40 கைப்பேசி அழைப்பு
ஸ்ரீராமின் அறையில் தனது தந்தையைப் சந்தித்துவிட்டு, தனது அறைக்கு வந்த மிதிலாவுக்கு, இன்டர்காமில் ஒரு அழைப்பு வந்தது. அதை அவள் உடனே ஏற்று பேசினாள்.
"மிதிலா, யாரோ உங்ககிட்ட பேசணுமாம். கனெக்ட் பண்ணவா?" என்றாள் ரிசப்ஷனிஸ்ட் சௌமியா.
"யாருன்னு கேட்டீங்களா சௌமியா?"
"உங்க ஃப்ரெண்டுன்னு சொல்றாங்க"
"என்னோட ஃப்ரண்டா?" என்று முகம் சுளித்தாள் மிதிலா.
அவளது தோழியாக இருந்தால், அவளது கைப்பேசி எண்ணுக்கு அழைக்காமல், எதற்காக அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்? யாரது?
"சரி கனெக்ட் பண்ணுங்க" என்றாள் மிதிலா.
அந்த அழைப்பை, மிதிலாவின் அறையிலிருந்த தொலைபேசியுடன் இணைத்தாள் சௌமியா.
"மிதிலாவா பேசுறீங்க?" என்றாள் அந்தப் பக்கம் பேசியவள்.
"ஆமாம், நீங்க யார் பேசுறீங்க?"
"நான் யாருங்கிறது முக்கியமில்ல. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அதை சொல்லத் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்."
"என்ன விஷயம்?" என்றாள் மிதிலா.
"நீங்க ஏமாத்தபட்டுக்கிட்டு இருக்கீங்க"
"நானா?"
"ஆமாம்"
"யார் என்னை ஏமாத்துறது?"
"எஸ் ஆர் கே"
அதைக் கேட்டு திகைத்து நின்றாள் மிதிலா.
"இதைக் கேட்டு நீங்க அதிர்ச்சியாவிங்கன்னு எனக்கு தெரியும். எந்த பெண்ணா இருந்தாலும் தான் கல்யாணம் பண்ணிக்க போறவரை பத்தி கேட்டா அதிர்ச்சியா தான் இருக்கும்..."
அமைதி காத்தாள் மிதிலா.
"உங்களுக்கு லயாவை தெரியுமா... பிரியாவுடைய தங்கச்சி...?"
"ம்ம்ம்"
"அவளுக்கும் எஸ்ஆர்கே வுக்கும் தொடர்பு இருக்கு. அவ இந்தியா வந்ததே எஸ்ஆர்கேவுக்காக தான். தன்னுடைய பிசினஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட்டுகாகத் தான் எஸ்ஆர்கே உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார். அவருக்கு வேண்டியது உங்களுடைய மூளை மட்டும் தான். நீங்க அவர் கூட இருந்தா, எல்லாத்தையும் தன்வசமாக்க முடியும்னு அவர் நினைக்கிறார். உங்களை வேற எந்த கம்பெனிக்கும் போக விடாமல் தடுக்கத் தான் அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார்"
"அப்படின்னா, லயா எதுக்காக இந்த கல்யாணத்தை நடக்க விடுறாங்க? ஏன் அவரை எதிர்த்துப் போராடல? ஏன் சும்மா இருக்கணும்?" என்றாள் மிதிலா.
"எஸ்ஆர்கே வை யாராலயாவது எதிர்க்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? லயா ஒரு சாதாரண பொண்ணு. அவளால எப்படி எஸ்ஆர்கே வை எதிர்த்து சண்டை போட முடியும்?"
"சரி, நான் ஜூனியரோட வீட்ல பேசுறேன்"
"அய்யய்யோ அப்படி மட்டும் செய்யாதீங்க"
"ஏன்?"
"அவங்க லயாவை மட்டுமில்ல, ப்ரியாவையும் வீட்டை விட்டு துரத்திடுவாங்க. அவங்கலெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி நல்லவங்க இல்ல. கை தேர்ந்த நடிகருங்க. தங்களை ரொம்ப நல்லவங்களா காட்டிகிறதுல ரொம்ப தலைசிறந்தவங்க. ஆனா, எவ்வளவு கீழ்த்தரமா வேணும்னாலும் இறங்குவாங்க. அந்த குடும்பத்துல போய் மாட்டிக்காதீங்க. எப்படியாவது உங்களைக் காப்பாத்திக்கோங்க. ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையையும் காப்பாத்துங்க"
அழைப்பு துண்டிக்கப்பட்டது. கண்களை மூடி மென்று விழுங்கினாள் மிதிலா.
