ஆதித்திற்குத் தன்னை நினைத்தே கோபமாக வந்தது.
'உன்னிடம் நட்பை மட்டுமே எதிர்பார்க்கும் சின்னப் பெண்ணிடம், எப்படி உரிமைகள் எடுத்துக்கொள்ள மனது வருகிறதோ உனக்கு! ஒருவேளை தவறாக ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்!?'
ஆற்று மணலில் நடந்து காற்று வாங்கும்போது, பனிப்பட்டு அவள் சிவக்க, மனது அவன் பேச்சைக் கேட்காமல் அலைபாய்ந்து, அந்தப் பட்டுக் கன்னங்களைத் தொட்டுப் பார்க்கவேண்டும்; மூக்கின் நுனியைப் பிடித்துக் கொஞ்சவேண்டும் என்றெல்லாம் அடம்பிடிக்க, சட்டென அதிர்ந்தவன் பத்தடி விலகி நின்றான் அவளிடமிருந்து. தனக்குள் நடக்கும் மாற்றங்களின் காரணத்தை அறியாமல் அவன் தடுமாற, அவள் முகத்திலோ காயம்பட்ட உணர்வொன்று அரைக்கணம் வந்துசென்றது.
'பாட்டியும் பெற்றோரும் சேர்ந்து நடத்தும் விளையாட்டு இது. இதில் இருவருமே பகடைக் காய்கள் தான். நடுவே இம்மாதிரி எண்ணங்களுக்கு இடம் தராதே ஆதித்! தவறு இது!'
வாய்பேசாமல் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டு வீடுசேர்ந்தவன், தன்னறைக்குத் தனிமைதேடிச் செல்ல நினைக்க, அதுவும் முடியாமல் வீட்டிலிலுள்ள பெரியவர்கள் இடைநிற்க, கோபமாகக் குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான் ஆதித்.
அரைமணி நேரம் குளிர்ந்த ஷவரின் அடியில் நின்று தன்னை சமன்படுத்திக்கொண்டு, தாராவிடம் மன்னிப்போ, சமாதானமோ கேட்க நினைத்து அவள் நின்றிருந்த பால்கனியை நோக்கி அவன் விரைந்தான். ஆனால் எதிர்பாராவிதமாக அவளும் அதே நேரம் அவனைத்தேடி வர, அவள்மீது மோதிவிட்டான் அவன்.
அவள் தடுமாறி விழப்போகவும் அனிச்சையாக அவன் கைகள் வேலை செய்து அவளது இடையைச் சுற்றிப் பிடித்து அவளை விழாமல் தடுத்திருக்க, அதேபோல அவளும் பதற்றத்தில் அவன் தோள்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, அந்த அசாத்திய சூழலில் இருவரின் மனங்களும் படபடத்தன. என்ன செய்யவெனத் தெரியாமல் இருவரும் செயலற்று நிற்க, தாராவின் கைபேசிச் சத்தம் உரக்க அடித்து இருவரையும் திகைக்கச் செய்தது.
அவளை விழாமல் நிற்கவைத்துவிட்டு அவன் விலக, அவள் அவனையும் கைபேசியையும் மாறிமாறிப் பார்த்தபடி அதை எடுக்க ஓடினாள்.
அம்மாதான் அழைத்திருந்தார் ஊரிலிருந்து.
"ஹ..ஹலோ.. அ..அம்மா?"
"தாரா, என்னடா குரல் ஒருமாதிரி இருக்கு? குளிர்ல நிக்கிறியா என்ன? ஏன் நடுக்கமா பேசற?"
"அ.. அதெல்லாம் இல்ல.. சொல்லுங்க, எப்டி இருக்கீங்க? தன்னு என்ன பண்றான்?"
"தன்னுவுக்கு எக்ஸாம் வந்தாச்சு. ஆனா இன்னும் படிக்காம திரியுறான்.. நானும் சொல்லிட்டே இருக்கேன், கேக்க மாட்டேங்கிறான். அப்பா வந்து நாலு அடி போட்டாத் தெரியும்!"
