65 காதல் ஒப்புகை
ஸ்ரீராம் தன் கரத்தை நீட்டி தன்னை அழைத்ததை கண்டு திகைப்படைந்தாள் மிதிலா. அவனிடம் நெருங்குவதற்கு முன், அவள் மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். இப்பொழுது அவன் இருக்கும் நிலையில் அவள் கூறிவதை அவன் கேட்பானா? கேட்பான்... இப்பொழுது அவள் எது சொன்னாலும் அவள் கேட்பான்... அதை ஏற்றும் கொள்வான்... ஏனென்றால், அவன் இப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான். இப்பொழுது அவனிடம் எதையும் கூறுவது சரியாக இருக்காது. அவன், தன்னை தெளிந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள் மிதிலா. இந்த பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாய் பயணம் செய்யக்கூடியது *ஒளி* என்பது நாம் அறிந்தது தான். ஆனால் ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது வேறு ஒன்று உள்ளது. அது மனிதனின் மனம். ஒரு நொடியில் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வரும் வல்லமை படைத்தது மனித மனம். அப்படித் தான் மிதிலாவும் கண் இமைக்கும் நேரத்தில் இவ்வளவையும் யோசித்து முடித்தாள்.
ஆனால் ஸ்ரீராமுக்கு, அந்த ஒரு நொடி கூட ஒரு யுகம் போல் தோன்றியது. மேலும் பொறுக்க மாட்டாதவனாய், மிதிலாவின் கையை பிடித்து, தன்னை நோக்கி இழுத்து, பல நாளாய் காத்திருந்த ஆசையுடன் அவளை அணைத்துக் கொண்டான். ஸ்ரீராமின் அந்த செயலுக்குப் பிறகு, அவன் கையில் இருந்து வெளிவரும் எண்ணம் மிதிலாவுக்கு இருக்கவில்லை. அவனது கட்டுடலை தன் பூங்கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டாள் மிதிலா, ஸ்ரீராமின் இதழ்களில் புன்னகையை மலர செய்து. அவளது கழுத்திடுக்கில் தன் முகத்தை அவன் புதைத்துக் கொண்ட போது, அவளது மூலாதாரமே நடுக்கம் கண்டது. தனது கட்டுப்பாட்டை இழந்து விடாமல் இருக்க அவள் கடவுளை வேண்டினாள். கடவுளை வேண்டினாலும் அவனிடமிருந்து விலக அவள் நினைக்கவில்லை. ஒருமித்த மனதுடன் அவன் அணைப்பு தந்த கதகதப்பை ஏற்றுக்கொண்டாள் மிதிலா.
மிதிலாவின் நிலையே இப்படி என்றால், ஸ்ரீராமை பற்றி நாம் கேட்க வேண்டியதே இல்லை அல்லவா...! அவன் மிதிலாவிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் வரை எந்தவித அசைவும் இன்றி நின்றான். அனைத்தையும் மறந்து... தன்னையே மறந்து.
மிதிலாவை அணைத்திருந்த தன் பிடியை தளர்த்த ஸ்ரீராம், உணர்ச்சிகளின் குவியலாய் காட்சியளித்தான். மிதிலாவின் முகத்தை தன் கரங்களில் பற்றி, அவள் இதழ்களை நோக்கி குனிந்தான். மெல்ல கண் திறந்த மிதிலா, அவன் செய்கையை பார்த்து திடுக்கிட்டாள். அவன் செய்ய நினைத்ததை புரிந்துகொண்ட அவள், அவனை பிடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிச் சென்றாள், ஸ்ரீராமுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சமையலறைக்கு வந்தாள் மிதிலா. அப்பொழுது தன் தோளின் மீது மென்மையான தொடுதலை உணர்ந்து திரும்பியவள், அங்கு நர்மதா நின்று கொண்டிருப்பதை பார்த்து புன்னகை புரிந்தாள்.
"நடந்தது எல்லாத்துக்கும் ரொம்ப சாரி மிதிலா" என்றாள் நர்மதா தவிப்புடன்.
"இதுல உங்க தப்பு என்ன கா இருக்கு?" என்றாள் மிதிலா.
"இப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது. நான் ரொம்ப பயந்துட்டேன்"
"ஏன் கா? உங்க தம்பியை பத்தி உங்களுக்கு தெரியாதா?"
