"இங்க பாரு லஷ்மி; உங்கம்மாவோட இயல்பு ஒங்க எல்லோரோட நிம்மதியையும் கெடுக்குதுன்னு தெரியுதுல்லம்மா? ஏன் நீங்க எல்லாரும் சேர்ந்து உக்காந்து அவங்ககிட்ட இதெல்லாம் புரிய வைக்க முயற்சி பண்ணக்கூடாது?"
"அவங்க கேக்குற நேரத்துல கேக்குறதெல்லாம் குடுக்குறது ரொம்ப தப்பான விஷயம்மா! ஆலென் ஸாருக்கு கூட இது ஏன் புரிய மாட்டேங்குது?" என்று அவளிடம் மெதுவான குரலில் கேட்டவனை ஸோஃபாவிலிருந்து முகம் தூக்கிப் பார்த்து விட்டு,
"இங்க வா மேன்.....!" என்று கட்டளைக்குரலில் அழைத்தாள் அந்த அடங்காப்பிடாரி.
"நீ வான்னு கூப்டா நான் ஒடனே ஒங்கிட்ட ஓடி வரணுமா? அதெல்லாம் இப்ப வரமுடியாது போடீ! உள்ள வந்ததும் என்னமோ நாந்தான் உந்தம்பிக்கு கஞ்சா வாங்கிக் குடுத்த மாதிரியில்ல அந்தக் கத்து கத்துன..... இப்ப எதுக்கு என்னை பக்கத்துல கூப்டுற?" என்று அவளிடம் கேட்டு முனைத்துக் கொண்டான் கதிர்.
"நீ இன்னமும் என்னோட ஸ்லேவ் தான்! முன்னாடியெல்லாம் என்னை நீ இப்டி ரொம்ப உரிமையா சந்தானலஷ்மின்னோ, லஷ்மின்னோ கூப்ட மாட்ட! எப்டி கூப்டுவன்னு தான் இப்ப
வரைக்கும் நியாபகம் இருக்குதுல்ல உனக்கு?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்,
"ம்ம்ம்..... நல்லா! இப்ப ஒருக்க அத செஞ்சு காட்டணுமா ஒனக்கு?" என்று கேட்டு தன் முதுகை வளைத்து குனியப் போனவனை அவசரமாக கையாட்டி தடுத்தவள், அவனை தன் அருகே வருமாறு கண்ஜாடையால் அழைத்தாள்.
கட்டளைக் குரலுக்குக் கட்டுப்படாமல் சிலிர்த்துக் கொண்டவன் இப்போது அவள் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு அவளருகில் சென்றான்.
தன்னுடைய துண்டை எடுத்து ஒரு ஓரத்தில் போட்டவன், ஸோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து கொள்ள அவனுடைய அருகில் வந்து ஸோபாவில் அமர்ந்து கொண்டு, அவனது இடையைச் சுற்றி தன் கைகளைக் கோர்த்து அவனது தொடையில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள் சந்தனா.
மிக நீண்ட அவளது பெருமூச்சை தன்னுடைய தொடையில் உணர்ந்த கதிர் அவளுடைய ஸ்பரிசத்தால் சிலிர்த்துப் போனான். சந்தனாவின் மூச்சுக் காற்று பட்டு அவன் தொடையில் இருந்த மொத்த பூனை முடிகளும் தொன்னூறு டிகிரியில் சிலிர்த்துக் கொண்டு நின்றன.
அகலிகையின் சாபம் ராமரின் கால் தூசி பட்டு நீங்கியது போல, கதிரின் கோபம் சந்தனாவின் மூச்சுக்காற்று பட்டு கரைந்து கொண்டிருந்தது.
நேரங்கிடைக்கும் போதெல்லாம் இவளை கிழித்து தோரணம் தொங்க விட்டு தன்னுடைய வாய், இப்போது ஏதோ ஒரு ஆறுதலைத் தேடி தன்னுடைய தொடையில் படுத்திருக்கும் போது ஏன் பேசும் சக்தியையே இழந்து விட்டது போல் வேலை செய்ய மறுக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தான் கதிர்.
