இப்போதெல்லாம் ரீஹா குட்டி ரய்யானைக் கண்டவுடன் பயந்து அழுவதில்லை. ரய்யான் விட்டுச் சென்றால்தான் ஒப்பாரி வைப்பாள்.
வந்து இருவாரத்தில் அழாமல் ரய்யானை எதிர்கொள்ள பழகிவிட்டாள்.
ரய்யானும் அவளிடம் நெருங்குவதற்காகவே தினமும் ஏதாவது வாங்கி வந்து கொடுப்பான். ஆரம்பித்தில் அதை வாங்குவதற்கு அவனருகில் சென்றாலும் முகத்தை பார்க்காமலே வாங்கிக்கொண்டு திரும்பி விடுவாள். அவள் விளையாட்டுப் பொருட்கள் சிறதவிடும்போது அதை எடுத்துக் கொடுப்பான். கிட்டப்போய் வாங்குவாள்.
இப்படி ஓரளவு பழக்கமானாலும் பின் பைக்கில் தினமும் ஒரு சுற்று ஏற்றிக்கொண்டு போய்வர நன்றாகவே அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
எப்படி 'ச்சி.. ச்சி..' என்று ஹிக்மாவை சுற்றுவாளோ அதேபோல ரய்யான் வீட்டுக்குள் வந்தாலே 'ச்சா.. ச்சா..' என்று அவனையும் விடுவதில்லை.
***
வழமைக்கும் இரவில் பத்துமணிக்கு முன்பே ஹிக்மா உறங்கிவிடுவாள். ரய்யானுக்கோ மணி பன்னிரண்டு தாண்டித்தான் கொஞ்சமேனும் தூக்கம் கண்ணில் எட்டிப்பார்க்கும்.
அதுவரை அவள் தூங்குவதை பார்த்துக்கொண்டும் தூங்கபவளிடம் மனதில் உள்ளதை புலம்பிக் கொண்டும் இருப்பான். சிலவேளை சமூக வலைதங்களில் நோட்டம் விடுவான். ஆனால் அதிலும் ஏதாவது ஒன்று மறுபடியும் ஹிக்மாவிடமே அவனை கொண்டுவந்து சேர்த்திடும்.
அப்படி அவன் பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கையில் அவனது நண்பன் ஒருவனின் போஸ்ட்டுக்கு ஷிரீனும் லைக் செய்திருந்தாள்.
முன்பெல்லாம் அவள் செய்ததை நினைத்தால்தான் வெறுப்பாக இருக்கும். இப்போது அவள் பெயரை நினைக்கவே வெறுப்பாயிருந்தது.
அந்த ராட்சசியால்தானே இந்த தேவதையை காயப்படுத்த நேர்ந்தது.
உறங்கிக் கொண்டிருப்பவளிடம் திரும்பினான். சற்று நெருங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மனமோ ஹிக்மாவை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.
'ஆடம்பர மோகமில்லை. வசதி வாய்ப்பைப் பார்த்து வாய் பிளக்கவில்லை. ஊரார் பொறாமைபட பகட்டோடு வாழ நினைத்ததில்லை. சொத்து சுகத்தை அனுபவிக்க யாரையும் மயக்கவில்லை. தனக்கு கிடைத்ததை மற்றவர்களிடம் பெருமையடித்து பறைசாற்றித் திரியவில்லை. அவளுக்கே கஷ்டம் என்றாலும் மற்றவர் மனம் நோகும்படியோ, மனம் கோணும்படியோ நடந்து கொண்டதில்லை'
விழித்துவிடாமல் மென்மையாக அவள் நெற்றியில் இதழை ஒத்தியெடுத்தான்.
ஒரு முறுவலுடன் சலனமில்லாம் அவனிடத்துக்கு வந்து படுத்துக்கொண்டான்.
'எத்தனை நாட்களுக்கு இப்படி திருட்டுத்தனமாக காதலிப்பது? எப்போது அவளிடம் உரிமையோடு உறவாடுவது? எப்போது என்னை ஏற்பாளோ? என் செல்ல ரோஷக்காரி!'
ஏக்கங்களிற்கு நடுவிலும் ஒரு நிம்மதி யாதெனில் ஹிக்மா அவனது மனைவியாகவே இருக்கிறாள். எப்போது ரய்யானை முழுமனதோடு கணவனாக ஏற்பாள் என்று தெரியாவிடினும் பிரிந்து போகாமல் அவன் வீட்டில் அவன்கூடவே இருப்பதே இப்போதைக்கு போதுமாக இருந்தது.
தூங்கபவளை கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். சிந்தனை இப்போது நடத்தையைவிட்டு அவள் தோற்றத்திற்கு தாவியது.
