"Datha இந்த திங்கள் லீவுதானே"
"லீவுதான். ஆனா நிறைய வேலையிருக்கு ஹிம்னா. ஸ்கீம் போடனும். ஓ எல் வகுப்புக்கு எக்ஸாம் பேப்பர்ஸ் ப்ரிபெயர் பண்ணனும்"
"சரி அதை இங்க வந்தும் செய்யலாமே. நாநாவும் வந்திருக்கான். ப்ளீஸ் datha நீயும் வாயேன். எவ்வளவு நாளாச்சு வீட்டுக்கு வந்துட்டுப்போய்"
"சரி பாக்கலாம். ட்ரை பண்றேன். நீயும் அவனும் என்ன நிம்மதியா வேலை செய்யவா விடுவீங்க"
"இல்லயில்ல. வேலை செய்யிறப்ப எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டம். ப்ளீஸ் வாயேன்"
"சரி இன்ஷாள்ளாஹ் வார--" சொல்லி முடிக்க முதலே துள்ளிக்குதித்தாள் ஹிம்னா. ஹிக்மாவின் தங்கை.
"வியாழன் ஈவினிங் ரெடியா இரு. நாநா வருவான் உன்ன பிக் பண்ண" சொல்லிவிட்டு துண்டித்தாள்.
தங்கையிடம் வருவதாக சொல்லி விட்டாலும் மனது இன்னுமும் 'போகலாமா? வேண்டாமா?' விலே தத்தளித்துக் கொண்டிருந்தது.
வார இறுதியை தொடர்ந்து திங்கள் போயதினம். மூன்று நாட்கள் பாடசாலை விடுமுறை. அதனால்தான் அவள் வீட்டிலும்
அவளை அழைக்கிறார்கள்.
வீட்டுக்குப் போய்வர அவளுக்கும் ஆசைதான். எனினும் முடிக்க வேண்டிய சில பாடாசாலை அலுவல்களை நினைத்து அலுத்துக்கொண்டது மனது.
"ஆசையாக கூப்பிடறாங்க. நீங்களும் வீட்டபோய் நிறைய நாளாயிட்டு. எப்பவும் வேலை இருந்துட்டேதான் இருக்கும். லீவு கிடைக்கும் போது போய்டு வந்துருங்க மகள்" இஸ்மாயிலே சொல்லும் போது அவளுக்கும் சரியென்றே பட்டது.
மறுநாள் சொன்ன நேரத்திற்கு முன்னமே வந்து விட்டான் ஹிஜாஸ். ஹிக்மாவின் தம்பி. அவளைவிட சில வருடங்களே இளையவன். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறை இரண்டாமாண்டு மாணவன். அவனுக்கும் அதே விடுமுறையுண்டு. எனினும் மேலும் இரண்டு நாட்கள் சேர்த்து கட்டடித்து வீட்டுக்கு வந்திருந்தான்.
ஹிக்மா கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு பிறகு வீட்டுக்கு செல்கிறாள்.
எப்பவும் பெண்களுக்கு தாய்வீடு ஸ்பெஷல். ஆனால் இவளது விடயம் சற்று விசித்திரமாய் அமைந்து விட்டிருந்தது.
அவளைப் பொறுத்தவரையில் ரய்யானின் வீட்டில் சட்டரீதியாக முழு உரிமை இருப்பினும் அவள் அப்படி உணர்ந்ததில்லை.
பிரதான வீதியில் இருந்து ஊருக்கு செல்லும் கிளைப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. அன்று எதுவோ வழமைக்கு மாற்றமாக இருப்பதை ஹிக்மா உணர்ந்தாள். எப்போதும் எதையாவது வளவளத்துக்கொண்டே வரும் ஹிஜாஸ் கிளம்பியதிலிருந்தே எதுவும் பேசவில்லை.
"என்னடா சத்ததையே காணோம்? பேச்சு பெட்டிய ஹொஸ்டல்லயே மறந்து விட்டுட்டு வந்துட்டியா?!"
அப்போதும் சலித்துக்கொண்டானே தவிர எந்த பதிலும் சொல்லவில்லை.
"எக்ஸெம்ல ஏதும் பெயில் ஆகிட்டியாடா? ஆனா உனக்கு இந்த ஸெமிக்கு இன்னும் எக்ஸெம் பண்ணலையே.." கேள்வியையும் கேட்டு பதிலையும் அவளே சொல்லிவிட்டு
"என்னாச்சு உனக்கு? ஏதோ அப்ஸெட்டா இருக்க. சொல்லு?"
"அய்யோ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல datha. தலைவலி அவ்ளோதான். கொஞ்சம் பேசாம வாயேன்"
"அப்ப நீ எதுக்கு வந்த? ஒரு த்ரீவீல்கு சொல்லிவிட்டிருந்தா நானே வந்திருப்பனே"
இப்படி ஒருபோதும் அவன் நடந்துகொண்டதில்லை.