"எனக்கு அவனைப் பத்தி தெரியுமா தெரியாதாங்குறது இங்க விஷயமே இல்ல, மிதிலா. சூழ்நிலை தான் இங்க பிரச்சனையே. இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில எது சரின்னு ஆராயிறதை விட கண்ணால பாக்குறதை தான் எல்லாரும் நம்புவாங்க"
அவள் கூறுவது உண்மை தான் என்பதை ஏற்று தலையசைத்தாள் மிதிலா.
"நீங்க அவனை காப்பாத்திட்டிங்க. நீங்க அவனை நம்புனது எனக்கு ரொம்ப சந்தோஷம்"
"அவர் என் நம்பிக்கைக்கு தகுதியானவர் தான் கா"
"இதுக்காகத் தான், நீங்க தான் வேணுமுன்னு அவன் விடாப்பிடியா இருந்தான் போலிருக்கு. எங்க ராமுவோட வாழ்க்கையில் வந்ததுக்காக உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ். அவனை மனசார ஏத்துக்கிட்டதுக்காகவும் உங்களுக்கு தேங்க்ஸ்"
"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டியது இல்ல கா. நான் அவருடைய ஒய்ஃப்"
அவளை நேசமாய் அணைத்துக் கொண்டாள் நர்மதா.
"ராமு வர்ற வரைக்கும் நீங்க காத்திருக்க வேண்டாம். நீங்க சாப்பிடுங்க" என்றாள் நர்மதா.
"ஏன் கா அப்படி சொல்றீங்க?" என்றாள் மிதிலா ஒன்றும் புரியாமல்.
"ஏன்னா அவன் திரும்பி வர நிச்சயம் லேட் ஆகும்"
"லேட்டா? அவர் வெளியே போயிருக்காரா?"
"இப்போ தான் வெளியே போனான். உங்களுக்கு தெரியாதா?" என்றாள் நர்மதா.
ஸ்ரீராம் வெளியே சென்று விட்டானா? மிதிலாவுக்கு திக்கென்றது.
"அவன் அப்செட்டா இருக்கும் போது வீட்ல இருக்க மாட்டான். எங்கேயாவது போயிடுவான். இன்னைக்கு, இதை நான் எதிர்பார்த்தது தான். லயாவால அவன் ரொம்ப அப்செட்டா இருக்கான்."
இனம்புரியாத உள்ள கிளர்ச்சியுடன் நர்மதாவை பார்த்துக் கொண்டு நின்றாள் மிதிலா. ஸ்ரீராம் வீட்டிலிருந்து வெளியே சென்றது லயாவால் தானா? இல்லை தன்னாலா? அவன் வீட்டை விட்டு சென்றதற்கு லயா காரணமாக இருக்க முடியாது. சில நிமிடங்களுக்கு முன்னால் அவள் தான் அவனை நிராதரவாய் விட்டு வந்தாள். அது தான் காரணமாக இருக்க வேண்டும். அதை நினைத்த போது வருத்தமாக இருந்தது அவளுக்கு. நர்மதாவை பார்த்து செயற்கையாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள் மிதிலா.
சமையல் அறையை விட்டு வெளியே வந்த மிதிலா, லயா தன் பெட்டி படுக்கையுடன் பிரியாவுடன் வருவதை கவனித்தாள். மிதிலாவை பார்த்தவுடன் ஏதோ முணுமுணுத்தாள் லயா. அது மிதிலாவின் காதில் விழா விட்டாலும் அவள் தன்னை சபிக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல் தன் அறைக்குச் சென்றாள் மிதிலா. லயா போன்ற தரம்கெட்டவளின் சாபம் தன்னை ஒன்றும் செய்யாது என்று நம்பினாள் அவள்.
ஸ்ரீராமுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள் மிதிலா. நர்மதா கூறியது போல், மிகவும் தாமதமாகத் தான் வீட்டுக்கு வந்தான் ஸ்ரீராம். கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டு ஓடிச்சென்று கதவை திறந்தாள் மிதிலா. கதவைத் திறந்த அவள், தனது கோட்டை தோளில் போட்டுக்கொண்டு, கதவில் சாய்ந்தபடி நின்றிருந்த ஸ்ரீராமை பார்த்து தயங்கி நின்றாள். அவன் நின்றிருந்த தோரணையும், அவன் பார்த்த பார்வையும் வித்தியாசமாய் இருந்தது. உள்ளே வந்த ஸ்ரீராம், கதவை சாத்தி தாழிட்டான், தனது கண்களை மிதிலாவின் மீதிருந்து அகற்றாமல். உள்ளே நுழைந்த அவன், லேசாய் தள்ளாடுவதை பார்த்து முகம் சுளித்தாள் மிதிலா. மதுவின் நெடி அவளது நாசியைத் தாக்கியது. அந்த நெடி, நிச்சயம் ஸ்ரீராமின் மீதிருந்து தான் வீசியது.
