42 யாராலும் முடியாதது...
சிந்தனை மேகங்களால் சூழப்பட்ட மனதுடன் தனது காரை வெகு வேகமாய் ஓட்டிக்கொண்டு சென்றான் ஸ்ரீராம். மிதிலா தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்ற பதட்டம் அவனை கொன்று தின்றது. என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டிருந்தான். அதை செயல்படுத்த வேண்டுமானால், மிதிலா அலுவலகத்தை விட்டு கிளம்பும் முன் அவன் அவளை சந்தித்தாக வேண்டும். இந்த பிரச்சனை உடனடியாக முடிக்கப்பட வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு, மிதிலா ஒரு நாள் கூட கவலைப் படக்கூடாது என்று நினைத்தான் ஸ்ரீராம்.
இதற்கியிடையில்...
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
குகனின் அறைக்கு வந்த மிதிலா, அவனது அறையின் கதவை தட்டினாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் குகன்.
"எங்க அக்காவுடைய வளைகாப்புக்கு நீங்க வரணும், குகா" என்று அவனுக்கு அழைப்பு விடுத்தாள் மிதிலா.
"ஓ... எப்போ?"
"நாளைக்கு சாயங்காலம்"
"கண்டிப்பா வரேன்"
"கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க"
"இதைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலையே?"
"மறந்துட்டேன்..."
"மறந்துட்டீங்களா? இல்ல வேற விஷயத்தினால டென்ஷனா இருந்தீங்களா?"
தன் கண்களை சுழற்றினாள் மிதிலா.
"கவலைப்படாதீங்க. எஸ்ஆர்கே இந்த விஷயத்தை சீக்கிரமாவே முடிவுக்குக் கொண்டு வருவான்"
"பார்க்கலாம்..."
"அவன் என்ன செய்யப் போறான்னு பார்க்க ரொம்ப ஆவலா இருக்கீங்க போல இருக்கு...?"
"போதும் நிறுத்துங்க, குகா"
"ஓகே, கூல்... வேற யாரை எல்லாம் இன்வைட் பண்ணி இருக்கீங்க?"
"லக்கியையும், சௌமியாவையும்..."
"எஸ்ஆர்கே வை கூப்பிடலையா?" என்றான் கிண்டலாக.
அவனைப் பார்த்து முறைத்தாள் மிதிலா.
"என்ன இருந்தாலும், உங்களுக்கு புருஷனாக போறவன் இல்லையா?" என்று பல்லை காட்டி சிரித்தான்.
"மணி ஆறாயிடுச்சு. நான் கிளம்பறேன். பை..." என்றாள் தனது கடிகாரத்தை பார்த்தபடி, குகன் கூறியதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல்.
"எஸ்ஆர்கேவை கூப்பிடுறதை பத்தி யோசிங்க, மிதிலா..." என்று பின்னால் இருந்து கத்தினான் குகன்.
ஸ்ரீராம் நினைத்தது போலவே, அவன் அலுவலகம் வந்தடையும் முன், அலுவலகத்தை விட்டு கிளம்பினாள் மிதிலா. ஆனால் அவளை தவற விடும் அளவிற்கு அவன் அதிர்ஷ்டம் அற்றவன் அல்ல. அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்த மிதிலாவின் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீராம். திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் மிதிலா.
"கார்ல ஏறுங்க" என்றான் சென்டர் லாக்கை திறந்துவிட்டு.
தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்ற நோக்கில் இங்கும் அங்கும் பார்த்தாள் மிதிலா.
"ஏறுங்கன்னு சொன்னேன்" என்றான் கண்டிப்பான குரலில்.
லயா விஷயத்தைப் பற்றி தன்னிடம் அவன் பேச நினைக்கிறான் என்று யூகித்துக் கொண்டாள் மிதிலா. விஷயத்தின் ஆழம் அவளுக்கு புரிந்திருந்ததால், மறுப்பு கூறாமல் காரில் ஏறி அமர்ந்தாள். அவளிடம் எதுவும் பேசாமல், அவள் வசிக்கும் வில்லிவாக்கத்தை நோக்கி காரை செலுத்தினான் ஸ்ரீராம்.
