ஆதித்தின் கண்களில் வழக்கத்திற்கு மாறான ஓர் அதிசயப் பார்வையை அவள் கண்டு திகைத்து நிற்க, அவனோ அரைக்கணத்தில் பார்வையை மாற்றிக்கொண்டான்.
"போலாமா?"
பர்வதம் வந்து அவனைத் தோளில் இடித்தார்.
"என்னடா, பிஸினஸ் பார்க்கவா போறீங்க, மொட்டையா இப்படி கூப்பிடற? நல்லா அன்பா அவ பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, கையைப் பிடிச்சு கூப்பிட்டுப் போ! எத்தனை நாளைக்குத் தான் இதையும் நாங்களே சொல்லித் தர்றது?"
தாராவிற்கு நாணம் அதீதமாக வர, தலையைக் குனிந்துகொண்டாள் அவள். ஆதித் லேசாக செருமியவாறு, "தாரா, வா போகலாம்" என்றபடி கைநீட்ட, அவளும் தயக்கமாக அவன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.
இருவருக்குமே சற்றுக் கலவரமாக இருந்தது உள்ளூர. திருமணத்தின்போதுகூட இவ்வாறு கைப்பிடித்து நடக்கவில்லை என்பதை அறிவர் இருவருமே. ஐயர் கூறிய சம்பிரதாயங்களை எல்லாம் அரையடி தள்ளி நின்றே செய்தனர் இருவரும். முந்தைய நாள் இரவு, ஆதித் வந்து ஒப்பந்தம் போடுவதுபோல பேசிவிட்டுக் கைநீட்ட, தாரா தோளைக் குலுக்கிவிட்டுச் சென்ற காட்சி நினைவுக்கு வந்தது அவனுக்கு. கூடவே சின்னதொரு சிரிப்பும் வந்தது.
காரை அடைந்ததும் கையை விட்டுவிட்டு அவளுக்காகக் கார் கதவைத் திறந்துவிட்டான் அவன். அவளும் நிமிராமல் உள்ளே ஏறி அமர்ந்தாள். பெரியவர்கள் மூவரும் வாசலுக்கு வந்து கையசைக்க, தாராவும் புன்னகையோடு தலையசைத்தாள் அவர்களுக்கு. கவனமாக ஆதித்தின்பக்கம் மெல்லமாக அவள் திரும்ப, அவனும் புன்னகையுடனே காரைச் செலுத்தியதைப் பார்த்தாள்.
"எங்கே போறோம்?"
இருகணம் அமைதிகாத்தான் ஆதித்.
"நீயே பார்க்கலாம், இன்னும் பத்து நிமிஷம்."
தாரா வினோதமாக, ஆனால் ஆர்வத்தோடு அவனைப் பார்த்துக் காத்திருந்தாள். கல்கத்தா நகரப் பரபரப்பைத் தாண்டித் தங்கள் வண்டி விரைந்து செல்ல, தாரா ஜன்னலின்வழி வேடிக்கை பார்த்தாள். இதுவரை வந்திராத பகுதியென மட்டும் புரிந்தது. தூரத்தில் ஹௌரா பாலத்தின் பால்வெளிச்சம் தெரிந்தது.
சிறிதுநேர அமைதியான பிரயாணத்தின் பின்னர், கார் சென்று சற்றே இருட்டான பகுதியில் நிற்க, தாரா குழப்பமாக அவனைப் பார்த்தாள். அவனோ இறங்கிவந்து தாராவிற்காகக் கதவைத் திறந்துவிட்டான்.
"இ.. இது... என்ன இடம்?"
ஆதித் சிரித்தான்.
"ஏன், பயப்படறியா? டோன்ட் வரி, இது சேஃபான இடம்தான்."
தார்சாலை இன்றி மணலால் ஆன பாதையில் அவளை நடத்திச்சென்றான் அவன். மரங்கள் அடர்ந்திருந்த அப்பகுதியில் மஞ்சள் மஞ்சளாக சின்னச்சின்ன வெளிச்சங்கள் ஆங்காங்கே தென்பட்டன. சற்று நடந்துசென்றதும் வெளிச்சங்கள் அதிகமாக, தாரா தான் கண்ட காட்சியில் அதிசயித்துப் பூரித்தாள்.