'அந்த ராட்சசியைப் போல வெளிறிய தேகமில்லை. அவளுக்கிருப்பது போல வில்லாக வளைந்த புருவங்களில்லை. மற்றவர்களின் தோற்றத்தை வைத்து பின்புலத்தை எடைபோடும் கண்களில்லை. கண்ணத்தில் குழியும் விழவில்லை. இருந்தும் ஷிரீனை விட பலமடங்கு அழகியாகவே தெரிகிறாளே'
உடல் முழுதும் மூடிக்கொண்டு முகம் மட்டும் தெரியவே படுத்திருந்தாள் ஹிக்மா. அப்படி பார்சல் போல உறங்குவதை பார்க்க சிரிப்பாக வந்தது அவனுக்கு.
ஏசியில்லாமல் ரய்யானுக்கு உறக்கம் வராது. அவளுக்கோ ஏசி குளிர் தாங்காது.
ரய்யான் சிலசமயம் வேண்டுமென்றே ஏசி காற்றை உயர்த்துவான். குறைக்க சொல்லி வினயமாகக் கேட்காவிடினும் குட்டி சண்டையேனும் போடமாட்டாளா என்கின்ற எதிர்பார்ப்பில்.
அவளுக்குமே 'ப்ளீஸ் கொஞ்சம் குறைச்சு வைங்களேன்' என்று கெஞ்சிடத் தோன்றும். ஆனாலும் 'அவன் வீடு. அவன் அறை. அவன் விருப்பம்' என்று கேட்காமலே இருந்திடுவாள்.
எனவே தன்னை போர்த்திக் கொண்டு தூங்குவதை தவிர அவளிடம் வேறு தெரிவுகள் இல்லை. அதனால் தினமும் இப்படி சுற்றிக்கொண்டு உறங்கலானாள். அவள் உறங்கியதுமே ரய்யான் ஏசியை குறைத்து விடுவான். அது அவளுக்கு தெரியாது.
கடைசியில் ரய்யான் ஏசியில்லாமலும், ஹிக்மா போர்த்திக்கொண்டும் தூங்கப் பழகிவிட்டார்கள்.
ரய்யான் நாடு திரும்பி ஒரு மாதம் முடிந்தாயிற்று.
ஹிக்மா அவனிடமிருந்து எந்த பொருளையோ, பணத்தையோ ஏற்பதற்கு தயாரில்லை என்னும் நிலைப்பாட்டிலே இன்னும் இருக்க அவளுக்கென்று வாங்கிவந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் அலமாரியில் தவம் கிடந்தன. ரய்யான் தினமும் அலமாரியை திறக்கும் போதெல்லாம் அவற்றை ஏக்கத்தோடு பார்ப்பான்.
நடைமுறையில் இருந்த மனக் கட்டுப்பாடுகளையும் மீறி ஹிக்மாவின் மனம் அடிக்கடி ரய்யானிடம் மயக்கம் கொண்டு தவிக்க ஆரம்பித்திருந்தது.
ஏற்கனவே அவனிடம் காதல்வயப்பட்டிருந்த மனதல்லவா அவளுடையது. அவளுக்குமே தடுக்கும் வழியறியாது பெரும் போராட்டமாகத்தான் இருந்தது.
இருவரும் அறையில் இருக்கின்ற நேரங்களில் ஹிக்மாவின் பார்வை அடிக்கடி அவனை வருடும். ரய்யான் பார்த்து விட்டால் பார்க்காததுபோல திரும்பிடுவாள்.
அவன் ஏதாவது நக்கல் செய்தால் ஒரு முறைப்போடு அவனைக் கடந்து விடுவாள். ஆனால் அன்றுமுழுக்க அதை நினைத்து நினைத்து சிரித்துக்கொள்வாள்.
ரய்யான் இரவில் கடையிலிருந்து வீடு திரும்பினால் அவளுக்கு சலாம் சொல்வான். அதேபோல காலையில் ஹிக்மா அவனுக்கு முதல் புறப்பட்டு பணிக்கு செல்வதால் போகும்போது எப்போதும் 'fe Amanillah' சொல்லி அனுப்பிவைப்பான்.
இப்போதெல்லாம் தினமும் அந்த வார்த்தைக்காகவும் நேரத்திற்காகவும் அவள் மனம் தவம் கிடந்தது.
அப்படி வேறேதாவது வேலையில் அவன் சொல்ல மறந்துவிட்டால் அவளுக்கு அந்நாளே பூரணமற்று குறையோடு கழியும்.
அன்றைக்கு ஹிக்மாவுக்கு கற்பித்தல் சம்பந்தமான வேலை கொஞ்சம் அதிகம் இருக்கவே இரவு உணவருந்தி வந்தபின்னும் உறங்காமல் எழுதிக் கொண்டிருந்தாள்.
அவள் நேரம் கடந்து விழித்திருப்பதை கண்டு வியந்தபடியே அவனும் கட்டிலில் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
தூக்கம் கண்களை முட்டிக்கொண்டு நின்றிருக்க வாயைப்பிளந்து வெளியேறத் துடித்த கொட்டாவியை ஹிக்மா சிரமப்பட்டு அடக்குவதை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்திருந்தான்.
