கி.பி 1750 ஆண்டு-
"வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது"
என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்டான்.
வனமலை என்றாலே 'ஆபத்து' என்று கேள்வி பட்டிருக்கிறான். குறிப்பாக இரவில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஊர் கிழடுகள் கூறுவார்கள்.
"அப்படி என்ன பெரிய பொல்லாத ஆபத்து, நான் பார்க்காத ஆபத்து. எங்கள் பயிற்சி காலத்தில் இதை விட பெரிய ஆபத்தான யானைகளுடன் சண்டை பயிற்சி செய்ய வேண்டும். அதையே சமாளித்து சாதித்து கொண்டு வந்த எங்களிடம் ஆபத்து கோபத்து என்று கதை விடாதே கிழவி" என்பான் குமரன்.
"ஆமாம் நீர் பெரிய வீரன் தான். நேற்று காட்டு எலியை பார்த்து பரண் மேல் தாவிக் கொண்ட மாவீரர்" என்று நொடித்துக் கொள்வாள் கிழவி சக்கி.
"இதையெல்லாம் யார் உன்னிடம் கூறி..னா..ர்கள்" என்று முதலில் புரியாமல் கேட்டவன், பிறகு ஏதோ தோன்ற திரும்பி நண்பனை பார்த்து முரைத்தான்.
குமரன் தன்னை பார்த்து முரைப்பது தெரிந்தும், அவனுக்கு முதுகு காட்டி கொண்டு அமர்ந்து கொண்டு, கையில் இருக்கும் கத்தியை கூர்மையாக்கி படி இருந்தான் மாறன்.
கீழே கிடந்த ஒரு மாங்காய் ஒன்றை எடுத்து மாறனை நோக்கி எறிந்தான் குமரன்.
குமரன் வீசிய மாங்காய் வேகமாக மாறனின் தலை நோக்கி பாய, மிகவும் சாதாரணமாக அந்த காய் தன்னை தீண்டும் முன், கையில் இருக்கும் கத்தியால் அதை தடுத்தான் மாறன்.
கத்தி பட்டு மாங்காய் சரியாக இரண்டு துண்டுகளாக பிளந்து கீழே விழ, மாறன் ஒரு துண்டையும், குமரன் ஒரு துண்டையும் எடுத்து கொண்டு அமர்ந்தனர்.
"ஏற்கனவே கூர்மையான கத்தியை ஏதற்கு மேலும் தீட்டினாய் என்று இப்போது புரிகிறது" என்று கூறிய படி, தன் துண்டில் இருந்த பாதி மாங்கொட்டையை தனியாக எடுத்து விட்டு, கடித்தான்.
"கத்தியை தீட்டியது, மாங்காயை வெட்டவதற்கு அல்ல" என்றான் மாறன் தன் பங்கை சுவைத்த படி.
"பிறகு!!"
"இன்று இரவு நாம் இருவரும் வனமலை செல்கிறோம்"
"அய்யோ வேண்டாம் அப்பா இந்த விஷப் பரிட்சை" என்று பதறினாள் கிழவி சக்கி.
"பின்னே நாங்கள் போர்ப் பயிற்சிகள் அனைத்தையும் கற்று தேர்ச்சி பெற்று உன்னுடன் பல்லாங்குழி விளையாட என்று நினைத்தாயா கிழவி" என்று வீர வசனம் பேசி, சக்கியை வம்புக்கு இழுத்த குமரன், தன் காதிலியை பார்க்க வேண்டும் என்று மாறனை கழற்றி விட்டு விட்டான்.
இதோ, தனியாக வனமலையின் பெயர் பலகை முன்பு குதிரையில் அமர்ந்திருந்தான் மாறன்.
வழிப்போக்கன் போல தன்னை தயார் படுத்தி கொண்டு, குதிரையின் இரு பக்கத்திலும், பெரிய பெரிய மூட்டைகளை கட்டி தொங்க விட்டிருந்தான். பார்பதற்கு மூட்டையில் நிறைய பொருட்கள் இருப்பது போல தோன்றும், ஆனால் வெறும் கற்களை கொண்டு நிரப்பியிருந்தான்.
'ஆபத்துக்கு கை கொடுக்குமே' என்ற எண்ணம் தான்.
'வனமலை' என்ற வார்த்தை மட்டுமே அரசாங்கம் செலவில் எழுதியது, 'உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற வார்த்தைகள், யாரோ கத்தியால் பலகையை கிழித்து எழுதியது என்று நன்றாக தெரிந்தது.
