76 கொலையாளி
ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
"என்ன ஆச்சு எஸ்ஆர்கே? இந்த நியூஸை பார்த்து நீ நிம்மதியாவேன்னு எதிர்பார்த்தேன்... உன்னுடைய பரம எதிரி செத்துட்டாரு..." என்றான் குகன் குதூகலமாக.
"கொலை செய்யப்பட்டார்" என்று அவன் கூறியதை திருத்தினான் ஸ்ரீராம்.
"ஆமாம். வேலாயுதம் மாதிரியான ஒரு ஆளுக்கு இப்படிப்பட்ட முடிவு தான் வரணும்... அதுல பரிதாப பட எதுவும் இல்ல"
ஆம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"இதை நான் மிதிலாகிட்ட சொல்ல போறேன். அவங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க" என்றான் ஆர்வமாக.
"வேண்டாம்... கொலைகாரனை பத்தி எந்த விஷயத்தையும் அவகிட்ட சொல்லாத... முக்கியமா கொலையாளியோட பெயரை சொல்லாத."
"ஆனா ஏன்?" என்றான் குகன் குழப்பத்துடன்.
"காரணத்தை உன்கிட்ட அப்புறம் சொல்றேன்" என்றான் யோசனையுடன்.
"ஏதாவது எமோஷனலான காரணமா?"
"இருக்கலாம்..."
"அதுக்கு என்னால ஏதாவது செய்ய முடியுமா?" என்றான் அதில் ஏதோ இருப்பதாக உணர்ந்த குகன்.
முடியாது என்பது போல தலையசைத்தான் ஸ்ரீராம்.
"சரி, அப்படின்னா வேலாயுதம் பத்தி நீயே அவங்ககிட்ட சொல்லு"
சரி என்று ஸ்ரீராம் தலையசைக்க, அவனை மேலும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து அகன்றான் குகன்.
வேலாயுதம் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டார். காமராஜ் என்னும் பெயர் கொண்ட ஒரு கைதியால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்பொழுது புள்ளிகளை இணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஸ்ரீராமுக்கு. காமராஜின் திட்டமிடுதலும், அதை அவர் செயல்படுத்திய முறையும் அவனை வியப்புக்கு உள்ளாக்கியது. வேண்டுமென்றே பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு சிறைச்சாலை சென்றிருக்கிறார் காமராஜ். உண்மையிலேயே, அந்த காமராஜ் தன் மாமனார் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தான் ஸ்ரீராம். அதனால் கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீங்க எனக்கு ஃபோன் பண்ணுவீங்கன்னு நான் காலையில இருந்து கத்துகிட்டு இருக்கேன். வேலாயுதம் மர்டரை பத்தி விசாரிக்க தானே எனக்கு ஃபோன் பண்ணிங்க?" என்றார் கமிஷனர் பெருமையுடன்.
"வேலாயுதத்தை கொன்ன ஆளைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிதா சார்?" என்று அவர் கேள்விக்கு பதில் கூறாமல் வேறு ஒரு கேள்வியை கேட்டான்.
"இல்ல எஸ்ஆர்கே. எவ்வளவு அடிச்சாலும் அவன் வாயை திறக்கவே மாட்டேங்கிறான். ஒரு வார்த்தை கூட அவன்கிட்டயிருந்து வாங்க முடியல" என்றார் ஏமாற்றத்துடன்.
"அவர் என்ன கேஸ்ல அரெஸ்ட் ஆகி உள்ள வந்தாரு?" என்றான் உண்மையிலேயே அது தன் மாமனார் தானா என்பதை தெரிந்து கொள்ள.
"சாதாரண பிக்பாக்கெட் கேஸில் தான் நேத்து சாயங்காலம் அரஸ்ட் ஆனான். அடுத்த மூணு நாள் கவர்மெண்ட் ஹாலிடே. அதனாலே அவனை புழல் ஜெயிலுக்கு மாத்தினோம். அவனோட முந்தின ரெக்கார்டை செக் பண்ணி பார்த்த போது, அவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஜெயிலிலிருந்து ரிலீஸாகி இருக்கான். அவன் ஒய்ஃபை கொன்னதுக்காக பத்து வருஷம் ஜெயில்ல இருந்திருக்கான்..."
அவர் பேச்சை வெட்டி,
"இல்ல சார் அவரோட ஒய்ஃபை அவர் கொல்லல... அது ஒரு ஆக்ஸிடென்ட்" என்றான் ஸ்ரீராம் அமைதியான குரலில்.