அழைப்பை துண்டித்த லயா, துஷ்ட புன்னகை வீசினாள் தனது கைபேசியை பார்த்தபடி. மிதிலாவின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியாகிவிட்டது. மீதி இருக்கும் விஷயத்தை மிதிலா பார்த்துக் கொள்வாள். மிதிலா புத்திசாலிப் பெண், அனைத்து புள்ளிகளையும் இணைத்துப் பார்த்து ஸ்ரீராமின் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்வாள். இனி, யார் கூறுவதையும் கேட்க மாட்டாள். அதன் பிறகு, ஸ்ரீராமை அடைவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. என்று கணக்கு போட்டாள் லயா.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
லயாவின் எண்ணம் சரி தான். மிதிலா புத்திசாலி பெண் தான். ஆனால், அவள் எதிர்பார்த்தது போன்ற புத்திசாலி அல்ல. லயாவுக்கு என்ன தெரியும், மிதிலாவை பற்றியும், அவளது பிரச்சனையை கையாளும் திறன் பற்றியும்?
முகத்தில் சலனமின்றி இருக்க முயன்றாலும், ஏனோ மிதிலாவால் அது முடியவில்லை. தனது அறைக்கு வந்த மிதிலாவைப் பார்த்து புன்னகைத்தான் குகன்.
"உங்க ஹெல்ப் வேணும் குகா, கொஞ்சம் அவசரம்" என்றாள் குரலில் அவசரம் காட்டி.
"சொல்லுங்க மிதிலா"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எனக்கு நம்ம ஆஃபீஸ் நம்பருக்கு ஒரு கால் வந்தது. அந்த கால் சரியா 3:47க்கு முடிஞ்சிது. அந்த நம்பர் எனக்கு வேணும். எனக்கு அந்த நம்பரை எடுத்து கொடுக்க முடியுமா?"
"அது என்ன பெரிய பிரமாதம்? நம்ம ஆஃபீஸ் கம்யூநிகேஷன் சிஸ்டம் மூலமா, நமக்கு வர்ற எல்லா இன்கமிங் நம்பரையும் நம்மால் பார்க்க முடியும். ஆனா... அது யாருகிட்டயிருந்து வந்த கால்?"
"தெரியல..."
"அந்த கால் உங்களுக்கு வந்ததுன்னு சொன்னீங்களே?" என்றான் குழப்பத்துடன்.
"ஆமாம்... ஆனா, அது ஒரு அனானிமஸ் கால்..."
"ஏதாவது பிரச்சினையா?"
"ஃபோன் பண்ணது யாருன்னு தெரியாத வரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது"
"யாரு ஃபோன் பண்ணது?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்த லட்சுமணனை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
"லக்கி, உன்கிட்ட நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்." என்று கூறிவிட்டு குகனின் பக்கம் திரும்பியவள்,
"அதுக்கு முன்னாடி, சீக்கிரமா எனக்கு அந்த நம்பரை எடுத்து கொடுங்க" என்றாள்.
"அஞ்சு நிமிஷத்துல அந்த நம்பரை நான் உங்களுக்கு தரேன். அதுக்கு முன்னாடி, யார் உங்களுக்கு போன் பண்ணது, என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க மிதிலா" என்றான் குகன்.
"பேசினது ஒரு பொண்ணு... ஜூனியரையும், பிரியாவுடைய சிஸ்டர் லயாவையும் பத்தி சொன்னா..."
"என்னது...???" என்று முகத்தை சுருக்கினான் லட்சுமன்.
"ஜூனியருக்கும், லயாவுக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னா..."
"இது சுத்தப் பேத்தல்..." என்று பல்லைக் கடித்தான் குகன்.
அந்தப் பெண் கூறிய அனைத்து விவரத்தையும் அவர்களிடம் கூறினாள் மிதிலா.
"எல்லாம் சுத்தப் பொய். எதையும் நம்பாத மிதிலா. ராமுவுக்கு அந்த பொண்ணை கண்டாலே பிடிக்காது. அவ கூட அவனுக்கு தொடர்பா? அவகிட்ட அவன் பேசக்கூட மாட்டான். அவ தான் அவனை காதலிக்கிறேன்னு அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா." என்றான் லட்சுமணன்.
"அதையெல்லாம் காதல்னு சொல்லாதே" என்று கடுப்படித்தான் குகன்.
"ஆமாம்.... அவ பரத், பிரியா அண்ணி கல்யாணத்தப்போ, எப்படி ராமு பின்னாடி சுத்தி, அவனை எரிச்சல் படுத்தினான்னு எல்லாருக்கும் தெரியும். அந்தப் பொண்ணோட இம்சை தாங்க முடியாம, அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டான் ராமு."
"மிதிலாவுக்கு ஃபோன் பண்ணது லயாவா தான் இருக்கும்னு எனக்கு தோணுது" என்றான் குகன்
"நானும் அப்படித் தான் நினைக்கிறேன்" என்றான் எரிச்சலுடன் லட்சுமன்.