கங்கையாற்றின் ஒரு கிளையாக கல்கத்தாவில் ஓடும் ஹூக்ளி நதியின் தீரத்தில், மிகமிக சாதாரணமாக ஆனால் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு குடில்போன்ற உணவகம்தான் அது. வண்ணவண்ண விளக்குகளின் ஒளி தண்ணீரில் பட்டு ஓவியங்கள்போல எழில் காட்ட, காற்றில் தவழ்ந்த பெங்காலி இசையும் சிதார் ஓசையும் கேட்போர் நெஞ்சைக் கவர, ஒரிரு சுற்றுலாப் பயணிகள் மேசைகளில் அமர்ந்து பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருக்க, தாராவை அழைத்துச்சென்று நதியோரம் போட்டிருந்த மரமேசையில் அமரவைத்தான் ஆதித்.
கண்களின் இன்னும் அதிசயம் மாறாமல் காணும் காட்சிகளை எல்லாம் கண்களுக்குள் சேர்த்துவைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள் தாரா. இதழ்கள் அனிச்சையாகவே ஆச்சரியத்தில் விரிந்திருக்க, அவளையே ஆதுரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
"பிடிச்சிருக்கா?"
அதிவேகமாகத் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் அவளும்.
"என் வாழ்க்கைலயே இவ்ளோ அழகான, அமைதியான இடத்தைப் பார்த்ததே இல்ல நான்! இந்தக் காத்து, தண்ணி, ம்யூசிக், இந்த சாயங்கால நேரம்.. இந்த சூழல்.. ச்சே! குடுத்து வெச்சிருக்கணும் இதையெல்லாம் அனுபவிக்க! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!!"
அவன் சிரித்தான்.
"Glad you like it"
பரிசாரகரைக் கைகாட்டி அவன் அழைக்க, அவர் வந்து பணிவாக நின்றார்.
"யெஸ் சார்?"
"என்ன சாப்பிடற?" எனத் தாராவைத் திரும்பிப்பார்த்துக் கேட்க, அவளோ யோசனையாக முகம் சுருக்கினாள்.
"எனக்கு எதுவானாலும் ஓகே... நீங்களே சொல்லுங்க. அத்தோட, இங்க என்ன நல்லா இருக்கும்னு எனக்குத் தெரியாதே.."
"சாய்ஸ் எடுத்தா தானே அது நல்லதா இல்லையான்னு தெரியும்? தேர்ந்தெடுக்கவே பயப்பட்டா நாம ஆசைப்படறது எப்படிக் கிடைக்கும்?"
தாரா புரியாமல் பார்க்க, ஆதித் தனக்குள் தலையசைத்துக்கொண்டு, பரிசாகரிடம் மெனு கார்டைக் கேட்டான். அவர் கொண்டுவந்ததை வாங்கித் தாராவிடம் நீட்டினான்.
"உன் மனசுக்குப் பிடிச்சதை செய்ய ஆசைப்படற இல்ல? இப்ப உனக்குத் தோணறதை ஆர்டர் பண்ணு."
"நல்லா இல்லாம போச்சுன்னா?"
"ஒதுக்கி வெச்சுட்டு வேற வாங்கிக்கலாம். தைரியமா ஆர்டர் பண்ணு."
ஆதித்தை நிமிர்ந்து மரியாதை கலந்த ஆச்சரியப் பார்வை பார்த்தாள் தாரா. கையிலிருந்த மெனு கார்டை இருமுறை கவனமாகப் படித்துவிட்டு, தீர்க்கமாக நிமிர்ந்து தனக்கு வேண்டியதைச் சொன்னாள். ஆதித்தைப் பரிசாரகர் திரும்பிப் பார்க்க, "ஸேம்" என்றான் அவனும்.
அவர் சென்றதும் ஆதித்திடம் திரும்பியவள், "நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?" என்றாள்.
"ம்ம்?"