"நீங்க குடிச்சிருக்கிங்களா?" என்றாள் நம்ப முடியாமல்.
அவளுடைய குடிகார தந்தையின் காரணமாக, அவள் குடிப்பவர்களை அடியோடு வெறுத்தாள். ஸ்ரீராம் அந்தப் பட்டியலில் இணைவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், ஸ்ரீராமின் வார்த்தைகள் அவள் முகத்தை சுருக்கின.
"நான் குடிக்கலன்னு சொன்னா நீ நம்புவியா?"
"உங்க மேலே சாராய வாடை வீசும் போது நான் எப்படி நம்ப முடியும்?" என்றவளின் குரலில் ஏமாற்றம் எதிரொலித்தது.
"சரி... நம்பாதே... எப்பவும் போலவே"
அந்த வார்த்தைகள் மிதிலாவை காயப்படுத்தின.
"நான் உங்களை நம்பலையா?" என்றாள் வருத்தமாக.
"ஆமாம். நீ என்னை நம்புற... மத்தவங்களுக்கு முன்னாடி நீ என்னை நம்புற... ஆனா நாலு சுவருக்குள்ள நீ என்னை நம்பலையே..." என்று தன் தோளில் இருந்த கோட்டை தரையில் வீசினான்.
வாயடைத்துப் போனாள் மிதிலா. இந்த குடிகார மனிதனுக்கு என்ன பதில் கூற முடியும்? அவனுக்கு பதில் கூறாமல் நின்றாள். அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
"மிதிலா" என்று அவள் பெயரைக் கூறி அழைத்தபடி நர்மதா கதவைத் தட்டினாள்.
மிதிலா கதவை திறக்க செல்லும் முன், ஸ்ரீராமே சென்று கதவை திறந்தான்.
"ராமு நீ எப்ப வந்தே?" என்றாள் நர்மதா.
"இப்போ தான் கா வந்தேன்"
"நீ சாப்பிட்டியா?"
"இன்னும் இல்ல கா"
"சரி, உனக்கு நான் சாப்பாடு கொண்டு வரேன்" என்று அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,
"நீங்க இருங்க கா, நான் அவருக்கு சாப்பாடு கொண்டு வரேன்" என்று அங்கிருந்து செல்ல முயன்றாள் மிதிலா.
அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் ஸ்ரீராம், அவளை அங்கிருந்து செல்ல விடாமல். நர்மதா அதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். மிதிலாவோ பதட்டமானாள்.
"இப்போ வேண்டாம் கா. நான் அப்புறமா சாப்பிடுறேன்" என்றான் ஸ்ரீராம் மிதிலாவை பார்த்தபடி.
"சரி" என்றாள் அவர்களுக்கு இடையில் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்ட நர்மதா.
கதவருகில் சென்று நின்றவள்,
"ஒன்னும் பிரச்சனை இல்லையே ராமு?" என்றாள் மிதிலாவை பார்த்தபடி.
"ஒன்னும் பிரச்சனை இல்ல கா" என்றான் தான் பிடித்திருந்த மிதிலாவின் கையை விடாமல்.
"சரி, நான் உனக்கு சாப்பாட்டை சுப்புகிட்ட குடுத்து அனுப்புறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் நர்மதா.
மிதிலாவின் கையை விட்டுவிட்டு கதவை சாத்தினான் ஸ்ரீராம்.
"எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையா, மிதிலா?" என்றான் மயக்கும் புன்னகையுடன்.
அவனுக்கு பதில் கூறாமல் சிலை போல் நின்றிருந்தாள் மிதிலா.
"உன்னால நான் எவ்வளவு டிஸ்டர்ப்பா இருக்கேன்னு உனக்கு தெரியுமா?"
வருத்தத்துடன் தலைகுனிந்தாள் மிதிலா.
அவளை நோக்கி மெதுவான மற்றும் சீரான அடிகளை எடுத்து வைத்து நெருங்கினான் ஸ்ரீராம், கூரிய பார்வையுடன். பின்னால் நகர்ந்த மிதிலா, சுவற்றின் மீது சாய்ந்து நின்றாள். தன் கரங்களை சுவற்றில் அவளுக்கு இரண்டு பக்கங்களிலும் பதித்து, அவளைத் தன் கரங்களால் சிறை பிடித்து நின்றான் ஸ்ரீராம்.