தான் எதிர்பார்த்தது போல் அல்லாமல், ஸ்ரீராம் ஒன்றும் பேசாமல் இருந்ததை பார்த்து மிதிலா குழம்பிப் போனாள். அவன் வில்லிவாக்கத்தை நோக்கி சென்றதைப் பார்த்து அவள் மேலும் குழம்பினாள்.
பதினைந்து நிமிட பயணத்திற்கு பிறகு,
"உங்களுடைய ஃபேமிலி டாக்டர் யாரு?" என்றான் காரை செலுத்தியவாறு.
"என்ன கேட்டீங்க?" என்றாள் மிதிலா.
"ஃபேமிலி டாக்டர்..."
"அப்படி யாரும் இல்ல"
"அப்படின்னா, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா யார் உங்களை ட்ரீட் பண்ணுவா?"
"எங்க ஏரியாவுல ஒரு டாக்டர் இருக்காரு. அவர்கிட்ட போவோம்"
"அவர்கிட்ட என்னைக் கூட்டிகிட்டு போங்க"
"ஏன்? என்ன ஆச்சு? உங்களுக்கு உடம்பு சரியில்லையா?"
"நான் அவரை மீட் பண்ணனும்" என்றான் அமைதியான முகபாவத்துடன்.
"வில்லிவாக்கம் மெயின் ரோட்ல தான் அவருடைய கிளினிக் இருக்கு" என்று அவனுக்கு வழி காட்ட துவங்கினாள் மிதிலா.
அந்த சிறிய மருத்துவமனையின் வாசலில், தனது காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீராம். மருத்துவர், நோயாளிகளை பார்க்க ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால், கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆறு நாற்காலிகள் போடப்பட்ட மிகச் சிறிய அறையில் ஐந்து பேர் காத்திருந்தார்கள்.
"இருங்க, நான் டோக்கன் வாங்கிட்டு வரேன்" என்றாள் மிதிலா.
ஸ்ரீராம் சரி என்று தலையசைத்து, காரில் அமர்ந்து காத்திருந்தான். உள்ளே சென்ற மிதிலா, ஆறாம் எண் டோக்கனை பெற்றாள். ஐம்பது வயது மதிக்கத்தக்க மருத்துவர் வந்தவுடன், ஒருவர் பின் ஒருவராக அவரை சென்று பார்க்கத் துவங்கினார்கள்.
காரை விட்டு கீழே இறங்கிய ஸ்ரீராம், மிதிலாவின் அருகில் வந்து நின்று கொண்டான்.
"இந்த ஏரியாவில வேற எந்த கிளினிக்கும் இல்லையா?"
"நிறைய இருக்கு"
"அப்புறம் எதுக்காக பர்ட்டிகுளரா இந்த கிளினிக்குக்கு வந்தீங்க?"
"தெரியல... சின்ன வயசுல இருந்து இங்க தான் வந்துகிட்டு இருக்கேன்"
"ரொம்ப நல்லதா போச்சு"
"ஏன்?"
அவன் எதுவும் கூறுவதற்கு முன், அவர்களுடைய எண் அழைக்கப்பட்டது. அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
மிதிலாவை பார்த்து புன்னகைத்தார் மருத்துவர்.
"ஹலோ டாக்டர்" என்றாள் மிதிலா.
"ஹாய்..." என்றார் மருத்துவர், மிதிலாவை பார்க்காமல், கோட்டு சூட்டுடன், பெரிய இடத்து பையன் தோரணையில் இருந்த ஸ்ரீராமை பார்த்தபடி.
அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை புரிந்து கொண்டு, ஸ்ரீராமை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மிதிலா.
"இவர் என்னோட பாஸ்..."
அவள் பேச்சை துண்டித்து,
"நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்" என்றான் ஸ்ரீராம்.
தன் புருவத்தை உயர்த்திய மருத்துவர், மிதிலாவை ஆச்சரியமாய் பார்த்து,
"உட்காருங்க" என்றார்.
