ம ரிங் எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாமான்னு
எவ்வளவு அசால்டா கேக்குறடீ? இந்த மோதிரத்த உங்கையில போட்டதுல இருந்து நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடீன்னு உள்ளுக்குள்ள பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கு!"
"உனக்கு இது எப்டியோ தெரியாது லஷ்மி! எனக்கு ஒங்கைய புடிச்சு இன்னிக்கு மோதிரம் போட்டது பதினாலு வருஷமா மனசுக்குள்ள வச்சுருந்த ஆச! கை அரிக்குது கழட்டுனேன்; குளிக்குறப்ப கழட்டுனேன்னு ஏதாவது காரணத்த சொல்லி உங்கையில மாட்டுன மோதிரத்த தொட்டுப் பாரு. அப்புறம் பேசிக்குறேன்!" என்று அவளிடம் சொன்னவனது கோபத்தை
வெட்கம் கடந்த காதலுடன் பார்த்து ரசித்துக் கொண்டு நின்றிருந்தாள் சந்தனா.
மகளின் அந்த மயக்கத்தை ஆலெனும், சுமலதாவும் பார்த்து திருப்தியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
"மா பங்காரு கூத்தூரு எந்த்த அந்தங்கா உந்தி.... மீரு சூஸாரா ஆலென்?" என்று கேட்ட தன் மனைவியின் தலையில் செல்லமாக முட்டியவர்,
"இதத்தான்..... நம்ம பொண்ணு முகம் முழுக்க சிரிப்போட எவ்ளோ அழகா இருக்காங்குற விஷயத்த தான் உனக்கு காலையில இருந்து புரிய வைக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன் சுமா! இப்ப நீயே பாத்துட்ட..... கதிரும் சந்து மோளும் சந்தோஷமா இருக்காங்க, இருப்பாங்கடா..... ஆனாலும் நான் பேசுன பேச்சுக்கு இன்னோரு தடவ உங்கிட்ட ஸாரி கேக்கட்டுமா?" என்று கேட்ட தன்னுடைய கணவனை முறைத்த சுமலதா,
"எத சொன்னா நான் ஷாக் ஆகி நிப்பேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்! கதிரோட ஸ்டேட்டஸ், அவனோட அப்பா இந்த மாதிரி நான் உங்க கூட ஆர்க்யூ பண்ணுற எந்த டாபிக்கையும் எடுக்காம, நேர வந்து என்னைய அட்டாக் பண்ணிட்டு இப்ப ஸாரி கேக்குறாராம் ஸாரி.....! பட் நிஜமாவே கதிரோட ட்ராயிங்க் இன்ஸ்டிடியூட்ல நீங்க இன்சார்ஜா இருக்கப் போறீங்களா ஆலென்? அதுல உங்களுக்கு ஹாப்பி தானா?
இவ்ளோ வருஷத்துல நான் உங்க வேலையப் பத்தி ஒருவார்த்த கூட கேட்டதில்ல! பட் உங்களோட இந்த முடிவுலயாவது என்ன ஏதுன்னு கேட்டுக்க நினைக்குறேன்!" என்று ஆலெனிடம் சொன்னார் சுமலதா.
சிறுநகை மலரும்!