"சொல்லு மிதிலா... எனக்கு என்ன வேணுமுன்னு சொல்ல, எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தியா நீ?"
சங்கடத்தின் உச்சக்கட்டத்தில் நின்றிருந்தாள் மிதிலா. ஸ்ரீராம் குடிப்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன் சுய நினைவில் இல்லை என்பது திண்ணம். அதனால் தானே அவன் இப்படி எல்லாம் உளறிக் கொண்டு இருக்கிறான்...! இல்லாவிட்டால், ஸ்ரீராமா தன் வாயை திறந்து பேசுவது? மிதிலா ஏதும் கூறுவதற்கு முன், ஸ்ரீராம் தொடர்ந்தான்.
"நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும். நான் உன்னை கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பு தான். ஆனா எனக்கு வேற வழி இருக்கல. நான் செஞ்ச தப்பை மாத்திக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்க கூடாத அளவுக்கு நான் தகுதி இல்லாதவனா? உனக்காக நான் என்னவெல்லாம் ஃபீல் பண்றேன்னு சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டியா, மிதிலா?"
தன் மனதில் இருப்பவற்றை கொட்டித் தீர்க்க, அவளும் கூட ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் காத்திருக்கிறாள் என்று அவள் எப்படி கூறுவாள்?
அப்போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது ஸ்ரீராமுக்கு எரிச்சலூட்டியது. அது சுப்ரமணியாகத் தான் இருக்க வேண்டும். நர்மதா அவனிடம் உணவு கொடுத்து அனுப்பி இருப்பாள். சுவற்றில் இருந்த தன் கரங்களை நீக்கினான் ஸ்ரீராம். ஆனால், மிதிலா அங்கிருந்து சென்று விடாமல் இருக்க அவளது வழியை மறைத்துக் கொண்டு நின்றான். இன்று, இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவராமல் அவன் விடப்போவதில்லை போல் தெரிகிறது.
"யாரது?" என்றான் ஸ்ரீராம்.
"ராமு அண்ணா, நர்மதா அக்கா உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க" என்றான் சுப்பிரமணி.
"உள்ள வா" என்று ஸ்ரீராம் கூறியவுடன் உள்ளே நுழைந்தான் சுப்ரமணி, ஸ்ரீராமுக்கு தான் கொண்டு வந்திருந்த உணவோடு.
அதை டீப்பாயின் மீது வைத்துவிட்டு சத்தமில்லாமல் கதவை சாத்திக்கொண்டு சென்றான் சுப்பிரமணி.
அவன் செல்லும் வரை காத்திருந்த ஸ்ரீராம், மீண்டும் தனது கரங்களால் அவளை சிறை பிடித்துக் கொண்டான்.
"பதில் சொல்லு மிதிலா" என்று எங்கு நிறுத்தினானோ அங்கிருந்து மீண்டும் தொடங்கினான்.
"போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்க. உங்களுக்காக சாப்பாடு காத்திருக்கு. முதல்ல சாப்பிடுங்க"
"எனக்கு எதுவும் வேண்டாம்"
"குடிச்சதுக்கு பிறகு எதுவும் சாப்பிடாம தூங்குறது நல்லதில்ல" என்றாள் கண்டிப்புடன்.
"ஏன்? சாப்பிடாம தூங்கினா என்ன ஆகும்?"
"உங்களுடைய உடம்பு கெட்டுப் போகும்" என்றாள் அவனுக்கு தெரியாததைக் கூறுவது போல.
"உடம்பு கெட்டு போனா என்ன?"
"என்ன கேள்வி இது?" என்று சலித்துக்கொண்டாள் மிதிலா.
"என் மேல அக்கறை காட்டுவ... எனக்கு சப்போர்ட் பண்ணுவ... என்னை நம்புவ... ஆனா, என்கிட்ட இருந்து விலகியே நிப்ப... அப்படித் தானே?"
விக்கித்துப் போனாள் மிதிலா.
"சரி. நான் சாப்பிடுறேன்... நீ தான் எனக்கு ஊட்டி விடணும்" என்று கோரிக்கை வைத்தான் ஸ்ரீராம்.
தன் விழி விரிய அவனைப் பார்த்தாள் மிதிலா.
"ஊட்டி விடுவியா?"
சரி என்று மெல்ல தலையசைத்தாள் மிதிலா.
"நிஜமா எனக்கு நீ ஊட்டி விடப் போறியா?" என்றான் நம்பமுடியாமல்.
"ம்ம்ம்" என்றாள் நடுக்கத்துடன்.