"உன்கிட்ட அவ நம்பர் இருக்கா? என்றாள் மிதிலா.
"இருக்கு. உன்னால அவளுடைய வாய்ஸை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?" என்றான் லட்சுமணன்.
"நிச்சயமா முடியும்... ஆனா, ஒருவேளை, அவ வேற யாரையாவது பேச வச்சிருந்தா என்ன செய்றது?"
"அப்படி செய்யறதுக்கும் சான்ஸ் இருக்கு" என்றான் குகன்.
"இருக்கட்டுமே... நம்ம ட்ரை பண்ணிப் பாக்குறதுல என்ன தப்பு?" என்றான் லட்சுமணன்.
"ட்ரை பண்ணிப் பார்க்கலாம்... அதுக்கு முன்னாடி, அந்த நம்பர் யாருதுன்னு எனக்கு தெரியணும்" என்றாள் மிதிலா.
"சரி இருங்க"
அந்த அலுவலகத்தின் கம்யூனிகேஷன் இன்சார்ஜை அழைத்தான் குகன்.
"எனக்கு ஒரு இன்கம்மிங் கால் நம்பர் வேணும். அந்த கால், 3:47க்கு முடிஞ்சது."
"லைனிலேயே இருங்க சார். பாத்து சொல்றேன்"
"சரி, நான் வெயிட் பண்றேன்..."
"சார், நம்பர் சொல்றேன் எழழுதிக்கிறீங்களா?" என்றான் இன்சார்ஜ்.
"எழுதிக்கிறேன், சொல்லுங்க..."
தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தயாராக நின்றான் லட்சுமன். அவன் கூற கூற தனது கைப்பேசியில் அந்த எண்ணை பதிவு செய்தான். அவனது கைபேசியில் ஏற்கனவே லயாவின் எண் பதிவு செய்யப்பட்டு இருந்ததால், அது, லயாவின் பெயரை காட்டியது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நான் சொல்லல? அவ தான் இப்படிப்பட்ட கேடுகெட்ட வேலை எல்லாம் செய்வா. எங்க குடும்பத்து பொம்பளைங்களை பத்தி எவ்வளவு கீழ்த்தரமா பேசினா... ஆனா, இப்ப அவ என்ன செஞ்சிருக்கான்னு பார்த்தியா...? பிரியா அண்ணிக்காக தான் அவளை நாங்க சகிச்சிக்கிட்டு இருக்கோம். இல்லைன்னா, எப்பவோ அவளை வீட்டைவிட்டு துரத்தி இருப்பான் ராமு"
"அவ சொன்னதை நீங்க நம்புறீங்களா மிதிலா?" என்றான் குகன் ஒருவித தவிப்போடு.
பெருமூச்சுவிட்டாள் மிதிலா.
"இந்த மாதிரி விஷயத்துல ஒரு பொண்ணு பொய் சொல்லமாட்டான்னு நீ நினைக்கலாம்... ஆனா, எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி கிடையாது. உன்னோட கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை பார்க்காத மிதிலா. அவ உன்னை மாதிரி கிடையாது" என்றான் லட்சுமன்.
"லக்ஷ்மன் சொல்றது சரி. உங்களோட பலவீனத்தை தெரிஞ்சு அவ உங்களை அடிக்கிறா. அவளுக்கு தெரியும் யாரை எங்க அடிக்கணும்னு. அதனால தான், திறமையா அவங்க குடும்பத்து ஆளுங்ககிட்ட உங்களை பேச விடாம தடுத்துட்டா" என்றான் குகன்.
"நான் அவகிட்ட இதைப் பத்தி பேசுவேன்னு அவ நினைச்சிருக்கலாம்... இல்லன்னா, நான் ஜூனியர்கிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பார்த்திருக்கலாம்" என்றாள் மிதிலா.
"அவகிட்ட பேச போறியா மிதிலா?" என்றான் லட்சுமணன் அதிர்ச்சியுடன்.
"நிச்சயமா இல்ல... நான் அவங்களுடைய உறவை சந்தேகப்படுறேன்னு, இந்த விஷயத்தை அவ எனக்கு எதிரா திருப்பிவிட வாய்ப்பிருக்கு..." என்றாள் மிதிலா ஆழ்ந்த யோசனையுடன்.
"அதே தான்... அவளுக்கு அது தான் வேணும்... இந்த விஷயத்தைக் கேட்டு, நீ நிச்சயம் பிரச்சனை பண்ணுவேன்னு அவள் எதிர்பார்த்து தான் இதையெல்லாம் செய்றா" என்று பல்லைக் கடித்தான் லட்சுமன்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் குகன். நல்ல வேளை, மிதிலா ஸ்ரீராமை சந்தேகப்படவில்லை.
