“சரி வா..” கையை பிடித்து அழைத்து சென்றவன், அவளது இடத்தில் படுக்க வைத்துவிட்டு தைலம் எடுக்க எழுந்தவனின் கரங்களை பிடித்துக்கொண்டாள். “என்ன வேணும் என் தங்கத்துக்கு?” குரலில் அப்படி ஒரு பாசத்தை இமையா கண்டாள்.
அவனது பாசமான குரலில் திக்கு முக்காடி போனவளின் செவ்விதழ்களிலிருந்து வார்த்தை வருவதற்கு பதிலாக, காத்து தான் வந்தது. அவளது இதயத்தின் பூட்டும், இழுத்து வைத்திருந்த பிடிவாதமும் இவனது பாசத்தால் சுக்கு நூறாக உடைந்தது.
கனவுலகிலிருக்கும் இமையாவை உசுப்பி விட்டவன் “என்னாச்சி என் கண்ணும்மாவுக்கு”
“அது.. அது ஜூஸ் வேணும்” அவளது தடுமாற்றத்தை குறைத்து வாய்க்கு வந்ததை கேட்க,
“அட மக்கு பாப்பா… இதுக்கா இவ்வளவு தயக்கம். இரு எடுத்து வரேன்” இமையாவின் பட்டு கன்னத்தை கிள்ளிவிட்டு எழ, அவனது நகம் பட்டு விட்டது.
“ஆ… எரியுது” வலி பொறுக்காமல் இமையா கதிரின் கைகளை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ஆஆஆ..” இந்த முறை கதிரை கிள்ளி அலறவிட்டாள் இமையா.
“இமை.. உனக்கு மூக்குக்கு மேலே கோபம் வருது. தெரியாம செய்ததுக்கு எல்லாம் தண்டனை கொடுக்க கூடாது தங்கம்”
“எனக்கு எப்படி வலிக்குதுனு உனக்கும் தெரியனுமில்ல” இமையா முறைத்துக்கொண்டு சொல்ல,
“சரி சரி இப்படி இந்த முட்டை கண்ணை பிதுக்கி பயம் காட்டாதே. நான் போய் ஜூஸ் கொண்டு வரேன்” கிட்சனில் இருந்த ஜூஸை கிளாசில் ஊற்றியவனின் கைகளில் ஒரு துளி ரத்தம் எட்டிப்பார்த்தது.
“முதல்ல இவளுக்கு நகத்தை வெட்டி விடணும். ரத்தம் வர அளவுக்கு கிள்ளி வச்சிருக்கா ராட்சசி” செல்லமாக திட்டிக்கொண்டே இமையாவுக்கு ஜூஸுடன் சிறிது ஸ்னாக்ஸ் எடுத்து வந்தான்.
இமையா மனதில் கதிர் சொன்ன வாக்கியம் தான் ஓடியது “முட்டை கண்ணு…” தனது கண்களை ஏக்கமாக தொட்டு பார்த்தாள்.