என்ன வகையான அன்பான வரவேற்பு என்று தெரிந்து கொள்ள மாறனும் தயாராக தான் இருந்தான். சொல்ல போனால் மிகவும் ஆர்வமாக இருந்தான்.
__________________________________________
ஒரு மாட்டு வண்டி தாராளமாக செல்லக் கூடிய அளவுக்கு சாலை பெரிதாக இருந்தது. அது மட்டுமல்ல குண்டும் குழியும் இல்லாமல் நன்றாகவே இருந்தது.
'வனமலைக்கு பயந்து யாரும் அதிகம் உபயோகிக்க வில்லை போலும்' என்று நினைத்து கொண்டான்.
'நிலா வெளிச்சம் மட்டும் இல்லை என்றால், தன் கையையே தன்னால் பார்க்க முடியாது போலவே' என்று பலவாறு யோசித்து கொண்டே பயணித்தான்.
ஆனால் குதிரையோ புதிதாக பயணிக்கும் பாதை என்பதால் துள்ளிக் கொண்டும், பாதை ஓரங்களில் இருக்கும் புதர்களை முகர்ந்து கொண்டும் நடந்தது.
"கவனம் சிம்பா!! கவனம் சிதறக் கூடாது! புதிய பாதை, நிறைய ஆபத்து" என்று தன் குதிரைக்கு கேட்கும் படி மெதுவாக எச்சரித்தவன், சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்டான்.
சிம்பா என்ற அந்த குதிரை, தன் நண்பனின் குரலில் இருந்த எச்சரிக்கையை உணர்ந்தது போல, நேராக நிமிர்ந்து, அழுத்தமான காலடிகளுடன் நடந்தது.
சிம்பா சுதாரித்து விட்டான், இனி சாலையை அவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில், தன் கவனத்தை இருபுறங்களில் இருக்கும் காட்டின் மேல் வைத்தான்.
நல்ல அடர்ந்த மரங்களை கொண்ட காடு, இரவு என்பதால் பறவைகள் சத்தம் இல்லாமல் இருந்தது. வன விலங்குகள் இரையை தேடவும், இரையாக விட கூடாது என்பதற்காகவும் சத்தம் எழுப்பாமல் இருந்தன போலும். அவ்வளவு நிசப்தமாக இருந்தது.
சுமார் ஒரு மணி நாழிகை பயணித்திருப்பான், ஆனால் ஒரு பயணி கூட தன்னை கடக்க வில்லை, ஏன் ஒரு முயலை கூட பார்க்க முடியவில்லை.
'நாம் செல்வது சரியான பாதை தானா!!' என்ற எண்ணம் தோன்ற தான் செய்தது மாறனுக்கு.
இரவில் இந்த பாதை தவிர்க்கும் மக்கள், பகலில் இந்த பாதையை பயன்படுத்துவதற்கு சாட்சியாக, அந்த மண் சாலையில் தடங்கள் பதிந்து இருந்தன.
இந்தே வேகத்தில் சென்றால், சிறிது தூரத்தில் ஒரு சத்திரம் வரும் என்று சக்கி கூறியிருந்தாள்.
'அங்கே சிறிது இளைப்பாற இருந்து விட்டு, பிறகு புறப்பட வேண்டும். குதிரைக்கும் ஓய்வு தேவை' என்று கணக்கிட்டவன், தன் இடது பக்கம் லேசாக சலசலக்க காதை கூர்மையாக்கி கொண்டான்.
"ஜாக்கிரதை சிம்பா!!" என்று குதிரைக்கு சொல்லும் சாக்கில் தனக்கு தானே சொல்லி கொண்டான்.
இந்த மாதிரி முன்பின் தெரியாத, அதிலும் ஆபத்தான பகுதியில் குதிரையை விட்டு எக்காரணம் கொண்டும் இறங்க கூடாது என்பது அவனுக்கு தெரியும். அதனால் குதிரையை எங்கும் நிருத்தாமல், மிதமான வேகத்தில் நடக்க செய்தான்.
'ஆபத்து என்று தெரிந்தும் வந்தாயிற்று, எப்படி அதை எதிர் கொள்வது' என்று அவன் முன்பே தீட்டி வைத்திருந்த திட்டம் சரிவராது என்று மாறனுக்கு தோன்றியது.
ஏனெனில், சோர்வு அடையும் வரை காத்திருந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பது எதிரிகளின் திட்டம் என்பது மாறனும் இப்போது புரிந்தது. அதுவுமில்லாமல், பாதி வழியை கடந்து விட்டதால் தப்பித்து எந்த பக்கம் ஓடினாலும், சுலபமாக பிடித்து விடலாம் என்பது அவர்களின் கணக்கு என்று துள்ளியமாக கணித்தவன், 'ஆகையால், வேட்டை இனி மேல் தான்' என்று நினைத்தவன் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை தொட்டு பார்த்து கொண்டான்.