இத்தனை வருடங்களாக அவளுக்காக என கட்டிக்காத்து வந்த பிரம்மச்சரியம் அவளிடம் அன்று போல் இன்றும் ஒன்று, இரண்டு, மூன்று என உதட்டு முத்தங்களை வாங்கு என்று அவனுக்கு கட்டளையிட்டது.
"வாங்கலாம்; வாங்கலாம்..... மூணு இல்ல முப்பது கிஸ் கூட வாங்கலாம்; அதுக்கு என்னோட சூனிய பொம்ம நல்ல மூடுல இருந்து பேச்சுக்கு பேச்சு எங்கூட சண்ட பிடிச்சுட்டு இருக்கணும்; இப்ப அவ அப்டியில்ல! அதுனால முத்தங்கித்தமெல்லாம் கெடையாது; நீ கெளம்பு முதல்ல!" என்று அவனது உள்மனதிற்கு புத்தியுரைத்து விட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.
அவளுடைய முகச் சுணங்கலை தாங்கிக் கொள்ள முடியாதவன்,
இவ்வளவு மன அழுத்தத்தில் இருப்பவளை அன்று போல் உதட்டால் தீண்ட முடியாது எனவே விரலால் தீண்டலாம் என்று நினைத்து அவள் முகமென்னும் கேன்வாஸ் பேப்பரில் தன்னுடைய விரல் எனும் தூரிகை கொண்டு சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தான்.
சுவர் ஓவியம் வரைய தன்னுடைய ஒருபக்க கன்னத்தை அவனிடம் வாடகைக்கு கொடுத்து விட்டவள் போல் சந்தனாவும் கதிரின் கைவிரல் தன் கன்னத்தில் செய்த மென்மையான பணிவிடைகளை பிரியத்துடன் ஏற்றுக் கொண்டிருந்தாள்.
தங்கள் இருவருக்கும் இடையில் என்ன மனஸ்தாபங்கள் இருந்தாலும், அவளது முந்தைய நடவடிக்கைகளில் இவனுக்கு சில குமைச்சல்கள் இருந்தாலும் இவள் இன்றிலிருந்து மொத்தமாக, முழுதாக இவள் எனக்கானவள் என்று கதிருக்கு தோன்றியது.
தனது மனதிற்கு நெருக்கமாக உள்ள ஒரு பெண் தன்னிடம் இத்தனை உரிமையை எடுத்துக் கொண்ட பிறகும் ஆணவனின் கோபமும், அவமான உணர்வும் அவன் தலைக்குள்ளே நின்று கொண்டிருக்குமா என்ன? நாங்களா உன்னை அன்று அவ்வாறு கொதித்துப் பேசச் சொன்னோம் என்று அவை இன்று அவனிடம் எதிர்க்கேள்வி எழுப்பின.
அவனது உணர்வுகள் இவ்வாறாக ஒரு ஐயிட்டம் ஸாங்கிற்கு ஆட்டம் போடுவோமா என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க, அவளது மூளை நரம்புகள் இவள் தாங்க முடியாத மனப்பாரத்தில் இருக்கிறாள்; வேறு எவரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத சுமையை உன்னில் சாய்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள் அவ்வளவு தான் என்று உண்மையை எடுத்துரைத்தன.
"லஷ்மி; கொஞ்சம் எழுந்துரிச்சுக்குறியா? ஒம்மூச்சு பட்டு எனக்கு..... என் உடம்புல
ஒருமாதிரி கூசுதுடீ!" என்று பட்டுக் குரலில் குழைந்தவனிடம்,
"ம்ம்ம்.... ஒனக்கு கூசுதா? அப்ப ஒருவாட்டி எச்ச முழிங்கிக்கோ ரேஷன் சரியாகிடும்!" என்று செய்தி வாசிப்பது போன்ற பாவத்துடன் அவனிடம் பேசினாள் சந்தனா.
"கூசுதுன்னு சொன்னா இவ என்ன சம்பந்தமேயில்லாம எச்ச முழிங்கிக்கோன்னு சொல்றா! நம்மளோட அவஸ்தைய கொஞ்சமாவது புரிஞ்சுக்குறாளா?