"நீ இப்ப என்ன செய்யப் போற மிதிலா?" என்றான் லட்சுமணன்.
"நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற?"
"ராமுவை தப்பா நினைக்காத மிதிலா. அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி தான்..."
அவன் பேச்சை துண்டித்து,
"கொஞ்சமா?" என்று தன் உதட்டை மடித்தாள்.
"சரி, ஒத்துக்குறேன்... அவன் சரியான சிடுமூஞ்சி தான். ஆனா, பொம்பளைங்க விஷயத்தில் அவன் தங்கம். அதுலயும் அவன் லயாவை அடியோட வெறுக்கிறவன். அவளை கிட்ட வரவே அவன் விட்டதில்ல. அவனை மடக்கி போட அவளால எவ்வளவு முடியுமோ எவ்வளவு முயற்சி பண்ணி பார்த்துட்டா. ஆனா, அதுக்கு அவன் ஒரு சந்தர்ப்பம் கூட கொடுக்கவே இல்ல."
சரி என்று தலையசைத்துவிட்டு, ஒன்றும் கூறாமல் தனது அறையை நோக்கி நடந்தாள் மிதிலா.
கவலையுடன் குகனை பார்த்தான் லட்சுமன். அவனை நோக்கி மெல்ல தன் கண்களை இமைத்தான் குகன்.
"அவங்க அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டாங்க.
கவலைப்படாதே"என்றான்.
"தெரியும்... ஆனா, இது ராமுவைப் பத்தின விஷயம். கல்யாணத்தை நிறுத்த, அவளுக்கு இது ஒரு நல்ல காரணம் இல்லையா?" என்றான் தவிப்புடன் லட்சுமன்.
"யாரோ சொன்னதை நம்பி, அவங்க கல்யாணத்தை நிறுத்துவாங்கன்னு நீ நினைக்கிறாயா?"
"தெரியல குகா... என் மூளை வேலை செய்ய மாட்டேங்குது. அவ என்ன செய்யப் போறாளோ" என்று புலம்பியபடி அங்கிருந்து சென்றான் லட்சுமன்.
காலம் தாழ்த்தாமல் ஸ்ரீராமின் அறையை நோக்கி ஓடினான் குகன். கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்தான்.
"எஸ்ஆர்கே நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று கூறிய குகனைப் பார்த்து,
"சொல்லு குகா... ஏதாவது பிரச்சனையா?" என்றான் ஸ்ரீராம்.
"ப்ரியாவோட தங்கச்சி லயா, மிதிலாவோட விளையாடியிருக்கா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிதிலாவுக்கு ஃபோன் பண்ணி, உனக்கும், அவளுக்கும் தொடர்பு இருக்கிறதா சொல்லியிருக்கா"
ஆத்திரத்தில் கொதித்து போனான் ஸ்ரீராம். எவ்வளவு தைரியம் இருந்தால், லயா மிதிலாவுக்கு ஃபோன் செய்து வாய் கூசாமல் பொய் கூறியிருப்பாள்...? இதற்கு அவள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
"அவளைப் பத்தி எல்லாருக்கும் தெரிய வேண்டியது ரொம்ப அவசியம். இல்லனா, நீ மிதிலாவுடைய நம்பிக்கையை மொத்தமா இழந்துடுவ. அதுக்கப்புறம் அவங்களை குற்றம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல" என்றான் குகன்.
கோபமும், பயமும் ஸ்ரீராமின் மனதை ஆட்கொண்டது. அவனுக்கு தெரியாதா மிதிலாவை பற்றி? அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவன் பட்டபாடு அவனுக்கு தானே தெரியும்...! அவளும் திருமணத்தை நிறுத்த ஏதோ ஒரு காரணத்தை எதிர்பார்த்து தானே காத்திருக்கிறாள்...? அவன் தன்னை நிரூபிக்கத் தவறினால், அவள் நிச்சயம் அவனை மணந்து கொள்ள சம்மதிக்கவே மாட்டாள்.
"ஆனா, பிரியா..." என்று குகன் ஏதோ சொல்லப் போக,
"இதுக்கு அப்புறம் நான் பிரியாவைப் பத்தி கவலைப்படுறதா இல்ல. பிரியாவுக்காகவும், பரத்துக்காகவும் தான் நான் அந்த பொண்ணை பொறுத்துக்கிட்டு இருந்தேன். இதுக்கப்புறம் யாரைப் பத்தியும் எனக்கு கவலையில்ல" என்று உறுமினான்.
தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு, தனது அறையை விட்டு வெளியேறினான் ஸ்ரீராம் கொப்பளிக்கும் கோபத்துடன்.
தொடரும்...