இன்றும் மாலைவகுப்பு முடிந்து வந்தபின் ஆரம்பித்த சண்டைதான் மக்ரிப்பையும் தாண்டி போய்க் கொண்டிருந்தது.
சுலைஹாவும் முடியும்போது முடியட்டும் என கண்டுகொள்ளாமல் இருந்திடவே எண்ணினார். ஆனால் ஹிஜாஸ் படிக்கின்ற நேரம் வீணாகுவது பொறுக்காமல் பஞ்சாயத்திற்கு வந்தார்.
"மக்ரிப் நேரம். எல்லார் வீட்டிலயும் ஓதல், படிப்பு சத்தந்தான் கேட்கும். எங்கட வீட்ல மட்டுந்தான் ஓயாத சண்டை"
"அவன்தான் முதல்ல என் தலைமுடிய பிடிச்சு இழுத்தான்--" ஹிக்மா அண்ணனை கைகாட்ட
"சின்னப் புள்ளைகள் மாதிரி இழுத்தது, அடிச்சது, கடிச்சதெல்லாம் போதும். ஹிம்னா! நீ உன் ரூமுக்கு போ. ஹிஜாஸ்! நீ போ உன்னோட ரூமுக்கு. இனி ஒருசத்தம் வரக்கூடாது. சொல்லிட்டன்" அன்னையின் கட்டளைக்கு பயந்து இருவரும் தத்தமது அறைக்குள் புகுந்தனர்.
இருவரையும் நினைத்து புலம்பிக்கொண்டே இரவுக்கான சமையல் தயார் செய்தார் சுலைஹா.
உண்மையிலே அடுத்த இரண்டு மணிநேரமும் வீடே மயான அமைதியில் இருந்தது.
கடையிலிருந்து திரும்பிய ஹாலித் கூட ஆச்சரியப்பட்டுப் போனார்.
'ஹிம்னா மட்டும் இருந்தாளே வீடு அமைதியாக இருக்க வாய்ப்பில்லை. நாநாவும் தங்கையும் இருந்தும் இப்படி இருக்கிறதே'
வந்ததுமே மனைவியிடம் அதீத அமைதியின் காரணத்தை வினவ சுலைஹா அதற்கு பெரிய கதையே சொன்னார். அதுவரை சொல்லிப்புலம்ப ஆளில்லாமல் தவித்தவர் கணவனிடம் பிள்ளைகளை பற்றி கோபதாபத்துடன் கொட்டித்தீர்த்தார்.
"சரி சரி. எல்லாம் நம்ம வீட்டோடு இருக்கிற வரைக்குந்தானே அப்படி இருக்கப்போகுதுகள். இருந்திட்டு போகட்டும் விடுங்க"
"நீங்களே இப்படி பொறுப்பில்லாம சொல்றீங்களே. படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிச்சாத்தானே நாளைக்கு அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும்"
"நீங்க சொல்றது சரிதான். இல்லைனு சொல்லலை. எங்க பிள்ளைகள் கெட்டிக்காரங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. படிச்சு நல்லா வருவாங்க. ஆனா படிச்சு முடிச்சு பெரியாளாகிட்டா இந்தமாதிரி சுதந்திரமா இருக்க மாட்டாங்க"
"அப்ப ரெண்டு பேரும் அடிச்சிட்டு சண்டை போடட்டும்னு பார்த்துட்டிருக்க சொல்றீங்களா?"
