69 பாரம் இறங்கியது
அது மட்டும் வேறு ஒரு சூழ்நிலையாக இருந்திருந்தால், மிதிலா தன்னை அணைத்த போது சும்மா இருந்திருக்க மாட்டான் ஸ்ரீராம். ஆனால் இப்போது, சூழ்நிலை வித்தியாசமானது. இப்போது அவள் உணர்வுகளால் ஆளப்பட்டு கொண்டிருக்கிறாள்.
"மிதிலா..." என்று அவன் மெல்ல அழைக்க,
அவனை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் மிதிலா, அவனை விட்டுவிட மனமில்லாமல்.
"மிதிலா, சொல்றத கேளு"
அவளது அணைப்புச் சங்கிலியை உடைத்து, அவள் கண்ணீரைத் துடைத்தான் ஸ்ரீராம். அவளது கண்ணீரை துடைத்த அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு,
"இதைப் பத்தித் தான் நான் உங்ககிட்ட பேசணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்" என்றாள்.
"நிச்சயம் பேசலாம்... இப்போ வா உள்ளே போகலாம்"
தனது சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மிதிலா.
"இந்தாங்க மிதிலா, பாயசம் சாப்பிடுங்க" என்று ஒரு கிண்ணம் பாயசத்தை அவளிடம் கொடுத்தாள் நர்மதா.
அவளிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு அமைதியாய் சாப்பிட்டாள் மிதிலா.
"நீயும் கொஞ்சம் சாப்பிடு ராமு" என்றாள் நர்மதா.
மிதிலாவின் கையிலிருந்த கிண்ணத்திலிருந்து, ஒரு தேக்கரண்டி நிறைய பாயசத்தை எடுத்து சாப்பிட்டான் ஸ்ரீராம்.
பாயசத்தை சாப்பிட்டு முடித்துவிட்டு, ஸ்ரீராமுக்காக காத்திருக்காமல், தங்கள் அறையை நோக்கிச் சென்றாள் மிதிலா. அவளை பின்தொடர்ந்து சென்ற ஸ்ரீராம், அறையின் உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாளிட்டான். மிதிலா கட்டிலின் மீது அமர்ந்து இருப்பதை கண்டான். அந்த அறையில் அதீத நிசப்தம் நிலவியது. மிதிலாவின் கண்கள் அருவி என பொழிந்தன. அவளால் தனது கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஸ்ரீராம். அதற்காகவே காத்திருந்தவள் போல, அவனது கரத்தை தன் கரத்தால் சுற்றி வளைத்து அவன் தோளில் சாய்ந்தாள் மிதிலா.
"மிதிலா ரிலாக்ஸ்... அவர் உன்னை பார்க்க தான் வந்தாரு"
"அவரால தான் எங்க அம்மா உயிரோட எரிஞ்சி போனாங்க. அவங்களோட ரத்தமும், சதையும் எரிஞ்சி சாம்பலானதை நான் என் கண்ணு முன்னால பார்த்தேன். அவங்களுடைய மரண ஓலம் இன்னைக்கும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. அவங்களுடைய அந்த கதறலை என்னால மறக்கவே முடியல, ஸ்ரீ... அந்த ஆளு ஒரு குடிகாரன்" என்று கண்ணீர் வடித்தாள் மிதிலா.
அவளை நோக்கி திரும்பி, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் ஸ்ரீராம்.
"எனக்கு அவரைப் பிடிக்காது... நான் அவர் கிட்ட பேச விரும்பல... நான் அவரை அடியோடு வெறுக்கிறேன், ஸ்ரீ"
"ஷ்ஷ்ஷ்.... நீ அவர் கிட்ட பேச வேண்டாம்... நீ அவரைப் பாக்கணும்னு எந்த அவசியமும் இல்ல... அவர் உன்னை நெருங்காம நான் பாத்துக்குறேன்... சரியா?"
சரி என்று தலையசைத்தாள் மிதிலா.
"அழாத, மிதிலா"
கண்களைத் துடைத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணை மூடினாள். ஒன்றும் பேசாமல் அவளை ஆசுவாசப் படுத்திக்கொள்ள விட்டான் ஸ்ரீராம். சற்று நேரத்திற்குப் பிறகு,
"மிதிலா, ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்.
மிதிலா ஒன்றும் கூறவில்லை.
"நீ மனசை போட்டு குழப்பிக்காத. எது வந்தாலும் சமாளிச்சுக்கலாம்"
சரி என்று தலையசைத்துவிட்டு, அவனை நோக்கி தலையை உயர்த்தினாள்.
"உங்களை நெனச்சு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?" என்றாள்.
"என்னை நினைச்சா? எதுக்கு?"
"ஆமாம்.. என் கடந்த காலத்தை நினைச்சு... நான் நெனச்சேன்..."
