அவரது வார்த்தைப் பிரயோகத்தில் புருவம் தூக்கியவன், மறுக்காமல் எழுந்து உள்ளே சென்றான்.
ஒன்றும் பேசாமல் இருவருமே நேரத்தைக் கடத்தினர். ஒரிருமுறை பார்வைகள் சந்தித்தபோது, அப்பெண் வெட்கத்தோடு சிரித்தாள். ஆதித் உணர்வற்று நின்றான். சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய, அவள் ஏதோ சொல்ல வாய்திறந்தாள்.
"நீங்க.. அழகா இருக்கீங்க. ஷேவ் பண்ணீங்கன்னா, இன்னும் ஸ்மார்ட்டா இருப்பீங்க.."
அதீத வெட்கத்தோடு அவள் பேச, அவனோ உள்ளுக்குள் தனது திட்டத்தைத் தீட்டிவிட்டு நிமிர்ந்தான் விஷமத்தனமாக.
"என்னங்க பண்ணறது.. இதெல்லாம் அவளுக்காக செய்வேன்... அவ போனதுக்கப்பறம் எனக்கு இதெல்லாம் பண்ணிக்கவே பிடிக்கிறதில்ல.. யாருக்காக செய்யணும் இதெல்லாம்? எதுக்காக?"
பலத்த சலிப்போடு பேசுவதுபோல் அவன் பேச, அப்பெண் குழப்பமாக முகம் சுளித்தாள்.
"என்ன சொல்றீங்க?"
"அடடே.. உங்ககிட்ட சொல்லலியா? என் பார்வதி என்னைவிட்டுப் போயி மூணு வருசமாகுதுங்க.. நான் இன்னும் அவளையே நினைச்சு தேவதாஸா இருக்கேன்.. இப்பக்கூடப் பாருங்க, செத்துப்போன என் பார்வதியைப் பாக்குற மாதிரியே இருக்கு உங்களப் பாத்தா... ஐயோ பார்வதி.. அநியாயமா போயிட்டயே.."
முகம்நிறைய சோகத்தை அப்பிக்கொண்டதுபோல் அவன் அழுது புலம்பிட, பெண்ணுக்கு வியர்த்தே விட்டது. அங்குமிங்கும் பதற்றமாகப் பார்த்தாள் அவள். அவன் உள்ளூறச் சிரித்துக்கொண்டான்.
"அதைவிடுங்க.. என் பார்வதி ஞாபகமா, கல்யாணத்துக்கு அப்பறம், உங்களையும் நான் பார்வதின்னே கூப்பிடட்டா?"
அவ்வளவுதான்!
"அப்பா!!" என அலறிக்கொண்டு அறையை விட்டே ஓடிவிட்டாள் அப்பெண். தன் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டான் அவன்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவனை வெளியேற்றினார் பெண்ணின் தந்தை. திட்டம் வெற்றிபெற்ற களிப்பில் சீட்டியடித்துக்கொண்டே வந்து காரில் அமர்ந்தான் ஆதித்.