விடியற்காலை பனியின் குளிரை மெது மெதுவாய் விளக்கி தன் சகாக்களைப் பார்க்கவென தன் கதிர்களை பாரினில் விரித்து வெளியே வந்தான் கதிரவன்.இலைகளின் மேல் பதிந்திருந்த பனித்துளிகள் கதிரவனைக் கண்டு பயந்தோடின. தம் குஞ்சுகளுக்கு இரை தேட பறவைகள் வெளிக் கிளம்ப இயற்கை அன்னை தன் கடமைகளை யாருக்கும் தொந்தரவில்லாமல் அமைதியாய் செய்து கொண்டிருந்தது. இயற்கைக்கே அமைதியைக் கற்றுக் கொடுத்தவள் போல சாந்தமே உருவாக துயிலில் இருந்தவளை யன்னலினூடே வந்த கதிரொளி தாக்க கண்ணீர் குளத்தில் நீந்தும் மீன்களான தன் கயல் விழிகளை கசக்கியவாரே எழுந்தமர்ந்தாள் ஒருத்தி.
படுக்கையை சரி செய்தவள் யன்னலினருகே நின்று வெளியை ரசிக்க,நீ பார்ப்பதை நானும் பார்ப்பேன் எனக் கூறிக்கொண்டு வெளியே வந்தது இரு கண்ணீர்த்துளிகள். அவசரமாய் அதைத்துடைத்தவள் குளியலறை நோக்கி நடக்க. அவளைத்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் இவளின் தம்பி அகிலன்.
அகிலன் இவளை விட இரண்டு வயது சிறியவன். இவளை அழ வைக்கவென்றே பிறந்தவன். இவர்கள் சண்டை பிடிக்காமல் ஒரு நாள் நகர்ந்ததென்றால் இருவரில் ஒருவர் வீட்டில் இருக்காத நாள் தான்.
இவளும் விட்டு கொடுத்து போக மாட்டாள். சண்டை என்று வந்து விட்டால் இரண்டில் ஒன்றை பார்த்து விடுவோம் என்ற முடிவோடு தான் இருப்பாள்.
மற்றைய நாளாக இருந்தால் இந்நேரம் அவன் தள்ளி விட்டு சென்றதுக்காக அவனை நோக்கி எதையாவது வீசி எரிந்திருப்பாள். ஆனால் இன்று அமைதியாக அவன் தள்ளி விட்டதில் சுவரோடு ஒட்டி நின்றவள் அப்படியே நின்று கொண்டாள்.
எங்கே தன்னை நோக்கி எதுவும் இன்னும் பறந்து வரவில்லையே என திரும்பி பார்த்த அகிலன் அவள் அமைதியாய் இருப்பதை பார்த்து விட்டு "அம்மா... இன்னைக்கு எதையும் வெளில காய வெச்சிராதீங்க... இன்னைக்கு மழை தான்..." என சொல்லி விட்டு வாஷ் ரூமுக்குள் நுழைந்தான்.
தாய் அஞ்சலி சட்டியில் இருக்கும் எதையோ கிளறிக்கொண்டே "காலைலயே அவள சீண்டாதன்னு எத்துண தடவை உனக்கு சொல்லி இருக்கேன்... சட்டு புட்டுன்னு உன் வேலைய முடிச்சிட்டு வா... அவளுக்கு கிளாஸ் இருக்கு... அவ நேர காலத்தோட போகணும்..." என குரல் கொடுத்தார்.
ஏதோ ஒரு ஏக்கத்தோடு தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு இரவு படித்துவிட்டுக் கலைத்துப்போட்டிருந்த மேசையை சரி செய்து விட்டு வந்த வேளை குளியலறை காலியாக இருந்தது. அகிலன் சமையலறையிலேயே ஒரு கதிரை போட்டு அமர்ந்து கொண்டு மிக்ஸர் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
இவள் குளியலைக்குள் செல்ல பார்க்கையில் திடீரென்று இவள் வழியில் காலை நீட்டினான் அகிலன். எழுந்த கோபத்தை வெறும் ச்ச... என்ற சத்தத்தில் அடக்கியவள் அதை தாண்டி சென்று குளித்து விட்டு வந்தாள்.
அமைதியாய் உணவுண்டு விட்டு முழங்கால் வரை நீண்டிருந்த கூந்தலை பிண்ணலிட்டு மடித்துக்கட்டி சீறுடை அணிந்து வானவில்லாய் வளைந்திருந்த புருவங்களிடையே பொட்டிட்டவள் தன்னை சரி பார்க்க கண்ணாடியைப் பார்த்தாள். அப்போது கண்கள் மீண்டும் நனைய அவசரமாய் பையை போட்டுவிட்டு
"மா நான் போறேன்" எனக் கூறிச் சென்றவளை தடுத்தது "ஏய் நில்லு" எனும் தந்தையின் குரல். திரும்பி தந்தையிடம் வந்தவள் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டு விட்டு "எல்லாருக்கும் சொல்றேன்... போறேன்..." என சொல்லி விட்டு ஓடினாள். சில காலமாக "போய் வாரேன்" என்பது "போறேன்" என மாறியிருந்தது.