அவள் பேச்சை வெட்டி,
"நானும் யுவராஜோட அம்மா மாதிரி இருப்பேன்னு நெனச்சியா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"பைத்தியகாரி..."
"நீங்களும் கூட பைத்தியக்காரன் தான்... " என்றாள் தன் கண்ணீரை துடைத்தபடி.
"நானா? நிஜமாவா?"
"பின்ன என்ன? நீங்க இதைப் பத்தி என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். நான் நிம்மதியா இருந்திருப்பேன். நம்மளோட நாட்களை நம்ம வீணாக்கி இருக்க வேண்டாம்"
"வீணாக்கினோமா? எந்த விதத்தில் சொல்ற?" என்றான் கிண்டலாக.
"நான்... ஐ மீன்... நான் கவலைப்படாமல் இருந்து இருப்பேன் இல்ல...?" என்று சமாளித்தாள்.
"நான் வேற என்னமோ நினைச்சேன்" என்றான் தன் தலையை லேசாய் சரித்து.
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல என்று கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் மிதிலா.
"எப்படி எல்லாம்?" என்றான் அவள் கையைப் பிடித்துக்கொண்டு.
"என் கையை விடுங்க,"
"எங்க போற?"
"எனக்கு பசிக்குது. நான் சாப்பிட போறேன்" என்று அவன் கையை உதறிவிட்டு ஓடினாள் மிதிலா.
அவள் செல்வதை சிரித்தபடி பார்த்துக் கொண்டு நின்றான் ஸ்ரீராம். அவள் சென்றதற்கு பின் தனது கைப்பேசியை எடுத்து தாமஸுக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க எஸ்ஆர்கே"
"காமராஜ் மேல ஒரு கண்ணு இருக்கட்டும். அவர் உங்க கண் பார்வையில் இருந்து நழுவாம பாத்துக்கங்க"
"நான் அவரைத் தான் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்"
"குட். அவர் என்ன செய்றாருன்னு அப்பப்போ எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டே இருங்க"
"ஓகே "
அழைப்பை துண்டித்து விட்டு, நிம்மதி பெருமூச்சு விட்டு, கட்டிலில் அமர்ந்தான் ஸ்ரீராம். மிதிலாவை நினைத்து வருத்தம் கொண்டான். அவளது கடந்த காலம் அவன் ஏற்கனவே அறிந்தது தான் என்றாலும், அவளே அதைப் பற்றி கூறி அழுத போது அவன் உடைந்து தான் போனான். அவன் அதைப் பற்றி அவளிடம் முன்பே பேசி இருந்தால் அவள் நிம்மதியாக இருந்திருப்பாள். அவள் கூறியது போல் அவர்களது நாட்களும் வீணாகி இருக்காது.
இரவு உணவிற்குப் பின் அறைக்கு வந்த ஸ்ரீராமும், மிதிலாவும் கட்டிலின் மீது அமர்ந்து கொள்ள, மிதிலாவை எண்ணற்ற கேள்விகள் கேட்க துவங்கினான் ஸ்ரீராம், அவளுடைய குழந்தை பருவம் பற்றியும், அவளுடைய அம்மாவைப் பற்றியும். அவளுக்கு தன்னிடம் இருக்கும் தயக்கத்தை துடைக்க நினைத்தான் அவன். அவன் எதிர்பார்த்தது போலவே, தன்னுடைய அம்மாவைப் பற்றி கூறிய போது மிதிலா புன்னகைத்தாள்... சிரித்தாள்... அழவும் செய்தாள். அவளுடைய நினைவுகளில் பெரும்பாலும் சாந்தா, ஆனந்தன், பிருந்தா ஆகியோரே நிரம்பியிருந்தனர். முதல் முறையாக, அவள் வாய் ஓயாமல் பேசியதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான் ஸ்ரீராம். இதற்கு முன் அவள் இவ்வளவு பேசி அவன் பார்த்ததே இல்லை. நடு ராத்திரி வரை அவள் பேசியதை எல்லாம் அமைதியாய், பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். தனது தூக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல், தன் சுயசரிதையை கூறியபடியே, உறங்கிப் போனாள் மிதிலா. சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான் ஸ்ரீராம்.
மறுநாள் காலை
என்றுமில்லாத புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள் மிதிலா. ஏன் இருக்காது அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த மிகப்பெரிய சுமையை இறக்கி வைத்து விட்டாள் அல்லவா... அவள் தன்னிடம் மிக சகஜமாய் இருந்ததைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான் ஸ்ரீராம்.
நர்மதாவுடன் சேர்ந்து, சிற்றுண்டியை உணவு மேஜைக்கு எடுத்து வந்தாள் மிதிலா. உணவருந்த வந்தமர்ந்த ஸ்ரீராம்,
"அக்கா, இன்னைக்கு ராத்திரி நாங்க லேட்டா வருவோம்" என்றான்.
