இருள் தன் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டத் தொடங்கியது. இருளுக்கு கட்டுப்பட்ட பகலவனும் தன் கதிர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு கடலுக்கடியில் படுத்துவிட மின் விளக்குகள் பாய்ச்சிய ஒளி வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது காலி முகத்திடல்.
கடற்காற்றில் தாக்குப்பிடிக்க ஹிக்மாவின் பிண் குத்தப்பட்ட ஷால் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்தது. அவளது கைகள ஷோலை உடலோடு சேர்த்து பற்றியிருக்க மேலதிக பாதுகாப்புக்காக ரய்யானின் வலிய கரங்கள் அவளை சுற்றியிருந்தன.
அங்கிருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காதல் ஜோடிகள் என்பதை அவர்களது உடல்மொழியிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது. ரய்யானும் ஹிக்மாவும் அதுபோன்ற காதல் ஜோடிகளா என்பது திண்ணமில்லை என்றாலும்
ஹிக்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.
சில மாதங்களுக்கு முன்பு திருமண வாழ்க்கையை எண்ணி அவள் அடைந்த கவலையும், சிந்திய கண்ணீரும் இன்று தடம் தெரியாமல் போயிருந்தன. படைத்தவனுக்கு மறவாமல் நன்றி சொல்லிக்கொண்டாள்.
ஹிக்மாவின் முகத்தில் இனி வேறென்ன வேண்டும் என்னுமளவு சந்தோஷம் சிதறிக்கிடந்தது. ரய்யானும் வேண்டாத நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு அவளது சந்தோஷத்தில் இணைந்து கொண்டான். இருவரும் பிடித்ததை பேசியபடி நடைபோட நேரமும் இனிமையாக கரைந்தது. பிறகு கடல்நீரில் கொஞ்சம் கால் நனைத்துவிட்டு அறைக்கு திரும்பினர்.
வரும்போது இரவுணவையும் வாங்கி வந்திருந்தனர். உணவு உட்கொண்டு முடிக்கும்வரை ஹிக்மா கடற்கரை சுவாரசிங்களை ஓயாமல் பேசிக்கொண்டிருக்க மறுபடியும் பழைய நினைவுகள் ரய்யானின் மனதை பிசைய ஆரம்பித்தது. சாப்பிட முடியாமல் போதுமென்று எழுந்தவன் தனிமையைநாடி பல்கேணியில் தஞ்சமடைந்தான்.
சாப்பிட்டு முடித்ததும் எடுத்த போட்டோக்களை பார்க்கவென அவளும் கட்டிலில் அமர்ந்துவிட ரய்யானை கவனிக்கவில்லை.
அவனோ பெருங் குழப்பத்தில் மூழ்கியிருந்தான்.
'மனைவியிடம்டம் தன் கடந்தகாலத்தை பற்றி பகிர்ந்து கொள்வது அவசியமா?' என பல்கேணியில் நின்றவாறே திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ புகைப்படங்களில் ஆழ்ந்து இருந்தாள்.
'இந்த இரண்டு நாட்களில் இருவருக்கும் இடையேயான நெருக்கம் பலமடங்கு அதிகரித்திருந்தது. அவர்களது பந்தத்தை ஹிக்மா இப்போதுதான் முழுமையாக ஏற்க முன் வந்திருக்கிறாள். இந்நிலையில் நான் நடந்ததை சொல்லப்போய் இருக்கின்றதும் கெட்டுவிடுமோ?'
என்று ஒருபுறம் மனசு தயங்கினாலும்,
'சொல்லாமலே அவளுடன் சந்தோஷமாக வாழ்ந்து விடலாம்தான். ஆனால் அவளை காயப்படுத்தியதற்கான மெய்யான காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்டபிறகே தன் காதலை அவளிடம் சொல்ல வேண்டும். இல்லையெனில் அவள் காதலை ஏற்றுக்கொண்டாலும் குற்ற உணர்வு மனதை அரித்தே கொன்றுவிடும். ஆகவே சொல்லியே ஆகவேண்டும்'
ரய்யானின் அடுத்த சிலநிமிடங்கள் சிந்தனையிலே கழிந்தன.
'நாங்க பிரியக்கூடாதுனு அள்ளாஹ் நாடியிருந்தால் நடந்ததை அவளிடம் சொன்னாலும் சொல்லாட்டாலும் பிரியமாட்டோம். அப்படி இல்லாமல் போனாலும் வருவதை ஏற்றுக்கொள்ள நான் தயார்தான். சொல்லாமல் இருந்துவிட்டு ஒவ்வொரு முறையும் அந்த நினைவுகளுடனு போராடமுடியாது' பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு தீர்மானமாக நிமிர்ந்தான்.