ஆதித் தலையைத் துவட்டியபடி வெளியே சென்றுவிட, தாரா அவனையே பார்த்தவாறு நின்றாள். பதில் வராததால் எதிர்முனையில் தேவி உரக்க அழைத்தார்.
"தாரா.. தாரா கேக்குதா?? சிக்னல் சரியில்லையா?"
"ஹான், கேக்குதும்மா.. சொல்லுங்க"
"என்னம்மா, ஒருமாதிரி பேசற.. எனக்கு மனசே கேக்கல. உன்னை யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா? இல்ல, தனியா இருக்க கஷ்டமா இருக்கா?"
"ஐயோ அதெல்லாம் இல்லம்மா.. எம்டி பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்காங்க. இங்க வீடே கலகலன்னு தான் இருக்கு."
"அட, பர்வதம்மா வந்திருக்காங்களா? எங்கிட்ட சொல்லியிருந்தா உனக்கு ஒப்புட்டும் அதிரசமும் பண்ணித் தந்துவிட்டுருப்பேனே..? ப்ச்.."
"அ.. அவங்க அப்பாகிட்ட சொன்னதா சொன்னாங்களேம்மா?"
தேவி சிலநொடிகள் மவுனமானார். பின் தயக்கமாக, "ஹும்.. அவரு மறந்திருப்பார்" என்றுவிட, தாராவிற்கு ஏமாற்றமும் ஆயாசமும் பிறந்தன.
இணைந்து வாழ்ந்து குடும்பம் நடத்தும் நோக்கத்துடனே திருமணம் செய்திருந்தாலும்கூட, சிறிதுகூட மனைவி மீது அக்கறையோ மரியாதையோ இல்லாமல் இருக்கும் சீனிவாசனை நினைக்கையில், அவர்களுக்காக உழைக்கும் நல்ல தந்தையாக இருந்தாலும், அன்னை தேவிக்கு ஒரு நல்ல கணவனாக இல்லை என்று தோன்றியது. அதேகணம் ஆதித்தை நினைத்துப்பார்க்க, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்மீது அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் அவன் தன் தந்தையைவிட எத்தனையோ மடங்கு சிறந்தவன் என மெச்சிக்கொண்டாள் அவள்.
"அம்மா.. இன்னிக்கு அவர் என்னை வெளிய கூட்டிட்டுப் போனார்.. சாப்பிட. ஆத்தங்கரை ஓரத்துல இருந்த ஒரு குட்டி கடைக்கு. சின்னக் கடைன்னாலும், அவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா? ஆத்தங்கரை காத்தும் குளிரும், அதனோட பாட்டும், சாப்பாடும்.. அவ்ளோ செம்மையா இருந்தது!"
தேவி சிரித்தார்.
"ம்ம், சரிதான்.. மாப்பிள்ளைகூட நல்ல ராசியாயிட்ட போல! முதல் தடவை மாப்பிள்ளையைப் பார்த்தப்பவே நல்ல மாதிரின்னு தான் தோணுச்சு. கடவுளா பார்த்து உன்னை அவர்கிட்டவே சேர்த்தி வெச்சிட்டார். எப்படியோ, நீ சந்தோஷமா இருந்தா போதும்டா தாரா எனக்கு."
அவர் சொல்லவும்தான், முதன்முதலில் ஆதித் தன்னைப் பார்க்க வந்த நாள் நினைவுக்கு வந்தது. தாரா அதில் வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
'நீங்க நல்லா தான் இருக்கீங்க. நல்ல ஹைட், வெய்ட், அப்றம் கலர். உங்களுக்கு கண்டிப்பா நல்ல பொண்ணா கிடைப்பா!'
அது தானாக இருப்போமெனக் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை அவள். இன்றோ அவனுடன், அவன்வீட்டில், அவனது நெருக்கத்தில்.