"இருக்கட்டும் பரவால்ல. இந்தா வீடே வந்திருச்சி. இறங்கு" என்றதும்தான் வீட்டின்முன் வண்டி நின்றதை உணர்ந்து இறங்கினாள்.
சலாம் சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். வழமைபோல் சுலைஹா உச்சி முகர்ந்து வரவேற்றார்.
ஹிஜாஸ் எதுவும் பேசாது அவனது அறைக்குள் புகுந்து விட
"ஏன்மா அவனை அனுப்பினீங்க? ஒரு த்ரீவீல் அனுப்பியிருக்கலாமே"
"ஏன்? அவனுக்கென்ன? வீட்டில சும்மாதானே இருந்தான்"
"அவனுக்கு தலைவலியாமே. கேட்டதுக்கு சிடுசிடுன்னு இருந்தான்"
"கிளம்பும்போது கூட நல்லாத்தானே இருந்தான். என்னவோ எனக்குத்தெரியல" என அலுத்துக்கொண்டு நகர்ந்தார் சுலைஹா.
"Datha!" என்று கூவியபடி வந்து அக்காவை கட்டிக்கொண்டாள் ஹிம்னா.
இருவரும் சுகநலன் விசாரித்தபின் ஹிக்மா தங்கையிடம்
"உன் நாநாக்கு என்னாச்சு. எப்பவும் ப்ரிட்ஜ்ல வச்ச தயிர் மாதிரி குளுகுளுன்னு இருப்பானே. இன்னைக்கு எண்ணெய் போட்ட கடுகு மாதிரி சிடுசிடுன்னு இருக்கான்"
"ஆமா! இந்தமுறை வீட்டுக்கு வந்ததுல இருந்து நானும் கவனிச்சிட்டுத்தான் இருக்கன். ஆள் சரியில்லை. கெம்பஸ்ல யாரையோ லவ் பண்றான் போல. அடிக்----" பெரியமனுசி போல சொல்லிக்கொண்டு போனவளின் இடதுகாது சுரீரென வலியெடுக்கவும் "அஅஆஆஆஆ.. " என அலறினாள்.
"எருமமாடு நாநா விடு டா!!!!" ஹிஜாஸிடம் இருந்து விடுபட துடித்தாள்.
"முடியாது. எதுக்கு இந்தமாதிரி dathaட்ட பொய் சொல்ற? இனி இப்படி பேசமாட்டனு சொல்லு விடுறன்"
"அப்ப நீ எதுக்கு அடிக்கடி ரூமை லொக் பண்ணிட்டு குசுகுசுனு போன் பேசனும்?"
"அப்படி பேசினா லவ் பண்றனு அர்த்தமா?" ஒரு குட்டு குட்டிவிட்டே அவளை விடுவித்தான்.
"ஓ அப்படித்தான். கலியாணம் பண்ணவங்க லவ் பண்றவங்கதான் ரூமை மூடிட்டு போன் பேசுவாங்க. Dathaவும் மச்சானோட போன் பேசுறப்ப ரூமை மூடிட்டுத்தானே பேசுவா. நீயும் அப்படித்தான் பேசுற. அதான் சொன்னேன்" ஹிம்னா அண்ணனிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு போக ஹிக்மாவுக்கு மனதுக்குள் சுருக்கென்றது.
அது தெரிந்தது போலவே ஹிஜாஸும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் ஏதோ மிகை அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது. அவள் சங்கடப்படுவதை உணர்ந்து பார்வையை ஹிம்னாவிடம் திருப்பினான்.
"பெரிய கண்டுபிடிப்பு. பிஞ்சுலயே பழுக்காம போய் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியப்பாரு"
"முடியாது. போடா பொடலங்கா!" என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஹிக்மாவுக்கு வீட்டுக்கு வரப் பிடிக்குமென்றாலும் அவளது தயக்கத்திற்கு காரணமே ரய்யான்தான்.
'ரய்யான் பேசினாரா?'
'ரய்யான் எப்படி இருக்காரு?'
'ரய்யான் என்ன சொல்றாரு?'
'ரய்யான் எப்ப ஸ்ரீலங்கா வர்றாராம்?'
'ரய்யான் பேசினா நாங்களும் ஸலாம் சொன்னனு சொல்லும்மா'
இப்படி ஆளாளுக்கு அவனைப்பற்றி கேட்டு அவளைத் துளைத்தெடுப்பார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஹிக்மாவும் ரய்யானும் எல்லோரையும் போல சந்தோஷமான தம்பதிகள். அப்படித்தான் ஹிக்மா அவள் குடும்பத்தாரிடம் நடித்துக் கொண்டிருக்கிறாள். தெரியும்போது தெரிய வரட்டும். அதுவரைக்குமாவது மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்றே எதையும் சொல்லவில்லை.
