"அக்கா"
அதிவேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு அவனிடம் திரும்பினாள் அவள். அவனும் சோகம் அப்பின முகத்தோடு நின்றிருந்தான். அவனை உள்ளே வரச்சொல்லி கைகாட்டினாள் அவள்.
"என்னடா தன்னு? அக்கான்னெல்லாம் கூப்பிடற?" கைநீட்டி அழைத்தவாறே தனது நிலையை மறைத்து சிரிக்க முயன்றாள் தாரா.
அவனோ முகம் மாறாமல் அவள் தோளில் கைவைத்தபடி கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தான்.
"கல்யாணம்னா, எல்லாரும் ஒன்னுகூடி சந்தோஷமா நடத்துறது தானேக்கா? ஏன் நம்ம வீட்டுல மட்டும் அது சோகமா நடக்குது?"
குரல் கரகரத்து அவனுக்கு. தாரா கலங்கிப்போனாள். மற்றவர்களும் பதிலின்றி அமைதியாக அமர்ந்திருந்தனர். வயதுக்கு மீறிய அவனது கேள்விக்குத் தானும் ஒரு காரணமாகப் போய்விட்டதை நினைத்து வேதனித்தாள் அவள்.
"தனு, சில நேரத்துல இப்படி அசம்பாவிதம் நடக்கறத தவிர்க்கமுடியாது. அக்காவோட தலையெழுத்து அப்படித்தான் போல. இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத தனு. நீபாட்டுக்கு ஜாலியா இரு. எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. பர்வதம் பாட்டி நம்மமேல எப்பவுமே பாசமா தானே இருப்பாங்க..? அவங்க வீட்டுக்குத் தான் நான் போகப்போறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்மேல இருந்த கவலை தீர்ந்துடுச்சு. அடுத்ததா நீதான் நல்லாப் படிச்சு, நல்ல வேலைக்குப் போயி அவங்களைப் பாத்துக்கணும். சரியா?"
வழக்கமாக ஏதேனும் மறுப்பாகச் சொல்லி வம்பளக்கும் தம்பி இன்று வார்த்தையின்றித் தலையாட்டினான்.
"தாரா.. உனக்குத்தான் வீட்டை விட்டு எங்கயும் போய் இருந்து பழக்கமே இல்லையே.. எப்படி தனியா அங்க போய் இருப்ப?"
கிட்டத்தட்ட அழுதுவிடும் குரலில் கேட்டான் தனுஷ்.
தாராவிற்கும் தொண்டையில் சிக்கின வார்த்தைகள். கலங்கிய கண்களைச் சிமிட்டிக் கண்ணீரைக் கலைத்துவிட்டு, "என்ன பண்ணலாம்.. பேசாம நீயும் ஒரு பேகை எடுத்துக்கிட்டு என்னோடவே கிளம்பி வந்துடேன்" எனச் சிரித்தாள் அவள்.
![](https://img.wattpad.com/cover/261257745-288-k972353.jpg)