இடையில் அவனது அழைப்பேசி சினுங்கியது. பார்வை அவளிடமிருந்து அழைப்பேசி திரைக்கு தாவியது. திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவுடன் பிரகாசமாய் புன்னகைத்தபடி உரையாடலை ஆரம்பித்தான்.
அவனது கைப்பேசியின் சினுங்கலில் ஹிக்மாவின் கவனமும் கலைந்தது.
"மாஷாஅள்ளாஹ்! சந்தோஷம்.."
" "
"ஆஹ் செரிடா கட்டாயம். எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க?"
" "
சலாத்துடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ரய்யானின் குரலில் தெரிந்த உற்சாகத்தையும், முகத்திலிருந்த பிரகாசத்தையும் பார்த்து ஹிக்மாவின் சிந்தனை முழுக்க 'அவன் யாருடன் பேசியிருப்பான்? அப்படி என்ன செய்தி சொல்லியிருப்பாங்க?' என்பதிலே இருந்தது.
அதை தெரிந்துகொள்ளாமல் அவளுக்கு வேலை ஓட மறுத்தது.
அழைப்பு துண்டிக்கப்பட்டாலும் இன்னுமும் அவன் பார்வை திரையிலிருந்து அகலவில்லை. கண்ணெடுக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் புன்னகை உதட்டை தாண்டி கண்களிலும் தெரிந்தது. ஹிக்மா ஆர்வமிகுதியில் தன்னையே மறந்து ரய்யானின் முகத்தையே உற்றுப் பார்த்திருந்தாள்.
அவனும் ஆசைதீர அழைப்பேசி திரையில் தெரிந்ததை கண்டு களித்தான். பின் அதை அணைத்துவிட்டு நிமிர அவனையே வைத்த கண் வாங்காமல் நோக்கியிருந்த ஹிக்மாவை கண்டுவிட்டான்.
எதிர்பாராமல் அவன் பார்த்துவிட்டதில் மாட்டிக்கொண்ட திருடன்போல விழித்தாள் ஹிக்மா.
அவனை எதிர்கொள்ள முடியாமல் அவள் பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது.
அவளது தடுமாற்றத்தை கண்டு சிரித்தான். அவளோ வேலையில் கவனம் செலுத்துவதாய் காட்டிக்கொள்ள முயல ரய்யானோ அவன் கண்டுவிட்டதை உறுதிப்படுத்த வேண்டுமென்றே குரலை செருமினான்.
"அஹெம்.. அஹெம்"
"நா.. நா.. நான்ன்.. நானொன்னும் உங்களைப் பார்க்கனும்னு பார்க்கல சரியா. சும்மாதான் பார்த்தேன். ஆனால் நான் பார்த்துட்டு இருக்கும்போது நீங்க திரும்பி பார்த்திங்க.."
பதற்றத்தில் ஹிக்மா உளறுவதை கண்டு இன்னும் சத்தமாக சிரித்தான்.
"நான் எதுவுமே சொல்லலையே. நீங்கதான் சொல்றீங்க" என்றான் கூலாக
"அது நீங்க அப்படி நினைச்சிட்டீங்கனா"
"நான் எதுவும் நினைக்கலையே. ஆனால் நீங்க இவ்வளவு டென்ஷனாகுறதை பார்த்தா ஏதாவது நினைச்சி இருக்கலாம்னு தோணுது"
"நான் ஒன்னும் டென்ஷாகல சரியா. நீங்க யாரோடயும் பேசுங்க.. சிரிங்க.. எனக்கென்ன டென்ஷன்? ஒரு டென்ஷனும் இல்ல. ஹும்ம்.."
அவனுக்கு தெளிவாகப் புரிந்துபோனது. போனோடு சென்று சோபாவில் அவளருகில் அமர்ந்தான்.
"இங்க பாருங்க. நீங்க எந்த விளக்கமும் தரத்தேவையில்ல. எனக்கு நிறைய வேலையிருக்கு. நீங்க சொல்ற கதையெல்லாம் கேட்டுட்டு இருக்க டைமில்ல" பிடிவாதமாக அவனை எதிர்கொள்ள மறுத்தாள்.
அவள் பேசுவதை சாட்டை செய்யாமல் தன் அழைப்பேசியை உயிர்ப்பித்து அவள் முன்பு வைத்தான். அவளோ கண்களை இறுக்கி் மூடிடாள். ஆனாலும் வாய் மட்டும் விடாமல் பேசியது.
"நீங்க யாரோட வேணும்னாலும் பேசுங்க எனக்கு கவலையில்லை. அது உங்க பேர்சனல். அதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லனும்னு எந்த கட்டாயமும் இல்லை. ப்ளீஸ் இதை எடுத்திட்டு போங்க. எனக்கு எதையும் பார்க்கத் தேவையில்ல"
சொல்லி முடிப்பதற்குள் போனை அவள் பார்ப்பதற்கு ஏதுவாக உயர்த்தி பிடித்து அவள் கண்களை திறக்கும்வரை காத்திருந்தான்.
Thanks for reading!
If u like this story pls support me with ur votes n comments