வீட்டையே இரண்டாக்குபவள் இலையசைவது போல் அமைதியாய் இருப்பது வருத்தமாக இருந்தது தாய் மோகனாவிற்கு. ஆனாலும் பரீட்சை டென்சனாக இருக்கும் என நினைத்து விட்டு விட்டார். தந்தை சங்கரோ எந்த வித மாற்றத்தையும் உணராமல் வழமை போலவே தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
டியூஷன் வந்தவள் தன் தோழி சத்யா பிடித்திருந்த இடத்தை தவிர்த்து கடைசி பென்சில் சென்றமர்ந்தாள். தன்னருகில் இவளுக்கு இடம் கொடுக்காவிட்டால் தன் தலையில் உலக்கையால் இடிப்பது போல அடிக்கும் தன் தோழியா இது என மயங்கி விழாத குறையாய் நின்று கொண்டிருந்தாள் சத்யா.என்ன தான் கவலையில் இருந்தாலும் தன்னிடம் பேசாமல் இருக்க மாட்டாளே என்ற யோசனையே சத்யாவுக்கு வகுப்பு முழுவதும் இருந்தது. கேக்கும் எல்லா கேள்விகளுக்கும் முந்தியடித்துக்கொண்டு பதில் சொல்பவள் இன்று ஏதோ ஜடம் போல் இருப்பதைக்கண்டு தன்னை ஒரு முறை கிள்ளிக் கொண்டார் அந்த கெமிஸ்ட்ரி வாத்தியார்.
அவள் வேறு ஏதோ யோசனையில் இருப்பதை கண்டவர் "வேற வேற உலகத்துல உள்ளவங்க எல்லாரும் இங்க வந்துருங்க... எக்ஸாமுக்கு இன்னம் கொஞ்ச நாள் தான் இருக்கு... கவனம் எடுத்து படிங்க பிள்ளயல்..." என்றார். ஏதோ அவளுக்கே சொல்வது போல இருக்க சொரி சார்... என முனுமுனுத்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்த முயற்சித்தாள்.
இடைவேளை வரை பொறுத்து கொண்டு இருந்தாள் சத்யா. சரி இன்டர்வல் நேரத்தில் தன்னிடம் கதையளக்க வருவாள் என பார்த்து கொண்டு இருந்தவள் வராமல் போகவும் கோபமாய் எழுந்து அவள் அருகே சென்று உட்கார்ந்து கொண்டு
"ஏய் என்னாச்சிடி உனக்கு? அம்மா திட்டினாவா?"
"இல்ல"
"அப்பா"
"இல்ல"
"அண்ணா"
"இல்ல"
"இப்போ கன்பர்ம் இன்னகிம் தம்பி கூட சண்ட அம்மா தம்பிக்கு சப்போர்ட் பண்ணிருப்பா கரக்டா?"
"இல்ல"
"அடியே இத்துன வருஷத்துல நீ மூஞ்ச தூக்கி வெச்சிக்குர விசயமெல்லாத்தயும் சொல்லிட்டேன் இது எதுவும் இல்லனா அப்டி என்ன தான் டி பிரச்சின உனக்கு?"
இதற்கு மேலும் மௌனமாக இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து எனக் கருதி
"அது வந்து தியா..."
சத்யாவை எப்போதும் இவள் செல்லமாக தியா என்று தான் அழைப்பாள். அவள் முன் அவளை தவிர வேறு யாரேனும் சத்யாவை அப்படி அழைத்தால் இவள் இரத்தம் கொதிக்கும்.
"அது என்னான்னா....... என்ன்ன்ன்ன்ன்...."
"சொல்லித்தொலையேண்டி உசுர வாங்காம"
"போடி என்ன தொலைனு சொன்னேல்ல உன் கூட இனி பேசவே மாட்டேன் போடி" என மூஞ்சை திருப்பி கொண்டு மேசையில் படுத்தாள்.
"ச்ச லூசாடி சத்யா நீ?அவளா சொல்ல வந்தா கெடுத்திட்டியேடி, இனி யாரு நெனச்சாலும் அவகிட்ட இருந்து வார்த்தைய வர வைக்க முடியாது. உன் வாய செறுப்பாலே அடிக்கனும். அய்யோ அவகிட்ட மன்னிப்பு எடுக்கனும்னா என் பாக்கட் காலியாகிருமே! வேற வழி இல்ல மய் டியர் பாக்கட் அயம் சாரி."
எனக் கூறிக்கொண்டே கண்டீனுக்குச் சென்றாள். தோழிக்காய் திண்பண்டம் வாங்க.