உள்ளே வந்தவன் லேசாக குரலை செறுமினான் "ஹிக்மா! உங்கட்ட கொஞ்சம் பேசனும்" என்னும் போதே சிறு பதற்றம்
ஆனால் அது அவள் கவனத்தில் படவில்லை
"ஆஹ் சொல்லுங்க" என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் பார்வையை போனில் பதிய விட்டாள்.
அவனுக்குமே அது வசதியாகப் போயிற்று
"நா.. நான் ஒரு முக்கியமான விஷியம் சொல்லனும்.." என்றான் மறுபடியும்
"ம்ம்... சொல்லுங்க " என்றாளே தவிர கையும் கண்ணும் இன்னுமும் போனில்தான் இருந்தது.
"மூனு வருஷத்துக்கு முதல் நான் ஒரு கேர்ள லவ் பண்ணேன். ரொம்ப Sincere ஆ"
அவன் பேசியது வார்த்தைகள் ஹிக்மாவின் செவியில் விழுந்தாலும் சொன்ன விடயம் கருத்தாய் பதியத்தவறியது.
"என்னது? என்ன சொன்னீங்க?" என்று நிமிர்ந்தாள். இப்போதும் கையில் போனிருந்தது. ஆனால் கவனம் முழுக்க அவன்பால் திரும்பியது.
"இங்க வேலை செய்த டைம்ல ஒரு கேர்ளை ரொம்ப சின்சியரா லவ் பண்ணேன்.."
வழமைபோல அவளை வேடிக்கையாக சீண்டி விளையாடுவதற்கு அவன் இதை சொல்லவில்லை என்பதை ரய்யானின் பேச்சிலும், பாவனையிலும் தெரிந்த தீவிரத்தன்மையே அவளுக்கு உணர்த்தின.
அதைக் கண்டதும் அவளுக்குள் ஒரு நடுக்கம் தோன்றி மறைந்தது. அத்தனைநேர சந்தோஷமும் ஒரே நொடியில் ஆட்டம் கண்டது போலிருந்தது. அதுவரை ரய்யானிடம் கண்ட காதல் பார்வைகள், சீண்டல் பேச்சுக்களை எல்லாம் அவள் மனப்பதிவிலிருந்து மறைந்து போயின.
'இப்போது இதை சொல்வதற்கு காரணமென்ன? பழைய காதலி திரும்பக்கிடைத்து விட்டாளோ? அவனுடைய காதல் இன்னும் அழியாமல் இருக்கிறதென சொல்ல வருகிறானோ? பிடிக்காமல் செய்த திருமணம் தானே' என நிமிட நேரத்திற்குள் ஹிக்மா பலதையும் யோசித்து விட்டாள்.
'அவனுக்குத்தான் பிடிக்காமல் நடந்தது. எனக்கு ரொம்ப பிடித்துப்போய் நடந்த திருமணம் இது. அதன்பிறகு அனைத்தும் தலைகீழாக மாறியது. எல்லாம் சரியாகி விட்டதென மகிழ்ச்சியோடு இரண்டு நாளைக் கடப்பதற்குள் இன்னொரு பிரச்சினை இடியாய் இறங்குகிறதே' என அவள் கண்களும் குளமாகின.
சற்று முன்பு கொண்டிருந்த எல்லையற்ற சந்தோஷம் கை நழுவுவதாக உணர்ந்தாள். ரய்யானை நேராக நோக்கிட சக்தியற்று தலை குனிந்தாள். கையில் இருந்த போன் திரையில் இருவரும் சேர்ந்தெடுத்த செல்பி. அதை பார்க்கும் போதே கண்ணீர் கரைபுரண்டு அதை பார்வையிலிருந்து மங்கச் செய்தது.
"ப்ளீஸ் அழாதிங்க ஹிக்மா. நான் முழுசும் சொல்லி முடிச்சிடுறன். அதுக்கு பிறகு நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு பரவாயில்லை"
'இனி அவள் முடிவெடுக்க என்ன இருக்கிறது' என எதுவும் பேசவில்லை ஹிக்மா. அவனே தொடர்ந்தான்.
ஷிரீனை சந்தித்தது, காதலில் விழுந்தது. வீட்டில் காதலை ஏற்க மறுத்ததால் சண்டைபோட்டு வெளிநாடு சென்றதுவரை படிப்படியாக சொல்லசசொல்ல வேதனையோடு செவி சாய்த்திருந்தாள் ஹிக்மா. காரணம் இன்னொரு பெண்ணை நேசித்ததால்தான் தன்னை வெறுத்திருக்கிறான் என்று நினைத்தாள்.