அவன் கூறிய பதிலைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார் கமிஷனர்.
"உங்களுக்கு அவனைப் பத்தி எப்படி தெரியும்?" என்ற அவர் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.
"அவர் என்னோட மாமனார்" என்று எந்த தயக்கமும் இல்லாமல் உண்மையைக் கூறினான் ஸ்ரீராம்.
"நிஜமாவா சொல்றீங்க?" என்றார் மேலும் அதிர்ச்சியுடன்.
"ஆமாம், சார்"
"உங்களுக்கும் வேலாயுதத்துக்கும் இருக்கிற முன் விரோதத்தை பத்தி தெரிஞ்சிகிட்டு இதை அவர் செஞ்சிருக்கணும்" என்று சரியாக யூகித்தார் கமிஷனர்.
"எனக்கு தெரியல சார்"
அது ஏற்கனவே ஸ்ரீராம் ஊகித்துவிட்டது தான் என்றாலும், அதை பற்றி அவன் கமிஷனரிடம் கூறவில்லை. உண்மை என்ன என்று சரியாய் தெரிந்து கொள்ளாமல் அதை பற்றி அவரிடம் கூற அவன் விரும்பவில்லை.
"இந்த கேஸ்ல நான் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமிஷனர்.
"நான் என் மாமனாரை சந்திக்க விரும்பறேன். முடியுமா?"
"நிச்சயமா... நீங்க அவரை சந்திக்க நான் ஏற்பாடு செய்றேன்"
"இன்னும் கூட ஒரு ஆப்ளிகேஷன் இருக்கு சார்"
"சொல்லுங்க"
தன் வேண்டுதலை ஸ்ரீராம் முன்வைக்க அதை உடனடியாக ஒப்புக் கொண்டார் கமிஷனர்.
"சரி... செஞ்சிடலாம்"
அழைப்பை துண்டித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஸ்ரீராம்.
மிதிலாவுக்கு ஃபோன் செய்து அழைத்தான் ஸ்ரீராம்.
"என்னோட கேபினுக்கு வா மிதிலா" என்று உடனடியாய் அழைப்பை துண்டித்தான், அவள் பேச சந்தர்ப்பம் வழங்காமல்.
முகத்தை சுருக்கி தன் கைபேசியை பார்த்தாள் மிதிலா. அவனுடைய குரலில் அவசரமும் தெரியவில்லை, கடினமாகவும் இல்லை. பிறகு எதற்கு அவளை அங்கு வரச் சொல்லி அழைக்கிறான்? சென்று பார்த்துவிடுவது என்று அவன் அறைக்கு வந்தவள், கதவைத் தட்டிவிட்டு புன்னகையுடன் உள்ளே எட்டி பார்த்தாள். அவன் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து, அவன் அவளிடம் ஏதோ பேசப் போகிறான் என்பதை புரிந்து கொண்டாள். வா என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு வா" என்றான்.
"எதுக்கு?" என்றாள் கண்களை சுருக்கி சந்தேகக் கண்ணோடு பார்த்து.
வாய் விடாது சிரித்த ஸ்ரீராம்,
"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அவ்வளவு தான். நம்மளை வேற யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் கதவை சாத்த சொன்னேன்" என்றான் தன் ட்ரேட்மார்க் புன்னகையுடன்.
"நீங்க போட்ட ரூல்ஸை நீங்களே மறந்துட்டீங்களா மிஸ்டர் ஸ்ரீராம்?" என்றாள் தன் கைகளைக் கட்டிக்கொண்டு.
"என்ன ரூல்? " என்றான் புன்னகை மாறாமல்.
"உங்க பிஏ வோட பர்மிஷன் இல்லாம உங்க ரூம்ல யாராலும் நுழைய முடியாது. ஞாபகம் இருக்குல்ல?"
"இந்த ஆஃபீஸ்ல மூணு தடி பசங்க இருக்காங்க. அவனுங்க இந்த லிஸ்டில் வர மாட்டானுங்க. எப்ப வேணும்னாலும் உள்ள வருவாங்க. ஞாபகம் இருக்குல்ல?" என்றான் ஸ்ரீராம்.
அவன் கூறுவது சரி தான். குகன், பரத், மற்றும் லக்ஷ்மன் மூவரும் எப்பொழுது வேண்டுமானாலும் அவன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்றவர்கள். ஆமாம் என்று தலையசைத்துவிட்டு, கதவை தாழிட்டு விட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள் மிதிலா.