"இல்ல. இல்ல. அப்படி சொல்லலை. எந்த நேரமும் அவங்களை சத்தம் போடத் தேவையில்லைனு சொல்றன். கொஞ்சம் நேரம்விட்டா அவங்களே ஒத்துமை ஆகிடுவாங்க"
"ம்ம்ம்... ஹிம்னா பொம்பளப் பிள்ளை. இன்னொரு இடத்துக்கு போகப்போறவ. இப்பவே வாயாடியா இருக்கா. கண்டிக்காம விட்டா நாளைக்கு போற இடத்துல எங்களைத்தான் குறை சொல்வாங்க"
"அவ வாயெல்லாம் எங்களோடுதானே. வெளியாட்கள் யாராவது அவளைப் பத்தி சொல்லிருக்காங்களா? இல்லையே. எங்க பிள்ளைகள் ஒருநாளும் எங்களுக்கு கெட்டபெயர் வாங்கித்தர மாட்டாங்க. வீட்டோடு எங்ககூட இருக்கிறவரை இஷ்டம் போல இருந்திட்டுப் போகட்டுமே"
"நீங்க ஓவராத்தான் செல்லம் குடுக்குறீங்க. அவ காதுபட இப்படி சொல்லிறாதிங்க"
"அவகிட்ட சொல்ல முடியாதுன்னு தான் உங்கட்ட சொல்றன். ஹிக்மாவும் இந்த வீட்ல இருக்கும்போது இப்படித்தானே இருந்தா. ஆனா பழைய ஹிக்மாவ இனி தேடித்தான் எடுக்கனும். இன்னொரு வீட்டுக்கு போனதுமே சிறுபிள்ளை தனமெல்லாம் எல்லாம் போய் பொறுப்பானவங்களா மாறிடுறாங்க. நினைக்கிறப்ப பேசக்கூட முடியிறதில்லை"
ஹாலித்தின் பேச்சில் மூத்த மகளை பலநாள் காணாத வருத்தம் தெரிந்தது. மேலும் கேட்டு அவரை வருத்தப்பட வைக்க வேண்டாமென நினைத்து
"சரி வாங்க சாப்பிடலாம்" என்றார்.
"பிள்ளைகளையும் கூப்பிடுங்க. சாப்பிட்டு போய் படிக்கட்டும்"
சுலைஹா இருவரையும் சாப்பிட அழைக்க இருவரிடமும் பதிலில்லை.
'திட்டியதால் கோபித்துக்கொண்டு இருக்கிறார்களோ' என நினைத்தார்.
'ஹிம்னா வேண்டுமானால் அப்படி செய்யக்கூடும். ஆனால் ஹிஜாஸ் ஒருபோதும் அப்படி செய்யமாட்டானே'
எனவே நேரடியாக அறைக்குள்ளே போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்தது இருவருமே தூங்கிப் போயிருப்பது.
ஹிஜாஸ் புத்தகத்தை கட்டிக்கொண்டு அமர்ந்தபடியே தூங்கிப் போயிருந்தான். ஹிம்னாவோ எந்த சிரமமுமின்றி வசதியாக கைகால்களை நீட்டி தூங்கியிருந்தாள்.
'யாள்ளாஹ்! எப்படித்தான் இதுகளை வளர்த்தெடுக்கப் போறேனோ?' என தலையில அடித்துக்கொண்டார் சுலைஹா. இருவரையும் எழுப்பியெடுத்து சாப்பிட வைப்பதற்குள் அவருக்கு பாதி உயிரே போயிற்று.
மறுநாள் பாடசாலை விட்டு வந்த ஹிம்னா அறையினுள் சென்று கதவடைத்தவள் வெளியில் வரவேயில்லை. சாப்பிட அழைத்து சோர்ந்துபோன சுலைஹா அவளுக்கு தட்டில் போட்டு மூடிவைத்தார்.
அது அவர் வழமையாக ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் கட்டிலில் சாய்ந்து கண்களை மூடினார்.
மூன்று மணியாகியும் தங்கையின் சத்தமே இல்லையென்று தேடினான் ஹிஜாஸ்.
தாயிடம் கேட்க அவரோ
'ட்யூஷன் போயிருப்பாள்டா மகன். என்னை கொஞ்சம் சாய விடேன்' தூக்க கலக்கத்திலே பேசினார்.