ஆனால் ஹிஜாஸ் அவளை பார்த்தபார்வை இன்னும் அவள் மனதை பிசைந்தெடுத்தது.
'தன் திருமணவாழ்க்கை பற்றிய உண்மை எதுவும் அவனுக்கு தெரிந்து விட்டதோ? ரய்யானின் வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அவர்களும் யாரிடமும் சொல்லக்கூடியவர்கள் இல்லை. பிறகெப்படி?'
ஹிக்மாவை பயம் தொற்றிக்கொண்டது. எப்படியோ இதுதான் விதியென்று இந்த வாழ்க்கையை வாழப் பழகியாயிற்று. இப்போது திடீரென தன் வீட்டில் உண்மை தெரியவந்தால் அவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்களோ? நானென்ன செய்வது? மறுபடியும் ஒரு அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க மனதளவில் சிறிதளவேனும் அவள் தயாரில்லையே.
உண்மை தெரியவரும்போது தாயும், தந்தையும் உடைந்து போவார்களே என்ற பயமே கழுத்தின் மீது கத்தியாக இருந்தது.
பயத்தில் இரண்டு ரகாத் தொழுதுவிட்டாள்.
'யா அள்ளாஹ் என்னால் கையாள முடியாத நிலைமையை எனக்கு ஒருபோதும் தந்திடாதே!' என்று திரும்பத் திரும்ப வேண்டினாள்.
பெருமூச்சுடன் தொழுகை விரிப்பை மடித்து வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு விஞ்ஞானப் புத்தகத்தோடு அமர்ந்தாள்.
பாடப்பரப்பில் எந்தெந்த பகுதிகளில் வினாக்களை எடுப்பது என்று தனது குறிப்பேட்டில் குறித்துவைத்தாள்.
இடையில் அவளது தொலைபேசி அலறியது. யாரென்று பார்க்கமுன்பே அழைப்பு நின்றுவிட வேலை மும்முரத்தில் யாரென்று பார்க்க மறந்து போனாள்.
இரண்டு கட்டமைப்பு வினாக்களை தயாரித்து முடியவே வாயைப்பிளந்து வெளியில் வரத்துடித்த கொட்டாவியை புறங்கையை வைத்து மறைத்தாள்.
குறிப்பேட்டை புத்தகத்துக்குள் வைத்து மூடிவிட்டு போனை கையில் எடுத்தாள்.
அவளது தவறிய அழைப்பு வட்ஸ்ஸப்பில் வந்திருக்க அதை ஓபன் செய்து பார்த்தவள் ஒரு கணம் திகைத்தாள். உள்ளங்கைகளில் குளிர் பரவ ஆரம்பித்தது.
அது R என்ற பெயரில் இருந்தது. ரய்யானின் நம்பரை அவள் அப்படித்தான் பதிவு செய்து வைத்திருந்தாள்.
இந்த ஆறுமாதத்தில் ஒரு தடவையேனும் இருவரும் தொடர்பு கொண்டதில்லை.
'இத்தனைநாள் இல்லாமல் இன்று ஏன்?'
'ஒரே ஒருமுறைதான். அதுவும் முழுதாக ரிங்காகவில்லை. சில நொடிகளில் நின்றுவிட்டது. ஏதோ தவறுதலாக டச்சாகியிருக்கும்' மூளை மனதை சமாதானம் படுத்த ஒருவாறு அவளுக்கு பயம் தெளிந்தது.
சுலைஹா அனைவரையும் சாப்பிட அழைத்தார். தவறுதலாக வந்த அழைப்பு என்று மனது ஏற்றுக்கொண்டாலும் போகும்போது போனை சைலன்டில் போட்டுவிட்டே சென்றாள்.
ஹாலித்தும் கடையிலிருந்து வந்திருக்க அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஹாலித் ஹிக்மாவிடம் மாமனார் வீட்டைப்பற்றி விசாரித்தார்.
"அல்ஹம்துலில்லாஹ் எல்லாரும் நல்ல சுகம் வாப்பா. மாமா உங்களுக்கு சலாம் சொல்ல சொன்னாங்க "
"ரய்யான் மகன் பேசினாரா? என்ன சொல்றாரு?" அடுத்து மருமகனைப்பற்றி விசாரித்தார்
ஹிக்மாவை ஊடுருவும் பார்வை பார்த்தபடி அவளுக்கு நேரெதிரே அமர்ந்திருந்தான் ஹிஜாஸ். அவன் பார்வையில் திணறியவள் தந்தை கேட்டதை உள்வாங்கத் தவறினாள்.
"என்ன ஹிக்மா மகன் பேசினாரா? எப்படியிருக்காரு?"
"ஹான்.. வாப்பா இருக்காரரு.. அல்ஹம்..துலில்..லா" வாய் தந்தியடித்தது அவளுக்கு.