ரொம்ப முக்கியமா எதையோ பேசணும்னு நெனக்குறா போலருக்கு..... கடவுளே; இவ பேசுறதெல்லாம் எனக்கு தெளிவா காதுல விழணும்ப்பா!" என்று வேண்டிக் கொண்டிருந்தவனிடம்,
"கதிர்..... அம்மா ஏன் கதிர் இன்னுங்கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க மாட்டேங்குறாங்க? இந்த ஆலெனும் அவங்க என்ன செஞ்சாலும் அத ஒண்ணுமே கேக்குறதில்ல தெரியுமா? காசு மட்டும் கேக்குற நேரம் வேணும்; மத்தபடி புருஷன் வேண்டாம், பொண்ணு, புள்ளையெல்லாம் எப்டிப் போனாலும் பரவாயில்லன்னு நினைச்சா நாங்க இவங்கள என்ன கதிர் பண்றது?"
"நான் எனக்கு சம்பந்தமேயில்லாத ஒருத்தன் வீட்டுக்கு வந்து, அவன் மடியில படுத்துருக்குறத பத்தி கேள்விப்பட்டு மத்த அம்மாவா இருந்தா அதுக்கு என்ன சொல்லுவாங்க? நாலு அறை விட்டு
எந்த தைரியத்துலடீ ஒரு ஆம்பள வீட்டுக்குப் போனன்னு கேக்க மாட்டாங்க?"
"எனக்கு என் அம்மா கூட அப்டி எங்கூட சண்ட போடணும்னு ஆசையா இருக்கு கதிர்! உன்னை திரும்ப திரும்ப டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு நெனக்குறேன்; ஆனா என்னன்னு தெரியல; மறுபடியும் மறுபடியும் உங்கிட்ட தான் வந்து நிக்குறேன். ஜெபா கூட நான் பேசுறேன்! தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்! மனசுல பெரிய பாறாங்கல் அளவுக்கு அடைச்சுட்டு இருந்த சோகம், நீ கன்னத்துல ஸாஃப்டா வருடிக் கொடுக்கும் போது காணாமப் போயிட்ட மாதிரி தோணுச்சுடா! இதெல்லாம் உன்னை கேக்காமயே உங்கிட்ட இருந்து நான் வாங்கிக்குறேனே?
உனக்கு என் மேல கோபமே வரலையா கதிர்?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தவன் சற்றே தன் குரலை செருமிக் கொண்டு,
"சம்பந்தமேயில்லாத ஒருத்தன்னு நீ சொன்னது தான் ரொம்ப கோபம் வருது ஃபெதர்! உன்னை கேக்காம நானும் உனக்கு ஒரு புதுப்பேரு வச்சுட்டேன்! அதுனால ஒருக்க எங்கிட்ட கோபிச்சுக்க மாட்ட தானே?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டிய சந்தனா,
"டேய்..... உன்னை நான் கிட்டத்தட்ட ஹக் பண்ணிட்டு உக்காந்துருக்கேன்டா! நீ அதுக்கே கோபப்படல; ஆஃப்டர் ஆல் ஒரு நிக்நேம்; சந்தானலஷ்மி, லஷ்மியோட, இப்ப ஃபெதரா? எந்த பறவையோட ஃபெதர் நானு?" என்று சிரிப்புடன் அவனிடம் கேட்டபடி அவளது அணைப்பை விலக்கிக் கொண்டு எழுந்தவளிடம் லேசான கோபம் காட்டி,
"ம்ப்ச்! அதுக்குள்ள என்ன லஷ்மி அவசரம்? இப்டியே என்னைக் கட்டிப் புடிச்சுட்டு, என் மடியில படுத்துட்டு இன்னும் நிறைய பேசு.......! இந்த போஸ் ரொம்ப அழகாயிருக்கு!" என்றான் கதிர்.