"ஏன்... அதாவது... அத்தை, மாமா, பாட்டி.. எல்லார்கிட்டவும் ரொம்ப கம்மியா பேசுறீங்க, ஒட்டாம இருக்கீங்க..? நம்ம ஊர்ல சும்மா பஸ்ல பக்கத்துல உக்காந்தாலே பேசி உறம்பரை ஆகிடுவாங்க. நீங்க என்னடான்னா, பெத்தவங்க கிட்டவே அளவா தான் பேசுறீங்க. உங்களைப் பார்த்தா சிடுமூஞ்சி மாதிரியும் இல்ல. ராஜீவ்கிட்ட நல்லா பேசுறீங்க.. என்கிட்ட கூட அப்பப்ப நல்லாதான் பேசுறீங்க.. ஏன் அப்படி?"
ஆதித் அமைதியாக அவளைப் பார்த்தாள். அதிகமாகக் கேட்டுவிட்டோமோ என சற்றே கவலையுடன் அவள் பார்த்திருக்க, அவனோ பெருமூச்சுடன் வாய்திறந்தான்.
"எனக்கு.. நான் ஆசைப்பட்ட childhood கிடைக்கல. டாடியும் மம்மியும் பிஸினஸ்ல ரொம்ப டேலண்ட்டட். அவங்களோட திறமையினால கம்பெனி செழிச்சு வளர்ந்தது. வெளிநாடு வரைக்கும் பர்வதம் க்ரூப்ஸ் வளர, அதைப் பாத்துக்க அவங்களும் நாடு நாடா சுத்த, நடுவில என்னை மறந்துட்டாங்க. அவங்களை குறை சொல்லல நான்; ஒரு விஷயத்தை அடையணும்னா சில தியாகங்கள் செஞ்சுதான் ஆகணும். ஸோ, அம்மாவும் அப்பாவும் எப்பாவாச்சு தான் என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க. சாதாரண குடும்பங்கள் மாதிரி அன்னியோன்யம் இல்ல எங்களுக்குள்ள. அப்பறம் நானும் காலேஜ், ஹையர் ஸ்டடீஸ், பிஸினஸ்னு அவங்க அளவுக்கே பிஸி ஆயிட்டேன். வருஷத்துக்கு ஒருதடவையோ ரெண்டு தடவையோ தான் எல்லாரையும் பார்க்கறேன்.
நீ சொன்னமாதிரி, நான் ரூடான ஆள் கிடையாது. ராஜீவ் இருபத்திநாலு மணிநேரமும் என்கூட இருக்கறான். நீயும் நானும்கூட தினமும் பார்த்துக்கறோம். அதான், உங்ககூட எல்லாம் நான் சாதாரணமா பேசறேன். அவ்ளோதான்."
தாரா அவனை கரிசனமாகப் பார்த்தாள்.
"ம்ப்ச்.. உங்களைப் பார்க்கறப்போவெல்லாம், நீங்க எவ்ளோ அதிர்ஷ்டமான ஆளுன்னு தோணும். ஆனா, உங்களுக்கும் இப்டி கஷ்டம் இருக்கும்னு எனக்குத் தெரியல. சாரி.."
"இட்ஸ் அல்ரைட். நம்ம சந்தோஷம் நம்ம கையில தான் இருக்கு. எனக்கு கல்கத்தாவுல தான் சந்தோஷம், வெற்றி எல்லாமே கிடைச்சது. ஸோ, எனக்கு இதுதான் வீடு. Kolkata feels like home to me."
புரிந்ததாகத் தலையசைத்தாள் அவளும். அவள் சொன்ன உணவுகள் வந்துவிட, ஆர்வமாக ஒன்றொன்றாக எடுத்து ருசிபார்த்தாள் அவள்.
"எல்லாமே செம்மையா இருக்குல்ல?"
ஆதித்தும் சிரித்து ஆமோதித்தான். "ஹ்ம்"
"மறுபடி ரொம்ப தேங்க்ஸ், என்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு"
உணவருந்தி முடித்தபின்னர் நதியோரம் கொஞ்சநேரம் நடந்தனர் இருவரும். குளிர்ந்த இளங்காற்று முகத்தில் வீசிச் சிலிர்க்கச் செய்ய, தாராவின் காதுமடல்கள், மூக்குநுனி, விரல்கள் யாவும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற, கார்ட்டூன் பொம்மையைப் போல இருந்தவளைக் கண்கொட்டாமல் பார்த்தான் ஆதித். அதையுணர்ந்தவள்போல அவளும் கைகளை சூடுபரப்பிக் கன்னங்களில் வைத்துக்கொண்டாள்.