நினைத்தபோது உள்ளூர சிலிர்த்தாள் அவள்.
வந்ததுமுதலே தன்னை அன்போடும் மாண்போடும் நடத்திய அவனது குணம் பிடித்திருந்தது. சுதந்திரம் தந்து தன்னை வெளியுலகத்தைப் பார்க்கச் சொன்ன அவனது பண்பு பிடித்திருந்தது. சந்தேகமோ கேள்விகளோ கொண்டு இம்சிக்காமல், 'உன் விருப்பப்படி இரு, கவனமாக மட்டும் இரு' என்கூறிய முதிர்ச்சி பிடித்திருந்ததை. 'பிடித்ததைத் தேர்ந்தெடுப்பதற்குத் தயக்கமோ பயமோ தேவையில்லை' என்ற அவனது கொள்கையும் பிடித்திருந்தது.
சற்றுமுன் அவன்மீது மோதி விழப்போனபோது தாங்கிப் பிடிக்கையில் அவன் கண்களில் தெரிந்த கரிசனம் கூடப் பிடித்திருந்தது. தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள் தாரா.
அம்மா சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பை வைக்க, அவளும் மெதுவாக அறையில் பார்வையை சுற்றினாள் அவனைத் தேடி.
அவனைக் காணாமல் வெளியே வந்து பார்த்தபோது, வேறொரு அறையில் அமர்ந்து கணினியில் ஏதோ தட்டச்சு செய்துகொண்டிருந்தான் ஆதித்.
அவள் வரவையறிந்து நிமிர்ந்தவன், "எ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. லேட்டாகும்.." என்றான்.
"ஓ.."
ஒன்றும் பேசத்தோன்றாமல் இருவரும் தரையைப் பார்த்தபடி இருக்க, ஆதித் சில நொடிகள் கழித்து நிமிர்ந்தான்.
"அங்கே என்ன--"
"நான் உங்ககிட்ட--"
இருவரும் ஒரே நேரத்தில் ஏதோ பேசவந்து, பின் சட்டென நிறுத்தினர். அவளைப் பேசுமாறு ஆதித் கண்காட்டினான்.
"அ.. அது.. நான் உங்ககிட்ட.. உங்கமேல.."
"ஸாரி.. நான்தான் தெரியாம.. வேகமா வந்து.. உன்னை இடிச்சிட்டேன்.. ஐம் ஸாரி.. நான் பார்க்கல.."
"ஹான்.. பரவால்ல.. நானும் பாக்கல.."
"இன்னைக்கு உன்கூட வெளிய வந்தது.. பிடிச்சிருந்தது. ஒரு நல்ல சேஞ்ச், என்னோட வழக்கத்திலிருந்து."
"எனக்கும் பிடிச்சிருந்துச்சு. தேங்க்ஸ்."
"ஹ்ம், நீ போய்த் தூங்கு. குட்நைட்."
அவன் கூறிவிட்டுத் திரும்பிக்கொள்ள, ஏதோ கூறவந்த தாரா அமைதியானாள். ஒரு ஏமாற்றப் புன்னகையுடன் திரும்பிச்சென்றாள்.
****
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக நகர்ந்துவிட, வாரக்கடைசியாக வெள்ளிக்கிழமை வந்தது.
தாரா கல்லூரிக்குக் கிளம்பி உணவுமேசைக்கு வர, ஆதித் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி அமர்ந்திருந்தான். மாதவனும் உஷாவும் அப்போதுதான் எழுந்து வந்தனர்.
"ஆதித்.. நானும் மம்மியும் ஈவ்னிங் ஃப்ளைட்ல கிளம்பறோம் ஸ்டேட்ஸுக்கு."
ஆதித் வியப்பாக நிமிர, தாராவோ அதிர்ச்சியாக எழுந்தாள்.
"மாமா, என்ன சொல்றீங்க? அத்தை.. என்னத்தை இது திடீர்னு?? நீங்களும் ஊருக்குக் கிளம்பறீங்களா? ஏன்?"