குழப்பத்துடன் முகத்தை சுருக்கி அவனை பார்த்தாள் மிதிலா.
"ஏன் ராமு?"
"ஆடிட்டிங் நெருங்கிகிட்டு இருக்கு கா. நிறைய வேலை இருக்கு"
தன் புருவத்தை உயர்த்தி, உதட்டை அழுத்தினான் மிதிலா. ஏனென்றால் அவளுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவளுடைய முக மாற்றத்தை கவனித்த ஸ்ரீராம் உள்ளூர புன்னகைத்துக் கொண்டான்.
"எதுக்காக கிச்சன்ல நீ வேலை செஞ்சுகிட்டு இருக்க? இன்னைக்கு நீ ஆபீசுக்கு வரபோறது இல்லையா?" என்றான் ஸ்ரீராம் மிதிலாவிடம்.
"எனக்கும் அது தான் புரியல ராமு. மிதிலா இன்னைக்கு ரொம்ப ப்ரிஸ்கா இருக்காங்க" என்றாள் நர்மதா.
"அப்படியா மித்து? என்ன விஷயம்?" என்றாள் ஊர்மிளா.
"அது சீக்ரெட்" என்று சிரித்தாள் மிதிலா.
"அது என்ன சீக்ரெட் மிதிலா?" என்று ஆர்வத்துடன் கேட்ட நர்மதாவை, கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு, அலுவலகத்திற்கு செல்ல தயாராக தனது அறையை நோக்கி ஓடினாள் மிதிலா, அக்காள், தம்பி இருவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டு...
"ராராமுமுமு...."
"ம்ம்ம்?"
"என்ன நடக்குது?"
"அது சீக்ரெட்" என்று அங்கிருந்து சிரித்தபடி சென்றான் ஸ்ரீராம்.
நர்மதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவர்கள் இருவரும் எப்படி விசித்திரமாய் நடந்து கொள்வது இது தான் முதல் முறை. அவர்களை அப்படி பார்க்கவே அவளுக்கு ஆனந்தமாய் இருந்தது.
அலுவலகம் செல்வதற்கு முன், மிதிலா குளியலறைக்கு சென்றாள். அதற்காகவே காத்திருந்தவன் போல, கட்டிலுக்கு பின்னால் இருந்த ஒரு பையை எடுத்தான் ஸ்ரீராம். முன்தினம் மிதிலா உறங்கிய பிறகு அந்த பையை அவன் பேக் செய்து வைத்திருந்தான். வேகவேகமாய் சென்று அதை சுப்புவிடம் கொடுத்தான்.
"இதை என்னோட கார்ல வை"
"சரிங்க அண்ணா" பையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றான் சுப்பிரமணி.
அதை பார்த்த நர்மதா, ஸ்ரீராமை பார்த்து சிரிக்க, பொருள் பொதிந்த புன்னகை பூத்தான் ஸ்ரீராம். நடக்கட்டும் என்பது போல் தலையசைத்து விட்டு சென்றாள் நர்மதா.
அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள் மிதிலா. அவர்கள் இருவரும் அலுவலகம் கிளம்பினார்கள். ஸ்ரீராம் கூறியது போல், அலுவலகத்தில் எந்த ஆடிட்டிங் வேலையும் நடைபெறாதது மிதிலாவை குழப்பத்திற்கு உள்ளாக்கியது. ஆடிட்டிங் வேலை இருப்பதாகவும், இரவு வீடு திரும்ப காலதாமதம் ஆகும் என்றும் ஏன் அவன் கூறினான்? ஆனாலும் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் தனக்கு வழங்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்தாள் மிதிலா.
தேநீர் இடைவேளையின் போது வழக்கம் போல பேண்டரிக்கு சென்று தனது நண்பர்களுக்காக காபி தயாரித்தாள்.
"எனக்கு இந்த காபி வேண்டாம்பா. ஒரு காபிக்காக என்னுடைய மதிப்புமிக்க உயிரை விட நான் தயாரா இல்ல" என்று வழக்கம் போல் கிண்டல் செய்தான் குகன்.
அவனைப் பார்த்து முறைத்தாள் மிதிலா.
"அவனுடைய ஒய்ஃபை வேலை செய்ய விட்டோம்னு தெரிஞ்சா, எங்களை கொன்னுடுவான் எஸ்ஆர்கே" என்றான் குகன்.
"ஓ... அப்படின்னா எதுக்காக இங்க வந்தீங்க? கிளம்புங்க" என்றாள் மிதிலா.