__________________________________________
மரத்தின் மீது அமர்ந்திருந்த அந்த உருவம், தன் கையில் இருக்கும் தொலை நோக்கி மூலம் அந்த வழிப்போக்கனை கண்காணித்து கொண்டு இருந்தது.
பகலில் கூட தனியாக பயணிக்க மறுக்கும் மக்களின் மத்தியில், இரவில் தனியாக பயணிக்கும் இந்த வழிப்போக்கன் எந்த ரகம் என்ற ஆராய்ச்சி தொடங்கி விட்டிருந்தது.
'ஒன்று படு முட்டாளாக இருக்க வேண்டும்! இல்லையேல்.... என்னை முட்டாள் என்று நினைத்திருக்க வேண்டும்'.
அவன் முட்டாள் என்றால், அதை எப்படி பயன்படுத்துவது என்பது அவள் கைதேர்ந்த ஒன்று. வாடிக்கையாக செய்வது தான்... முட்டாள்களுக்கு எதற்கு அத்தனை பொன்னும் பொருளும் என்று எடுத்து கொள்வாள்.
அவளை முட்டாள் என்று அவன் நினைத்திருந்தால்... அவனின் எண்ணத்தை மாற்ற வேண்டியது தான்!! என்று நினைத்தவள், தன் பின் புறம் இருந்த அம்புகளை ஒருமுறை தொட்டு பார்த்து கொண்டாள்.
'ம்ம் இன்று நல்ல வேட்டை தான்'
தன் அருகே இருந்த கிளையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கீழே இருந்து இழுத்ததால், லேசாக கிளை அசைந்து சலசலப்பை ஏற்படுத்தியது.
சாலையில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் சட்டென்று அவள் புறம் திரும்பினான்.
வேந்தா கையில் இருக்கும் ஒரு அம்பை எடுத்து கீழே வீச, கீழே இருந்து கயிற்றை இழுப்பது நிறுத்தப் பட்டது.
ஒருமுறை அந்த வழிப்போக்கனை பார்த்து விட்டு, சரசரவென சத்தமில்லாமல் மரம் இறங்கிய வேந்தா, மரத்தின் கீழே இருக்கும் அந்த இரண்டு வாலிபர்களின் தலையில் ஒரு தட்டு தட்டினாள்.
"யாரடா கயிற்றை இழுத்தது" என்று ஒரு வாலிபனை கேட்க,
அவனோ அருகில் இருக்கும் இன்னொருவனை காட்ட, வேந்தா, "எதற்கு!!" என்றாள் பற்களை கடித்து கொண்டு.
அந்த வழிப்போக்கன் நம்மை கடந்து செல்கிறான் அக்கா, அவனை நாம் களவாட வேண்டாமா!!" என்று தன் சந்தேகத்தை கேட்டான் அந்த வாலிபன் கனி.
"களவாட அவனிடம் விலை உயர்ந்த பொருட்கள் ஒன்றும் இல்லை" என்றாள் வேந்தா.
"ஆனால் அவன் குதிரையில் பல மூட்டைகள் இருக்கின்றனவே!! அவற்றில் நமக்கு தேவையான ஒன்று கூடவா இருக்காது!!" என்றான் இன்னொரு வாலிபன் கந்தன்.
"அவன் சாதாரண வழிப்போக்கன் போல் தெரியவில்லை. இரவில் தனியாக வரும் ஒருவன், எவ்வளவு சீக்கிரம் இந்த காட்டை கடக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் குதிரையை ஓட்டுவான். ஆனால் இவனோ!! எதோ சுற்றுலா வந்தவன் போல காட்டை இரசித்து கொண்டு அல்லவா வருகிறான். அதுமட்டுமின்றி, அவன் குதிரையை கவனித்தீர்களா!! அது சாதாரண மக்கள் பயன்படுத்தும் குதிரை அல்ல, ஒர் போரில் பங்கேற்ற வீரனுக்கு, மன்னர் தரும் பரிசுக் குதிரை ஜாதி. மூட்டையின் எடையையும் அதன் கனத்தையும் பார்த்தாலே தெரிகிறது அதில் வெறும் கற்களை கொண்டு நிரப்பியிருக்கிறான் என்பது" என்று தெளிவாக கூறியவள், "நீ ஏற்படுத்திய சலசலப்புக்கு கூட, அவன் பயந்து ஓடவில்லை!! கவனித்தாயா!!" என்று கனியிடம் கேட்க,
"ஆமாம் அக்கா!! நீ சொன்ன பிறகு தான் எனக்கே இது தோன்றுகிறது" என்றான் கனி.
