"ஆனாலுமே எனக்கது ஸ்பெஷல் தானே! கொல்கத்தா சாப்பாடு எனக்குப் புதுசுல்ல?"
அவர் புன்சிரிப்புடன் அவளை அமரவைத்துப் பரிமாறினார். அவள் கேட்காமலேயே, "முதலாளி ஐயா சாப்பிட்டாச்சான்னு கேட்காத, அவர் ஆபிஸ் கேண்ட்டீன்ல சாப்ட்டு தான் வந்தாரு.." என்க, தாரா தலையைக் குனிந்துகொண்டாள் அசட்டுத்தனமாக. ஏனோ கொஞ்சம் சிரிப்பு வந்தது. அவன் சாப்பிட்டுவிட்டான் எனக் கேட்டபோது நிறைவாக இருந்தது. ஆனாலும் தன்னோடு சேர்ந்து உணவருந்தியிருக்கலாம் என்றும் மனதோரத்தில் தோன்றியது.
"சரி.. டின்னர் ஒண்ணா சாப்பிடலாம்.. இப்ப என்ன?" எனத் தனக்குள்ளாரே சொல்லிக்கொண்டாள் அவள். ராணி சிரித்தார் நமட்டுச் சிரிப்பாக.
தட்டில் இருந்த உருளைக்கிழங்கு வறுவலை நாவில் வைத்தபோது சட்டென கசப்பு சுவை தாக்க, தாரா திகைத்தாள். "என்னதிது?"
"நீம் பத்தா ஆலுபாஜா. அதாவது வேப்பிலை போட்ட உருளைக் கறி. உடம்புக்கு நல்லது."
"கறியில கறிவேப்பிலை தானே போடுவாங்க.. நீங்க என்ன வேப்பிலை எல்லாமா போடுவீங்க!?"
அவரோ சிரித்தார்.
"பெங்காலிகளுக்கு, இனிப்பு எவ்ளோ இஷ்டமோ அதேயளவு கசப்பும் புடிக்கும். வாழ்க்கைல பேலன்ஸ் வேணும்ல? அதான்.. பெங்காலி சமையல்ல கசப்புக் கீரைகளும், வேப்பங் கொழுந்தும், பாகற்காயும் நிறைய இருக்கும்.""ஆனா.."
"ஆதித்துக்கு இதெல்லாம் ரொம்பப் புடிக்கும், தெரியுமா?"
உதட்டைச் சுழித்துவிட்டு அமைதியாக உணவருந்தத் தொடங்கினாள் அவளும்.
***
அந்தி சாயும்வரை தோட்டத்தில் உலவிவிட்டு, பின் தன்னறையில் வந்து புத்தகங்களுடன் அமர்ந்தபோது, தன்னுவையும் அம்மாவையும் பற்றியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்ததால், "ஓய்! ஆள் வர்றதுகூடத் தெரியாமல் என்ன யோசனை?" எனக்கேட்டவாறு வந்த ஷீத்தலை சில நொடிகள் கழித்தே கவனித்து நிமிர்ந்தாள்.
"ஷீத்து!!" என்றபடி அவளை வாரியணைத்துக்கொண்டாள் தாரா.
"நாலு நாள் நான் ஊர்ல இல்லைன்னா, இங்க என்னென்னவோ நடந்திருக்கே! ராஜீவ் சொன்னான்... நம்மாளை நல்லா லெஃப்ட் ரைட் வாங்கிட்டயாமே?! சியர்ஸ் டூ யூ தாரா!"
![](https://img.wattpad.com/cover/261257745-288-k972353.jpg)