'ஹிம்னா அமைதியாக ட்யூஷன் கிளம்பிப்போனதாக சரித்திரத்திலே இல்லையே' ஹிஜாஸுக்கு குழப்பமாக இருந்தது.
நான்கு மணிக்குமேல் தூங்கியெழுந்த சுலைஹா அழுக்குத் துணிகளை எடுக்க மகளின் அறையினுள் சென்றார். கட்டிலில் குப்புற படுத்திருந்தவளைக் கண்டு
"நீ டியூஷன் போகலையா?"
"இல்லை" எழும்பாமலே பதில் சொன்னாள் மகள்.
"என்ன தங்கம் ஏதும் சுகமில்லையா உனக்கு? வயிற்று வலியா?"
"தலைவலிம்மா.."
"பெனடோல் தரவா?"
"வேணாம்மா.. சரியாகிடும்"
"இஞ்சி ப்ளேன்டீ?"
"வேணாம்மா. கொஞ்சம் படுத்தெழும்பினா சரியாப்போகும்"
மகளின் தலையை சிறிதுநேரம் தடவிக்கொடுத்துவிட்டு எழுந்து போனார்.
தங்கை டியூஷன் வகுப்புக்கு செல்லாததை அறியாத ஹிஜாஸ் தாயிடம் விசாரித்தான்.
"உம்மா! ஹிம்னா இன்னுமா டியூஷன்ல இருந்து வரலை. இப்பவே அஞ்சரை மணியாகுதே"
சுலைஹாவும் ஹிம்னா அறையில் படுத்துக் கிடக்கும் செய்தியை சொன்னார்.
மறுகணமே தங்கையின் அறைக்கு விரைந்தான் ஹிஜாஸ். மாலைமங்கிய நேரம் என்பததால் லேசாக இருள் சூழ்ந்திருக்க அறையின் விளக்கை போட்டான்.
"உம்மா! நான்தான் தூங்கியெழும்பினா சரியாகிடும்னு சொன்னனே. எனக்கெதுவும் வேணாம். லைட்ட ஓப் பண்ணிட்டுப் போங்க" வந்தது தாயென நினைத்து ஹிம்னா புலம்பினாள்.
"உனக்கு ஒன்னும் தரல. நீ முதல்ல எழுந்து உட்காரு"
"ஐயோ நாநா! தலைவலி.. என்னை தூங்கவிடு"
"உம்மாட்ட சொன்ன கதையெல்லாம் நான் நம்ப மாட்டேன். எழும்பி உட்காரு"
"ஐயோ நாநா.. ப்ளீஸ்"
"ஹிம்னா !" என்று இதுவரை கேட்டிராத தொனியில் கராராக அழைக்கவே மறுபேச்சின்றி எழுந்தாள் தங்கை.
கதவை சாத்திவிட்டு வந்து அவளருகில் அமர்ந்து
"என்ன நடந்திச்சு சொல்லு?" நேரடியாக கேட்டதும் தலையை குணிந்து கொண்டாள்.
"ஹிம்னா! என்ன நடந்திச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்? எதுவாயிருந்தாலும் நாநா பார்த்துக்குறன். நாநா ஒருத்தர்டையும் சொல்ல மாட்டன். தயவுசெஞ்சு சொல்லு?"
மெதுவாக அவள் தலை நிமிர்ந்தது.
"நாநா! நாளைக்கு சயின்ஸ்ல கணிப்பீடு. டீச்சர் சயின்ஸ் நோட் புக்க பார்க்கனும்னு கேட்டாங்க. குடுத்திட்டு அவங்கள்ட இருந்து வாங்க மறந்துட்டேன். ஸ்கூல்விட்டு கேட்கிட்ட வந்தபிறகுதான் சயின்ஸ் நோட் வாங்க மறந்தது ஞாபகம் வந்திச்சி.