இருவரும் மருத்துவரின் முன் அமர்ந்தார்கள்.
"என்ன பிரச்சனை சொல்லுங்க"
"நீங்க என்னை டெஸ்ட் பண்ணணும், டாக்டர்" என்றான் ஸ்ரீராம்.
"தாராளமா பண்ணலாம்... என்ன டெஸ்ட்?"
"வெர்ஜினிட்டி டெஸ்ட்" என்றான் சாதாரணமாக.
மருத்துவரை விட அதிகமாய், மிதிலா தான் அதிர்ச்சி அடைந்தாள் என்று கூற தேவையில்லை. அதிர்ச்சி அடைந்தாள் என்று கூறுவதைவிட, அடியோடு ஆட்டம் கண்டாள் என்று கூறலாம்.
"எனக்கு புரியல" என்றார் மருத்துவர், தெளிவான பதிலை ஸ்ரீராமிடம் இருந்து பெற விரும்பி. ஏனென்றால், ஒரு ஆண்மகன் தனது கன்னித்தன்மையை சோதிக்க சொல்வது இது தான் முதல் முறை.
"நீங்க கேட்டது சரி தான், டாக்டர்"
"ஆனா, ஆம்பளைங்களுக்கு டெக்னிக்கலா அப்படி எந்த டெஸ்டும் செய்யிறது இல்ல..."
"டெக்னிக்கலா செய்றது இல்ல தான். ஆனா, உங்களை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ்டு டாக்டரால அதை செய்ய முடியும்னு படிச்சிருக்கேன்... உண்மை தானே?"
மென்று முழங்கினார் மருத்துவர்.
"போகலாமா?" என்று எழுந்து நின்றான் ஸ்ரீராம்.
"ஷ்...யூ... ர்..."
"தேவையில்லை டாக்டர்..." என்றாள் மிதிலா கொதிப்புடன், நாற்காலியை விட்டு எழுந்து நின்று.
அவர்களுக்கிடையில் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மருத்துவர்,
"நீங்க கலந்து பேசுங்க. நான் வெயிட் பண்றேன்" என்றார்.
"இதுல டிஸ்கஸ் பண்ண எதுவும் இல்ல டாக்டர். நீங்க என்னை டெஸ்ட் பண்ணுங்க"
"தயவுசெய்து என் கூட வரீங்களா?" என்று அங்கிருந்து நடக்கத் துவங்கிய மிதிலா, ஸ்ரீராம் அங்கேயே நின்றிருந்ததை பார்த்து,
"ப்ளீஸ், வாங்க ஜூனியர்" என்று கெஞ்சினாள்.
"எக்ஸ்க்யூஸ் அஸ், டாக்டர்" என்றான் ஸ்ரீராம்.
சரி என்று தலையசைத்தார் மருத்துவர். மிதிலாவை பின்தொடர்ந்தான் ஸ்ரீராம். வெளியே வந்த மிதிலா, காரின் கைப்பிடியை பற்றிக்கொண்டு நிற்க, ரிமோட்டின் மூலம் காரின் சென்டர் லாக்கை திறந்துவிட்டான் ஸ்ரீராம். மிதிலா காரில் ஏறி அமர, ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்தான் ஸ்ரீராம். அவனை நோக்கி திரும்பிய மிதிலா,
"என்னைப் பத்தி நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? நீங்க என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா? நான் கேட்டேனா, உங்க கன்னி..." அதை முடிக்காமல் விட்டு, நேராக திரும்பி அமர்ந்தாள் மிதிலா, மூச்சு வாங்கியபடி சங்கடத்துடன்.
"நீங்க என்கிட்ட கேட்கல... ஆனா, சந்தேகம்னு வந்த பிறகு அதை நிவர்த்தி செய்ய வேண்டியது என்னோட கடமை. என்னோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம், மிதிலா... எனக்கும் கற்பு இருக்கு..."