ஆதித் அவளையும் பெற்றோரையும் மாறிமாறிப் பார்த்தான். வெறும் நான்கு நாட்கள் பழகிய மனிதர்களைப் பிரிய அவள் இவ்வளவு வருத்தப்படுவாள் என அவன் நினைக்கவில்லை.
உஷா அவளை ஆதுரமாக அணைத்துக்கொண்டார்.
"உன்கூடவே இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்டா தங்கம்.. ஆனா வேலை இருக்கே... சியாட்டில் என்ன, இங்கிருந்து வெறும் எட்டு மணிநேரம்! உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா ஓடி வந்துற மாட்டோமா?"
"இ..இருந்தாலும்.."
தாராவின் குரல் ஈரமாக ஒலிக்க, மாதவனும் வந்து அவளை சமாதானம் செய்தார்.
"தினமும் ஃபோன்ல பேசலாம், வீடியோ கால்ல பேசலாம். அவ்ளோ ஏன், ஆதிக்கிட்ட கேட்டா உன்னை உடனே எங்ககிட்ட கூட்டிட்டு வந்துடுவான்! நீ இதுக்கெல்லாம் அழக்கூடாது தாராம்மா!"
"இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போலாமே மாமா?"
கெஞ்சுதலாக அவள் கேட்க, ஆதித்திற்கும் அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நன்றாகத்தான் இருக்குமெனத் தோன்றியது.
"எஸ் டாட்.. வீக்கெண்ட் இருந்துட்டு மண்டே போலாம்தானே?"
"இல்ல ஆதித், அங்கே எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கும். யு அண்டர்ஸ்டாண்ட் ரைட்?"
அமைதியாகத் தலையசைத்தான் அவன். முன்பென்றால் சம்பாஷணை இதுவரை நீட்டித்திருக்காது. அவர்கள் கிளம்புகிறார்கள் என்றால் இவன் தலையசைத்து வழியனுப்பி வைப்பான். ஆனால் இம்முறை சற்றே சோகமாக இருந்தது.
ஏதோ தோன்றவும், எழுந்து இருவரையும் மென்மையாக அணைத்து விடுவித்தான் அவன்.
"I'll miss you guys."
உஷா ஆச்சரியமாக, ஆனால் பூரிப்பாகப் பார்த்தார் அவனை.
அப்போது வந்த பர்வதமும் மூவரையும் பார்த்துவிட்டு, "ஆதித், பாட்டிக்கும் கோயமுத்தூருக்கு டிக்கெட் போட்டுருப்பா.. வெள்ளனவே நானும் கிளம்புறேன்" என்க, தாராவோ அழும் நிலைக்குச் சென்றிருந்தாள்.
ஆதித்தின் கையைப் பிடித்துக்கொண்டு, "ப்ளீஸ்.. யாரையும் கிளம்பவேணாம்னு சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.." என அவள் கெஞ்ச, அவனோ திகைப்புடன் நின்றான்.
******
தாரா என்ன சொல்ல வந்திருப்பா??
ஒருவழியா எல்லாரும் கிளம்பிப் போறாங்க.. ஆனா தாராவுக்குக் கஷ்டமா இருக்கு. ம்ப்ச்.. பாவம் குழந்தை.
ஆதித் தன்னோட பேரண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் அன்னியோன்யமா ஆகியிருக்கான்.. எழுதும்போது எனக்கு புல்லரிச்சுப் போச்சு! இந்த அத்தியாயம் எழுதும்போது ஏனோ ஃபோனைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருந்தேனாம்.. எங்க அம்மா சொன்னாங்க. படிக்கற நீங்களும் அப்படித்தான் படிச்சீங்களா?
கதை பிடித்திருந்தால்.... உங்களுக்கே என்ன செய்யணும்னு தெரியும்ல? அதை செய்ங்க! நன்றி!
அன்புடன்,
மது