பின் ஷிரீனின் உண்மை முகம் தெரியவந்தது. அதன் காரணமாக பெண்களையும், திருமணத்தையும் வெறுக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்கிடையில் தாயார் சுகவீனமுற்றது. விருப்பமில்லாத திடீர் திருமணம்வரை சொல்லி முடித்தான்.
இவ்வளவு நேரமும் நான் பயந்தது போலில்லை. ஹிக்மாவுக்கு உரைத்தது.
'யாரோ ஒருத்தி செய்த பிழைக்காக எல்லா பெண்களையும் குற்றம் பிடிப்பது எந்த வகையில் நியாயம்?' என ரய்யான்மீது கோபம் வந்தது. அதை அவளது முகமும் பரைசாற்றியது.
"நான் செய்தது பெரிய பிழைதான். நான் இப்பவும் ஒத்துக்கிறேன். அவளை எந்தளவுக்கு நேசிச்சேன்னா அவளுக்காக என்னை உயிரா வளர்த்த உம்மா வாப்பவோட சண்டை போட்டு வீட்டைவிட்டு போனேன். அதை நினைச்சு இன்னைக்கு வரைக்கும் ஒருநாள்கூட வருத்தப்படாம இருந்ததேயில்ல.
ஆனா அவ..
லைப்ல செட்டில்லான பிறகுதான் கலியாணம்னு என்கிட்ட கண்டிஷன் போட்டவ அவ எதிர்பார்க்குற வசதியோட வெல் செட்டில்ட்டான ஒருத்தன் கிடைச்சதும் உடனே கலியாணம் பண்ணிட்டு போயிட்டா.
கடைசியில அவளைப் பத்தி தெரிய வரும்போது நான்தான் யாருமில்லாம தனிமரமா நின்னேன். காதலோட சேர்த்து என்னோட உணர்வுகளையும் கொன்னுட்டு போயிட்டா. இனி ஒருத்திய வாழ்க்கைல நம்பவே கூடாதுங்கிற அளவுக்கு என்னை காயப்படுத்திட்டுப் போயிட்டா"
ரய்யான் கூறிமுடித்ததும் இருவரையும் விழுங்குமளவு அறையில் அமைதி.
கதையை கேட்டபின் ஹிக்மாவுக்குமே அவன்மேல் பரிதாபம் தோன்றியது. தன் கணவனை நோகடித்த அந்த முகம்தெரியாத முன்னால் காதலியின்மீது கடும் வெறுப்பும், கோபம் வந்தது. அத்தோடு அவன் சொல்ல வருவதை முழுமையாக கேட்காமலே ஏதேதோ நினைத்து விட்டோமே என்று குற்ற உணர்வும் மிகுந்தது.
அமைதியா தனக்குள்ளே யோசித்தபடி இருந்தவளுக்கு அவனது காதல் தோல்வியும் அதனால் பெண்கள் மீதான வெறுப்பும் ஓரளவுக்கு நியாயமாகத் தோன்றினாலும் திருமணமாகி ஒரு வாரம் சுமுகமாக இருந்துவிட்டு ஒருவாரம் கழித்து அவன் தன்மேல் வெறுப்பை கொட்டியது, வார்த்தைகளில் காயப்படுத்தியது, கண்டபடி ஏசியது, குற்றம் சாட்டியதெல்லாம் இப்போது நினைவில் தட்டுப்பட்டதும் முகமும் மனமும் ஒருசேர வாடின.
ரய்யான் அதை பார்த்து அவளிடம் வந்தான்.
"மன்னிச்சிகோங்க ஹிக்மா. உங்களை நோகடிக்கனும்னு என்னோட நோக்கமில்லை. திடீர் கலியாணம், உம்மாக்கு சுகமில்லாம போனது எனக்குள்ள ஏற்கனவே இருந்த வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் உங்க மேல திருப்பிடுச்சி. அந்த டைம்ல நான் மனுசனாகவே நடந்துக்கல. ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்னு லேட்டாதான் உணர்ந்தேன். அள்ளாஹ்வுக்காக மன்னிச்சிடுங்க ப்ளீஸ்" ரய்யான் மனதார மன்னிப்பு வேண்டினான்.
ஹிக்மா அசையாமல் அமர்ந்திருந்தாள். பழைய காயத்தை மீண்டும் கீறிய வலியில் கண்களில் நீர்க்கோர்த்தது. சிறிதுநேரம் கழித்து நீண்ட நாட்களாக மனதிலிருந்ததை கேட்டாள்.
"அந்த ஒரு வாரத்துல உங்களை மயக்கி சொத்தை அனுபவிக்க நான் என்ன செஞ்சேன்? அப்படியென்ன தப்பா நடத்தையை என்கிட்ட கண்டீங்க?" அவள் எதையும் மறந்து விடவில்லை என்பதை அவள் பிரயோகித்த சொற்களே பறை சாற்றின.