"அதுக்காக நீங்க தீ குளிக்கணும்னு அவசியமில்ல"
"நான் விரும்பி தீயில இறங்கல. என்னை தீயில போட்ட பிறகு நான் அதை கடந்து தானே ஆகணும்? என்கூட காலம் பூரா வாழ போற என்னோட வைஃப், என்னோட நிம்மதியா இருக்கணும். ஒரு நிமிஷம் கூட, என்னோட கேரக்டரை நினைச்சி அவங்க மனசு நிம்மதியிழக்க கூடாது. அவங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்க என்னால விட முடியாது..."
"நான் ஸ்ட்ரெஸ்டா இல்ல..."
அவள் தன்னுடைய மனைவி என்று ஒப்புக் கொண்டதைப் பார்த்து புன்னகைத்தான் ஸ்ரீராம்.
"இப்போ உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கலாம். ஆனா, எதிர்காலத்துல சூழ்நிலைகள் மாறலாம். அப்போ நீங்க வித்தியாசமா யோசிக்க வாய்ப்பிருக்கு. கேர்ள்ஸ் ரொம்ப பொசசிவ்வா இருப்பாங்கனு ஒரு ஆர்டிகல்ல படிச்சேன்" என்றான் புன்னகையுடன்.
தன் முகத்தை அவனுக்கு எதிர் திசையில் திருப்பி கொண்டு வெளியில் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மிதிலா. இதை எப்படி கையாள்வது என்று அவளுக்கு புரியவில்லை.
"ஒரு பொண்ணு எங்க வீட்ல கொஞ்ச நாளா தங்கி இருந்தா. அவ உங்ககிட்ட சொன்னதை வச்சு, என்ன நடந்திருக்குமோன்னு நீங்க எப்படி வேணா கற்பனை பண்ணலாம். அதை என்னால அனுமதிக்க முடியாது. அதனால தான், இப்பவே இதை முடிவுக்குக் கொண்டுவர நினைச்சேன்"
இயலாமையின் தாக்கத்தால் கண்களை மூடினாள் மிதிலா.
"இதுல நீங்க வருத்தப்பட ஒன்னுமில்ல. இது முழுக்க முழுக்க என்னுடைய விருப்பம். என்னை சோதிச்சிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"
அவள் காரின் கதவைத் திறக்க முயன்றாள். ஆனால் அது அவளால் இயலவில்லை. அது சென்டர் லாக் செய்யப்பட்டிருந்தது. கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஸ்ரீராமை அவள் திரும்பிப்பார்க்க, சென்டர் லாக்கை திறந்துவிட்டான் ஸ்ரீராம்.
"வீட்டுக்கு போங்க ஜூனியர். தேவையில்லாத விஷயங்களை செய்யறதை நிறுத்துங்க... என்னை சங்கடப்படுத்துறதையும் சேர்த்து தான் சொன்னேன்" என்று கூறி விட்டு காரை விட்டு கீழே இறங்கி நடக்கத் தொடங்கினாள் மிதிலா.
அவள் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை, அங்கேயே காத்திருந்த ஸ்ரீராம், அதன் பிறகு காரை அங்கிருந்து கிளப்பினான்.
ஸ்ரீராமை பற்றி சிந்தித்தபடி தன் வீட்டை நோக்கி நடந்தாள் மிதிலா. வீட்டிற்கு வந்தவுடன், நேராக தன் அறைக்கு சென்றவள், தான் வணங்கும் பெருமாளின் சிலையின் முன் நின்றாள். அந்த சிலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளது கண்களில் இருந்து, கண்ணீர் அருவி என பொழிந்தது. அவள் உடல் முழுவதும் நடுங்குவது போல் தோன்றியது அவளுக்கு. என்ன மனிதன் இவன்? இவ்வளவு செல்வமும், வசதி, வாய்ப்புகளும் இருந்த பிறகும், இன்னும் அவன் கன்னித் தன்மையோடு இருக்கிறானா? தனக்கும் கற்பு உண்டு என்று கூறினானே...! இது அவள் கனவிலும் எதிர்பாராதது. அவள் நினைத்துக் கொண்டிருந்ததை விட பல மடங்கு மரியாதைக்குரியவன் அவன். தன்னை நிரூபித்துக் காட்ட அவன் எடுத்த முயற்சி, அவன் யார் என்று கூறுகிறது. இந்த திருமணத்தில் அவன் எவ்வளவு தீவிரமாய் இருக்கிறான் என்பதையும் காட்டுகிறது. அவன் செய்ய நினைத்தது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. உலகில் எந்த ஆண்மகனும் செய்யத் துணியாத ஒன்று. தனக்கு இவ்வளவு உண்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒருவனிடம் எப்படி அவள் தன் வாழ்க்கை பற்றிய உண்மையை மறைக்க முடியும்? அதே நேரம், அவளுடைய அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை எப்படி உடைக்க முடியும்? என்ன தர்ம சங்கடம் இது...? குற்ற உணர்ச்சியில் கரைந்தாள் மிதிலா. குற்ற உணர்ச்சி அவளைப் பிய்த்துத் தின்றது.