"ம்ஹூம்; பேசுறது உங்கிட்ட இல்ல; சுமலதா மேடம் கிட்ட...... ஊர்ல இருந்து அம்மா வந்ததுக்கப்புறம் அவங்க கிட்ட நிறைய பேசணும் கதிர்; நீயும் எங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றியா? பெட்டி நிறைய பணம் குடுத்து இல்ல..... கொஞ்சம் அவங்கள கன்வின்ஸ் பண்ற மாதிரி பேசுறதுக்கு பாயிண்ட் எடுத்துக் குடுத்து.....!" என்று அவனிடம் கேட்ட படி எழுந்தவளிடம் அசட்டையாக தோளைக் குலுக்கியவன்,
"அதுக்கென்ன.... செஞ்சுடலாம் விடு; மேடம சரி பண்றதெல்லாம் ஈஸியான வேல தான்! ஆனா அந்த மேடமோட பொண்ணு ஒருத்தங்க இருக்காங்க...... அவங்கள சரி பண்றது ஐ மீன் கரெக்ட் பண்றது தான் ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கும் போலிருக்கு! முதல் முதல்ல இங்க வந்தப்போ கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டாங்க.....!"
"அதே வார்த்தைய இப்பவும் சொன்னாங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்! ஏன்னா இன்னோரு வாட்டி இப்டி மடியில வந்து படுத்துக்கிட்டாங்கன்னா
இந்தக் கதிர் பையனோட யோக்யத்தனத்த எல்லாம் நம்ப முடியாதுன்னு நினைக்கிறேன்!" என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னவனிடம் புன்னகைத்த சந்தனா,
"எனக்கு கொஞ்சம் டைம் குடு கதிர்! நான் முதல்ல என்னோட பேமிலியில இருக்குற ப்ராப்ளம்ஸ என்னால முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணிடுறேன்; அதுக்கப்புறம் நீ வந்து ஆலென் கிட்ட நம்ம விஷயத்த பேசு! ஆனா அடக்க ஒடுக்கமான ஒரு பொண்ண எல்லாம் எங்கிட்ட எதிர்பார்க்காத!" என்று சொன்ன சந்தனாவிடம்,
"ச்சே.... ச்சே! அப்டியெல்லாம் கனவு காணுறதுக்கு நான் என்ன லூசா? நமக்கு வாய்ச்சது ஒரு சூபொன்னு தான் முன்னாடியே தெரியுமே?" என்று சொன்னவன், அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராக அவளுக்காக தன் வீட்டின் கதவைத் திறந்து விட்டான்.
"அதென்னடா சூபொ....? இதுவும் ஃபெதர் மாதிரி ஒரு ரகசிய வார்த்தையா?" என்று சந்தனா அவனிடம் கேட்க அவன் அவளிடம் பலமாக தலையாட்டி விட்டு,
"சேகர வேணும்னா எங்கிட்ட வொர்க் பண்ண வரச்சொல்லேன் லஷ்மி! சஞ்சீவ் இந்த வாரத்துக்குள்ள ஊருக்குக் கிளம்பிடுவான்; நான் அதுக்கப்புறம் எப்டியும் புதுசா ஒரு பிஏவை தேடத் தான் செய்யணும்!" என்று அவளிடம் கேட்டான்.
"நீ புதுசா வேற ஆளயே தேடு! உங்க ரெண்டு பேரயும் ஒண்ணா சேர விட்டால்லாம் அது சரிப்படாது! கிளம்பட்டா?" என்று கேட்டவளிடம் ஒரு எதிர்பார்ப்புடன்,
"இன்னிக்கு ஈவ்னிங் நாம எங்கயாவது மீட் பண்ணலாமா செல்லம்?" என்று ஆசையாக கேட்டான் கதிர்.
"வீட்டுக்கு வேணும்னா டின்னர் சாப்ட வா! எந்த அளவும் இல்லாம பிடிச்சத திருப்தியா சாப்டலாம்; ஆலென் தான் சமைப்பாரு!" என்று சொல்லி அவனை அழைத்தவளிடம்,
"இனிமே அப்பப்ப ஸாரோட சேர்ந்து நானும் சமைப்பேன்! வீட்டுக்குப் போயிட்டு ஒரு கால் பண்ணு. பை!" என்று சொல்லி அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான் கதிர்.
சிறுநகை மலரும்!