"என்னை நீ காதலிக்கிறல்ல?" என்றான் அவள் கண்களை சந்தித்த படி.
அந்த கேள்வியை சிறிதும் எதிர்பார்க்காத மிதிலா தடுமாறிப் போனாள். அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
"நான் உன்னை காதலிக்கிறேன் மிதிலா" என்று தன் மனம் திறந்தான் ஸ்ரீராம்.
தன் துப்பட்டாவை இருக்கமாய் பற்றினாள் மிதிலா. அவளுடைய வயிற்றில் பூகம்பம் நிகழ்வது போல் இருந்தது. ஏன் இருக்காது? அவளுக்கு முன்னால் நின்று, தன் காதலை கூறிக் கொண்டிருப்பது ஸ்ரீராம் ஆயிற்றே...! அவன் குடித்திருக்கிறான். குடிகாரன் உண்மையை தான் பேசுவான் என்பது அவளுக்கு தெரியாதா?
"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன். ஆனா, நீ என்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்ல. அதனால தான் நான் உன்னை கட்டாயப் படுத்தினேன். அதை நான் எந்த தப்பான எண்ணத்தோடவும் செய்யல. உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்ல மிதிலா. நீ என்னை இக்னோர் பண்ணும் போது நான் வேற என்ன செய்ய முடியும்? என்னை சுத்தி எவ்வளவு பேர் இருந்த போதிலும் நான் தனியா விடப்பட்டவனா உணர்ந்தேன். என்னை நான் நியாயப்படுத்தல. நான் செஞ்சது தப்பு தான்னு எனக்கு தெரியும். நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி இருக்க கூடாது. ஆனா, நான் ஃபோர்ஸ் பண்ணேன்... அதனால தான் இன்னைக்கு நீ என் கூட இருக்க. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்னு நான் நெனச்சேன். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச், மிதிலா."
இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஒப்புகையை, தான் ஸ்ரீராமிடம் இருந்து தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நம்பமுடியவில்லை மிதிலாவால். அவன் தன் சுய நினைவுடன் இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணினாள் மிதிலா. ஒருவேளை அப்படி அவன் குடிக்காமல் இருந்திருந்தால், இந்த நாள், அவர்களுடைய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மிக உன்னதமான நாளாக அமைந்திருக்கும்.
"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்கிறல்ல?" என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் ஸ்ரீராம்.
தான் நின்று கொண்டிருக்கும் கட்டம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தாள் மிதிலா. தன்னை சுதாகரித்துக் கொண்டு,
"நீங்க முதல்ல சாப்பிடுங்க" என்று பேச்சை மாற்ற முயன்றாள்.
"முடியாது... நீ எனக்கு பதில் சொல்ற வரைக்கும் நான் சாப்பிட மாட்டேன்" என்றான் பிடிவாதமாக.
"சொல்றதை கேளுங்க ஸ்ரீ..." என்று முதல் முறையாக அவன் பெயரை உச்சரித்தாள் மிதிலா.
"வாவ்... ஃபைனலி... சாரையும், ஜூனியரையும் விட்டுட்டு, இப்பவாவது உனக்கு என்னுடைய பெயரை சொல்லனும்னு தோணுச்சே. ஸ்ரீ... கேக்க ரொம்ப நல்லா இருக்கு. என்னுடைய பெயரை கூட வித்தியாசமா, யாருமே கூப்பிடாத மாதிரி கூப்பிட உன்னால மட்டும் தான் மிதிலா முடியும்..."
"வந்து சாப்பிடுங்க"
முடியாது என்று தலையசைத்தான்.
"நம்ம நாளைக்கு காலையில பேசலாம்" என்றாள் தீர்க்கமாய்.
"ஏன்? ஏன் இப்ப பேசக்கூடாது?"
"இப்ப பேசுறதால என்ன பிரயோஜனம் இருக்க போகுது? என் மனசுல என்ன இருக்குன்னு நான் சொன்னாலும் உங்களுக்கு அது ஞாபகம் இருக்கப் போறது இல்ல. நீங்க குடிச்சிருக்கீங்க. நாளைக்கு காலையில உங்களுக்கு எல்லாம் மறந்து போயிடும்" என்று குடிகாரர்களின் இயல்பை கூறினாள் மிதிலா.
ஆனால், ஸ்ரீராமின் அடுத்த வார்த்தைகள் அவளை அடியோடு அசைத்துப் பார்த்தது.
"நான் குடிக்கல" என்றான் அமைதியாக.
தொடரும்...