"அதற்கெல்லாம் மூளை வேண்டும் கனி பையா!!" என்று சொல்லி சிரித்தான் கந்தன்.
"போன வாரம் தானே, என்னிடம் சுத்தமாக இல்லை, உன்னுடையது கொஞ்சம் தாயேன் என்று கேட்டு வாங்கினாயே!! அந்த மூளையா அண்ணா!" என்று கனி சிரிக்க,
"இருவரும் அமர்ந்து கொண்டு கதை பேசுங்களேன்!! என்ன அவசரம்!" என்று வேந்தா கேட்க,
"ஆமாம் ஆமாம்!! நின்று நின்று கால் வலிக்கிறது. வா கனி அமர்வோம்" என்றான் கந்தன்.
கந்தன் தலையில் ஒன்று போட்டு, "நாளை முதல் நீ வீட்டிலேயே படுத்து தூங்கு சோம்பேறி" என்றாள் வேந்தா.
"என்ன வேந்தா!! நீ தானே அவன் அப்படி இப்படி என்று கூறினாய்!! அதுமட்டுமல்லாமல், அவனிடம் களவாட ஒன்றும் இல்லை என்று வேறு கூறினாயே. பிறகு அமர்ந்து பேசுவதில் என்ன தப்பு!! வேறு எந்த வழிப்போக்கனும் இனி வருவது போல் தெரியவில்லை!!" என்றான் கந்தன்.
"உண்மை!! வேறு வழிப்போக்கன் வரப்போவதில்லை... வந்தவனை விடப்போவதில்லை!" என்றாள் வேந்தா கையில் வில் ஏந்தி கொண்டு.
"என்ன செய்ய போகிறோம் அக்கா!!" என்று கண்கள் மின்ன கேட்டான் கனி.
"உனக்கு வீடு கட்டி விளையாட கற்கள் வேண்டும் என்று சொன்னாய் அல்லவா!!!" என்று கண் சிமிட்டி கேட்டாள் வேந்தா.
மூவரும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாக தலை அசைத்தனர்.
கனி தன் இடையில் இருக்கும் கத்தியை எடுத்து பார்த்து விட்டு மீண்டும் சொருகி கொண்டான்.
கந்தன் தன் இடையில் இருக்கும் சாட்டையை உறுவி ஒரு சுளற்று சுளற்றினான்.
வேந்தா கையில் இருக்கும் வில்லை தோலில் மாட்டிக்கொண்டாள்.
மூவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு மரம் ஏறினர். உச்சியை அடைந்ததும் இருவரும் வேந்தா வை பார்க்க, இடையில் தொங்கிய தொலை நோக்கி மூலம் பார்த்தவள், "சத்திரம்" என்றாள் ஒரே வார்த்தையில்.
புரிந்தது என்பது போல இருவரும், சுலபமாக பக்கத்து மரங்களில் தாவத் தொடங்கி விட்டனர். மரத்தின் மூலம் பயணிப்பதே இவர்களுக்கு பிடித்து. சிறு வயதிலேயே கற்று கொண்டது என்பதால் மூவரும் அதில் கில்லாடி.
இருவரும் இருளில் மறைவதை பார்த்த வேந்தா, "யார் முட்டாள் என்பதை பார்த்து விடலாம்" என்று தூரத்தில் குதிரையில் போய் கொண்டு இருந்தவனை பார்த்து சவால் போல் முனுமுனுத்து விட்டு, அடுத்த மரத்திற்கு பாய்ந்தாள்.
- தொடரும்...
__________________________________________
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை கதை தான். இதில் வரும் பகுதிகள் அனைத்தும் என்னுடைய கற்பனை மட்டுமே. தயவுசெய்து யாரும் 'கூகிள் மேப்' பில் தேட வேண்டாம்.
இனி வரபோகும் மன்னர்கள், நாட்டின் பெயர்கள், போர் தொடர்பான செய்திகள் அனைத்தும் கூட கற்பனையே.
'இந்த மன்னர் இந்த ஆண்டில் பிறக்கவே இல்லை' என்று சண்டைக்கு வந்துவிட கூடாது என்பதற்காக தான் இவ்வளவு முறை கூறுகிறேன்😂😂
அக்கா history ல வீக்கு பா🙈
-பிங்கி💐