"ரொம்ப குளிர் இங்க. ஆத்தங்கரைன்னா இப்படித்தான் காத்தடிக்குமோ..?"
ஆதித்திடம் பதில்வராமல் இருக்க, சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள் அவள். அங்கே அவன் இல்லை.
பத்தடி தூரத்தில் அவளுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தான் அவன். தாரா திகைப்பாகப் பார்க்க அவனோ, "லேட்டாச்சுல்ல? பனி வேற பெய்யுது. காருக்குப் போலாம் வா" என்றபடி வேகமாக நடந்தான் பிரதான சாலையை நோக்கி.
காரில் ஏறி அமர்ந்த பின்னரும் அவளிடம் திரும்பாமல் சாலையையே பார்த்தபடி விரைந்து வாகனத்தை செலுத்தினான் அவன்.
வீட்டை அடைந்தபோது, மாதவனும் உஷாவும் ஆர்வமாக அவர்களைப் பார்த்தனர்.
"ஆதித், தாரா? டின்னர் எப்படிப் போச்சு?"
இருவருமே தலையை மட்டும் அசைத்தனர். "ம்ம்"
"எங்க போனீங்க?"
"ரிவர்சைட் ரெஸ்டோ."
"நல்லா இருந்துச்சா?"
"இருந்துச்சு மாமா"
"சரி, அப்பறம் ஏன்--"
"ஏங்க, டையர்டா இருப்பாங்களோ என்னவோ... தாராக்குட்டி, நீ போய் ரெஸ்ட் எடும்மா, நாளைக்கு காலேஜுக்குப் போகணும்ல?"
"சரிங்கத்தை"
தாராவிற்கு என்னும் ஆதித்தின் செய்கைகளுக்கு அர்த்தம் புரியாததால் குழப்பத்தில் இருந்தாள். ஆதித்தும் காலில் சுடுநீர் கொட்டியதைப் போல மாடிக்கு விரைந்தான். குளியலறைக்குள் சென்று அவன் கதவடைத்துக்கொள்ள, தாரா பால்கனிக்குச் சென்று அமர்ந்து நடந்தவற்றை மறுபடி அசைபோட்டாள்.
'என்ன நாம் தவறாக செய்தோம்? நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தான்? ஒருவேளை கைபேசியில் வேறேதோ செய்தி வந்ததால் இப்படி அவசரமாகத் திரும்ப அழைத்துவந்துவிட்டானா?'
அவனிடமே கேட்கலாமே என நினைத்து அவள் அறைக்குள் வர, அப்போது குளித்துவிட்டு அவளை நோக்கி வந்தவனின் மீது மோதித் தடுமாறி விழப்போனாள் தாரா.
அனிச்சையாக அவளை விழாமல் தடுக்க நினைத்து அவளது இடையோடு கைவைத்து அவன் பிடிக்க, அவன் தோளில் அவளது கரங்கள் இடம்பெற்றிருக்க, இருவரின் முகங்களும் அருகருகே வர, நேரம் நின்றுபோனது.
****
ஹிஹிஹி...😁😅
என்னவொரு cliffhanger!
அன்பு வாசக நண்பர்களே, கதை பிடிச்சிருக்கா இதுவரை?
எனக்கு என்னவோ டூ மச் ஸ்வீட்னெஸ்ஸா இருக்கோன்னு தோணுது.. conflict எதாச்சும் கொண்டுவரலாமா..? (இல்ல இருக்கற பிரச்சனையே போதுமா?)
"கதைக்கு வாக்களித்து நண்பர்களிடம் பகிரவும்"னு நானும் சொல்லிட்டு தான் இருக்கேன்... நடக்க மாட்டேங்குதே.. ஹூம்..
இருந்தாலும், என்றும் அன்புடன்,
உங்கள் மது.