எப்படியும் நோட்புக் சயின்ஸ் லெப்லதான் இருக்கும் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் போனபிறகு ப்ரிபெக்ட்ஸ் தான் டோரெல்லாம் லொக் பண்ணுவாங்க. அதுக்கு முதல்ல போனா எடுத்திட்டு வந்துடலாம்னு பேக்கை கலட்டி ஹஸ்னாட்ட குடுத்திட்டு லெப்புக்கு ஓடினன்.
நல்லநேரம் லெப் திறந்துதான் இருந்திச்சி. ஸ்டாப் டேபிள்ல இருந்த நோட்புக்க எடுத்திட்டு வெளியில வரும்போது..." என்று நிறுத்திவிட்டு மறுபடியும் ஹிம்னா தலைகுணிய
"யாரு? என்ன செஞ்சாங்க? சொல்லு.." அவளும் தொடர்ந்தாள்.
"ஓ லெவெல் நாநாமார் நாலஞ்சு பேர் வந்தாங்க. அதுல ஒருத்தன் ஜூனியர் ப்ரிபெக்ட். அவங்க லெப்ப மூட வந்திருந்தாங்க. நானும் வழிவிட்டுட்டு திரும்பி வர்றதுக்காக நின்னப்போ அவங்க எல்லாரும் என்னை சுத்தி வழியை மறைச்சி நின்னுட்டாங்க.
அதுல ஒருத்தன்
'தங்கச்சி பயப்பட வேணாம். நாங்க ஒன்னும் செய்யமாட்டம். நாங்க சொல்றத கேட்டுட்டு போங்க' ன்னான். எனக்கு அப்பவே உள்ளுக்க நடுங்க தொடங்கிட்டு நாநா "
"சரி அவன் என்ன சொன்னான்?"
"அந்த ஜூனியர் ப்ரிபெக்ட்டுன்னு சொன்னனே.. அவன் என்னை லவ் பண்றானாம்"
"அவனும் அங்கேயா இருந்தான்?அவன் எதுவும் சொல்லலயா?"
"இல்லை. சும்மாதான் நின்னுட்டு இருந்தான். மத்தவங்க அவனை எங்கிட்ட 'பேசுடா.. பேசுன்னு' சொன்னாங்க. ஆனால் அவன் வாயே திறக்கல நான் பார்த்ததும் தலைய குணிஞ்சிட்டான்"
"வேற ஏதாவது செஞ்சாங்களா?"
"இல்லை. அவன் பேசாததால 'தங்கச்சி போங்க'னு அனுப்பிட்டாங்க"
"அங்க நடந்ததை ஹஸ்னாட்ட சொன்னியா?"
"இல்லை சொல்லலை"
"நீ பயந்து நடுங்கிட்டு வந்ததை பார்த்தும் அவ எதுவும் கேட்காம விட்டிருந்தா அது பெரிய புதினமாச்சே"
"கேட்டாள். 'ஏன்டி பேயரைஞ்ச மாதிரி இருக்கனு'. ஓடி வரும்போது இடறி விழப் பார்த்தேன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்"
"நீ சொல்லாம விட்டதும் நல்லதுதான். இனி இதைப்பத்தி யார்டயும் சொல்லவும் தேவையில்லை. யோசிக்கவும் தேவையில்லை. இப்படி ஒன்னு நடந்ததையே மறந்திடு. சரியா?"
"ம்ம்ம்.."
"அந்த பையன் பேரென்ன?"
" அய்யாஷ்!"
"சரி நான் பார்த்துக்குறன். நீ பயப்படாம இரு. அநியாயத்துக்கு டியூஷனை கட்டடிச்சிட்ட"
"நீ சொல்லுவ. எவ்வளவு நடுக்கமா இருந்திச்சு தெரியுமா. நடுங்கியே காய்ச்சல் வந்திடுமோன்னு பயந்துட்டன். அதுவுமில்லாம உம்மாவையும், உன்னைய பார்க்கவே ஒருமாதிரி இருந்திச்சு. அதான் ரூமுக்குள்ளேயே இருந்தன்" மீண்டும் அவள் தலை கவிழ்ந்தது.