யாரோ தனது அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, முகத்தை துடைத்துக்கொண்டு கதவை திறந்தாள் மிதிலா. ஆனந்தன் அவளை பார்த்து புன்னகை புரிந்தார். எதைப் பற்றியும் யோசிக்காமல், அவரை அணைத்துக் கொண்டாள் மிதிலா.
"ஸ்ரீராம் கருணாகரனுடைய பிஏவுக்கு என்ன ஆச்சு?" என்றார் கிண்டலாக ஆனந்தன்.
"எதுக்காக என்கிட்ட சொல்லாம என்னோட ஆஃபிசுக்கு வந்தீங்க, பா?"
"சாரி டா... நான் உன்னை பாக்க வரல. உங்க பாஸை பார்க்க வந்தேன்" என்று சிரித்தார் ஆனந்தன்.
அப்பொழுது, அவர்களுடன் வந்து இணைந்து கொண்டார் சாந்தா.
"இவங்களுடைய ஆஃபீஸ் எவ்வளவு பெருசு தெரியுமா சாந்தா?" என்றார் பெருமையுடன்.
"அப்படியா?" என்றார் சாந்தா.
"ஆமாம்... இந்தம்மா அந்த ஆஃபீஸுக்கு லேடி பாஸ் ஆக போறாங்க..."
"சும்மா இருங்கப்பா" என்றாள் மிதிலா அலுப்புடன்.
"எங்களுக்கு காபி கொண்டு வா, சாந்தா" என்றார் ஆனந்தன்.
சரி என்று கூறிச் சென்றார் சாந்தா.
"உன்னை எது கஷ்டப்படுத்துதுன்னு எனக்கு தெரியும்... உன்னோட கடந்த காலத்தைப் பத்தின பயம்..."
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"ஸ்ரீராமை சந்திக்கிற வரைக்கும் எனக்கும் கவலையா தான் இருந்தது. ஆனா, அவர் எதைப் பத்தியும் கவலைப் படல. அவர் ரொம்ப பிராட் மைண்ட்டட். அவரை விட ஒரு நல்ல புருஷன் உனக்கு கிடைக்கவே மாட்டான்..."
அலுத்துக் கொண்டாள் மிதிலா. அதைத் தான், சிறிது நேரத்திற்கு முன்பு அவள் நேரிலேயே கண்டாளே... தான் எவ்வளவு சிறந்த கணவனாக இருக்க முடியும் என்பதை அவன் காட்டிவிட்டான் என்று தன் தந்தையிடம் அவள் எப்படி கூறுவாள்?
"இங்க பாரு மிதிலா, ஸ்ரீராம் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு பிடிவாதமா இருக்காரு. அவர்கிட்ட உண்மையை சொல்ல நான் முயற்சி பண்ணேன். உன்னுடைய கடந்த காலத்தைப் பத்தி தனக்கு எந்த கவலையும் இல்லைன்னு அவர் சொல்லிட்டாரு. அதனால நீ அவரை பத்தி கவலைப்படாத..."
செயற்கையான புன்னகையை தன் முகத்தில் வரவழைத்துக்கொண்டு, சரி என்று தலையசைத்தாள் மிதிலா.
தொடரும்...