"என்ன அவ்வளவு முக்கியமான விஷயம், ஸ்ரீ?" என்றாள் ஆர்வமாக.
"முக்கியம் தான். நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு." என்று அவள் தோள்களைத் தன் கரத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு, மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தான்.
"கேளுங்க..."
"நான் ரொம்ப திமிர் பிடிச்சவன்னு தெரிஞ்ச பிறகும் நீ என்னை வெறுக்கலன்னு சொன்ன. எப்படி என்னை நீ காதலிக்க ஆரம்பிச்ச?"
அந்தக் கேள்வி மிதிலாவிடமிருந்து தனக்கு வேண்டியதை பெறுவதற்கான தூண்டில் மீன். அவன் எண்ணத்தைப் பற்றி அறியாத மிதிலா சகஜமாய் பேசினாள்.
"இதைக் கேக்க தான் என்னை அவ்வளவு அவசரமா வர சொன்னீங்களா?" என்றாள் அவன் கன்னத்தை கிள்ளியவாறு.
"பதில் சொல்லு" என்று, தான் பிடித்த பிடியை விடாமல் நின்றான் ஸ்ரீராம்.
"எனக்கு ஏன் உங்களை பிடிக்க ஆரம்பிச்சதுனா, உங்ககிட்ட நிறைய ஜெனியுனான மாற்றங்களை நான் பார்த்தேன்." என்ற உண்மை காரணத்தை கூறினாள்.
"ஓ... மனமாற்றம் உண்மையானதா இருந்தா, பழைய தப்பை எல்லாம் நீ மறந்துடுவ இல்லையா?" அவன் எதற்காக காத்திருந்தானோ அந்த புள்ளியில் வந்து நின்றான்.
"நிச்சயமா... அந்த மாற்றம் உண்மையானதா இருந்தா..."
"ஒருவேளை, உங்க அப்பாவுடைய மனமாற்றம் உண்மையானதுன்னு தெரிஞ்சா, அவரையும் நீ மன்னிப்பியா?"
அவன் கூறியதைக் கேட்டு, அவள் முகத்தில் எப்போதும் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் புன்னகை மங்கியது. தன் தோளைச் சுற்றி வளைத்திருந்த அவன் கையை அவள் எடுக்க முயன்றாள். ஆனால் அவளை அப்படி செய்ய விடவில்லை ஸ்ரீராம். அவன் பிடி மேலும் இறுகியது.
"நம்மளை யார் அட்டாக் பண்ணதுன்னு தெரியுமா?" அவளிடம் அந்த கேள்வியை எழுப்பினான் ஸ்ரீராம்.
மிதிலாவின் முகத்தில் பயத்தின் சாயல் படர்ந்தது. அவளுடைய கண்கள், ஸ்ரீராமின் முகத்தில் எதிர்பார்ப்புடன் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
"வேலாயுதம்"
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மிதிலா.
"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் பரிதவிப்புடன்.
"தெரியும்..." என்று சில நொடி நிறுத்தியவன்,
"உனக்கு தெரியுமா, இன்னைக்கு காலையில வேலாயுதம் ஜெயில்ல கொலை செய்யப்பட்டார்..."
மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன.
"அவரை ஒருத்தர் கொன்னுட்டார்" என்று குட்டை உடைத்தான்.
அடுத்து வரப்போவது என்ன என்பதை ஒருவாறு ஊகித்து விட்டாள் மிதிலா. அவள் யூகித்து விட்டதை அவள் முகபாவம் கூறியது. அவள் மனதை படித்த ஸ்ரீராம், ஆம் என்று தலை அசைத்தான்.
"காமராஜ்..."
மென்று விழுங்கினாள் மிதிலா.
"உன்னோட அப்பா"
நேராய் அமர்ந்து தலை குனிந்து கொண்டாள் மிதிலா. ஸ்ரீராம் தொடர்ந்தான்.
"அவர் எதுக்காக வேலாயுதத்தை கொன்னாருன்னு நான் சொல்ல வேண்டியதில்ல. நீயே காரணத்தை புரிஞ்சுகிட்டு இருப்ப..."
உதட்டை மடித்து, கண்களை மூடிக்கொண்டாள் மிதிலா.