"குகா, மிதிலாவுடைய ராஜகுமாரன் அவங்களுடைய ஃபிரண்டை கொல்லமாட்டார். நீ தைரியமா சாப்பிடு" என்றான் பரத்.
ஆமாம் என்று தலையை அசைத்தபடி காபியைப் பருகினாள் மிதிலா.
"வாவ்... அப்படின்னா, அவனை உங்க ராஜகுமாரனா நீங்க ஏத்துக்கிட்டிங்களா? என்ன ஒரு மாற்றம்.... என்ன ஒரு மாற்றம்..." என்றான் மீண்டும் கிண்டலாக.
பரத்தும், லட்சுமணன் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
"ஆமாம் நான் கூட, மிதிலா, மிஸஸ் ஸ்ரீராம் ரோலுக்கு சூட் ஆவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..." என்றான் பரத்.
"மிதிலா எந்த ரோலுக்கும் சூட் ஆயிடுவா" என்றான் லட்சுமன் பெருமையுடன், வழக்கம் போல.
அவர்களுடைய பேச்சு வளர்ந்து கொண்டே போனது. அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான் ஸ்ரீராம். இந்த நால்வரின் உலகம் அழகானது. இவர்களுக்கு பேசவும், சிரிக்கவும் எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் தேவை படுவதில்லை. அவர்கள் ஒன்றாய் இணைந்தாலே அந்த இடம் வசீகரம் பெற்றுவிடுகிறது. உறவுமுறை, தகுதி, பாலினம் கடந்த உன்னதமான நட்பு அவர்களுடையது. நட்பு எந்த ரீதியிலும் வாழ முடியும் என்பதற்கு இவர்கள் ஓர் எடுத்துக்காட்டு, என்று எண்ணி புன்னகைத்தான் ஸ்ரீராம்.
முதல் நாள் இரவு, அவனுக்கும் மிதிலாவுக்கும் இடையில் நடந்த உரையாடல்களை எண்ணிப் பார்த்தான். அவனிடம் பேசிய படியே அவள் உறங்கி போனதை நினைத்த போது, *களுக்* என்ற சிரிப்பு அவன் தொண்டையிலிருந்து குதித்தது. இன்று என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை...!
மாலை
ஸ்ரீராமுடன் பணி புரிந்து கொண்டிருந்தாள் மிதிலா. ஆடிட்டிங் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான் ஸ்ரீராம், தான் கூறியது உண்மை தான் என்று மிதிலாவை நம்பவைக்க. நேரம் ஆகிக் கொண்டிருந்தது... மிதிலா சோர்வடைந்தாள். அவர்களைத் தவிர அலுவலகத்தில் வேறு யாருமில்லை. அவர்களுக்கு இரவு உணவு வரவழைத்துக் கொடுத்த பின், குகன் கூட ஒன்பது மணிக்கு, கிளம்பி சென்று விட்டான். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள் ஸ்ரீராமும், மிதிலாவும். கடிகாரத்தைப் பார்த்த மிதிலா திகைப்படைந்தான்.
"மணி 11:15..." என்றாள் அதிர்ச்சியுடன்.
"ஆமாம். உனக்கு தூக்கம் வருதா?" என்றான் ஸ்ரீராம்.
*ஆமாம்* என்று தலையசைத்தாள் மிதிலா.
"சரி கிளம்பலாம். மீதி வேலையை நாளைக்கு பார்த்துக்கலாம்"
கம்ப்யூட்டரை லாக் அவுட் செய்து விட்டு எழுந்தான் ஸ்ரீராம்.
அவர்கள் அலுவலகத்தை விட்டு கிளம்பினார்கள். ஸ்ரீராம் எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்திலேயே உறங்கி போனாள் மிதிலா. தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை நோக்கி காரை செலுத்தினான் ஸ்ரீராம்.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண் விழித்த மிதிலா, தான் ஒரு புதிய இடத்தில் இருப்பதை கண்டு திகில் அடைந்தாள். கட்டிலை விட்டு கீழே இறங்கி கத்தியபடி வெளியே ஓடினாள்.
"ஸ்ரீ... ஸ்ரீ... என்னை யாரோ கடத்திட்டாங்க" என்று ஓடியவள் ஸ்ரீராமின் மீது மோதிக் கொண்டு நின்றாள்.
அவனை பார்த்தவுடன்,
"நீங்களா? அப்படின்னா என்னை யாரும் கடத்தலயா?" என்றாள் குழப்பமாக.
"நான் தான் உன்னை கடத்திக்கிட்டு வந்தேன்" என்றான் ஸ்ரீராம் சிரிப்புடன்.
"நீங்களா? ஏன்?"
"சும்மா உன் கூட ஜாலியா இருக்கலாம்னு தான்..." என்ற ஸ்ரீராமை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மிதிலா.
தொடரும்...