"உனக்காகத் தான் மிதிலா... நீ நிம்மதியா வாழணும்னு தான்... தன் மனைவியுடைய சாவுக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இருக்கு. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. உங்க அம்மா இறந்ததை நீ உன் கண் முன்னாடி பார்த்திருக்க. அதே நேரம், உங்க அப்பா தெரிஞ்சே அவங்களை கொலை செய்யலைங்குறதையும், அது ஒரு விபத்துங்குகிறதையும் நீ பாத்திருப்ப. அவர் நல்லவர்னு நான் சொல்லல, அவருக்கு நான் சப்போர்ட் பண்ணவும் இல்ல. அவர் தப்பானவரா இருந்தாருங்கிறது உண்மை தான். ஆனா இப்போ இல்ல. பத்து வருஷம் அவர் ஜெயில்ல இருந்திருக்காரு. அவர் செஞ்ச தப்புக்கு அவர் ஏற்கனவே தண்டனையை அனுபவிச்சிட்டார். வேலாயுதத்தை கொன்னதுக்காக இன்னும் கொஞ்ச வருஷம் அவர் ஜெயில்ல இருக்க போறார். உன்னுடைய மன்னிப்பு அவருக்கு மனநிம்மதியை தரும். யாரோ ஒரு மூணாவது மனுஷன் நான். என்னையே நீ புரிஞ்சுகிட்ட. அவர் உன்னோட அப்பா இல்லையா..."
மிதிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
"உன் மேல தப்பு ஒன்னுமில்ல. நீ ஒரு ஃபைரோஃபோபிக். நெருப்பைப் பாத்தா பயப்படுறவ. உங்க அம்மாவை பத்தி நெனச்சா, நெருப்பை பத்தியும் நினைக்க வேண்டிய வரும்னு தான் இது வரைக்கும் அன்னைக்கு நடந்த விபத்தைப் பத்தி நீ அனலைஸ் பண்ணாம இருந்திருக்கணும். போனது போகட்டும்... அவசரம் ஒன்னுமில்ல. நிதானமா யோசி."
கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள் மிதிலா. அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான் ஸ்ரீராம். அடுத்த நொடி, அவனை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் மிதிலா. அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக அவள் தலையை வருடி கொடுத்தான் ஸ்ரீராம்.
"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை ஸ்ரீ. என்னால எந்த முடிவும் எடுக்க முடியல. ப்ளீஸ் எனக்கு ஒரு வழி சொல்லுங்க..."
"அழாதே, மிதிலா. எந்த கட்டாயமும் இல்ல. அவரைப் பத்தி நீ யோசிக்கணும்னு தான் நான் இதெல்லாம் சொன்னேன். தன்னை பத்தி யோசிக்காம, நம்ம கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத விஷயத்தை அவர் செஞ்சிருக்கார்... உன்னுடைய சந்தோஷத்துக்காகவும், உன்னுடைய நல் வாழ்க்கைக்காகவும். அவர் இதையெல்லாம் செஞ்சது உன்னுடைய மன்னிப்புக்காக மட்டும் தான். அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது. சில வினாடிகள்ல எல்லாமே மாறிடலாம்... ஃபார்ம் ஹவுஸ் அட்டாக் மாதிரி... அவரை மன்னிச்சிடு மிதிலா..." தன் மாமனாருக்காக வாதாடினான் ஸ்ரீராம்.
"கடந்த பத்து வருஷமா நான் அவரை வெறுத்துகிட்டு இருந்திருக்கேன். உடனடியா அவரை என்னால மன்னிக்க முடியுமான்னு எனக்கு தெரியல. நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க. செய்யறேன்."
புன்னகையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஸ்ரீராம். இவ்வளவு பெரிய பொறுப்பை அவனிடம் கொடுக்க அதீத நம்பிக்கை வேண்டும். ஸ்ரீராமுக்கு தெரியும், அவள் தனது அப்பாவை எந்த அளவிற்கு வெறுத்தாள் என்று. தன் அப்பாவை மன்னிக்கும் வழியை தேட அவள் தயாராக இருக்கிறாள் என்றால், அது ஸ்ரீராமுக்காகத் தான். தன்னால் அதை சாதிக்க முடிந்ததை எண்ணி பெருமை கொண்டான் ஸ்ரீராம்.
"சரி, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டான்.
அவன் அணைப்பில் இருந்து வெளியே வந்த மிதிலா,
"எப்படி நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க?" என்றாள் ஆர்வமாக
"கொஞ்சம் யோசிக்க டைம் கொடு. இதுக்கு ஒரு நல்ல சொல்யூஷன் நான் கண்டுபிடிக்கிறேன்"
சரி என்று தலையசைத்த மிதிலா, மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள். ஸ்ரீராமும் அவளை அணைத்துக் கொண்டான் என்று கூறத் தேவையில்லை...
தொடரும்...