உற்சாகமாக வீட்டினுள் நுழைந்தவனை பர்வதம், மாதவன், உஷா என மூவருமே கேள்வியாக ஏறிட்டனர்.
"என்னடா, எந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தது உனக்கு?"
"எனக்கு மூணு பொண்ணையும் தான் பிடிச்சிருந்தது பாட்டி... ஆனா அவங்களுக்குத் தான் ஏனோ என்னைப் பிடிக்கல!"
வார்த்தையில் தன் விஷமத்தனத்தை மறைக்கச் சிரமப்பட்டவாறே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான் ஆதித்.
"என்னடா கண்ணா சொல்ற?? உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்களா!?"
உதட்டைப் பிதுக்கி, சோகமாகத் தலையை சரித்தான் அவன்.
"என்ன பண்றது பாட்டி... அவங்க முடிவு அதுதான், நான் என்ன பண்ண முடியும், சொல்லுங்க?"
உஷா கண்களைச் சுருக்கி சந்தேகமாகப் பார்த்தார் அவனை.
"ஆதித்... என்ன பண்ணின நீ?"
"வாட்!? மாம், அவங்க பிடிக்கலைன்னு சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன்?"
"நீதான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியே? அப்போ அவங்க பிடிக்கலைன்னு சொன்னா, நீ ஹேப்பியா தானே இருக்கணும்?? ஏன் இப்ப மட்டும் சோகமா இருக்க?"
அவர் குறுக்கு விசாரணை செய்து தன் குட்டை உடைக்குமுன் அவசரமாகப் படியேறியவன், "டையர்டா இருக்கு மாம். நான் தூங்கப்போறேன்" என்றுவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்தான்.
நேரம் போவது தெரியாமல் தனது நிறுவனத் தரவுகளை மடிக்கணினியில் பார்ப்பதும், குறிப்பேட்டில் எதையோ எழுதுவதும், பின் மின்னஞ்சலில் மேலாளர்களுக்கு ஆணைகள் அனுப்புவதுமாக இருந்தவன், கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த நகுலைக் கவனிக்கவில்லை.
"என்ன மச்சான், கோயமுத்தூருக்குள்ள எந்தப் பொண்ணும் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குதாமே..? எதாவது ரிவர்ஸ் மலையாள மாந்திரீகமா?" என்றவாறே உள்ளே வந்தான் அவன்.
அதைக்கேட்டுப் பாதிச் சிரிப்போடு நிமிர்ந்த நிவேதன், குறும்பாகக் கண்ணடித்தான். "அப்படித்தான் வச்சுக்கோயேன்!!"
"... ஏன்டா??"
நகுலின் குரலில் நக்கல் தொனித்தாலும், நடந்ததை அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தது.
நடந்ததைச் சொன்னான் அவன்.
"அவங்கதான் அறிவில்லாம இதெல்லாம் பண்றாங்கன்னா, நானும் அதுக்கு ஒத்துக்கணுமா!? அதான், என் ஸ்டைல்ல ஒரு முடிவு கட்டுனேன். கல்யாணம்ங்கறது, என்னைப் பொறுத்தவரை மனுஷங்களுக்குத் தரப்படுற மோசமான தண்டனை!
I can never imagine myself succumb to it. I'm not gonna let myself tied to some wide eyed fool that--"
வாசலில் பர்வதத்தைப் பார்த்ததும் அவனது வாக்கியம் பாதியில் நின்றது. அதிர்ச்சியாக விழித்தான் அவன்.
"பாட்டி.."
அவர் கையுயர்த்தி அவனைத் தடுத்தார்.
"நீ எதுவும் சொல்லவேணாம் ஆதித். உனக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகிடுச்சு, உன் கம்பெனியோட. இங்க வந்ததிலிருந்து நானும் பார்க்கறேன், நீ அக்கறையெடுத்து கவனிச்சுக்கிட்ட ஒரே விஷயம் உன் பிஸினசைத் தான். அதைவிட்டு உன்னை கன்வின்ஸ் பண்ற அளவுக்கு எங்களுக்கு திறமையில்ல. நீ சொன்னதுதான் கரெக்ட். நீ உன் பிஸினசையே பாரு."
இறுக்கமான முகத்தோடு அவர் சென்றுவிட, ஆதித் அவமானமாக நின்றான்.
நகுல் அவசரமாகத் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லையெனத் தலையசைக்க, ஆதித் அதைக் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை.
அன்று முழுவதும் ஒருவார்த்தை பேசவில்லை பர்வதம் ஆதியுடன். பெற்றோர் இருவரும் கவலையோடு ஏறிட்டனர் அவர்களை; ஆனால் எதுவும் கூறவில்லை.
மறுநாள் அதிகாலையில் பயணப்பைகளோடு வந்தான் ஆதித்.
"பாட்டி, நான் கல்கத்தா கிளம்பறேன். உங்களுக்கு என்மேல கோபம் குறைஞ்சா, ஃபோன் பண்ணுங்க. டாட், மாம்.. நான் வரேன்."
வார்த்தையின்றி அவர் நிற்க, பெற்றோரும் மனவருத்தத்தோடு பார்க்க, ஆதித் தீர்மானமான முகத்தோடு காரில் ஏறிக்கொண்டான்.
"ஏர்ப்போர்ட்."
****
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
கல்கத்தாவில் ஆதித் அவனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதில் முனைந்திருந்தான். கப்பல் உதிரிப் பாகங்கள் மட்டுமன்றி, எட்டு புது நிறுவனங்களிலும் ஒப்பந்தங்கள் பெறுவதற்காக இராப்பகலாக உழைத்துக்கொண்டிருந்தான். சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் தரவரிசைப் பட்டியலில் ஆதித்தின் நிறுவனம் மதிப்பில் உயர்ந்திருந்தது. ஆயினும் போதாமல், தன் முழு முயற்சியையும் கொடுத்துப் பாடுபட்டுக்கொண்டிருந்தான் அவன்.
அவ்வப்போது சொந்த ஊரின் நினைப்பு வரும். கூடவே கடந்த தீபாவளியின்போது நடந்த பெண்பார்க்கும் படலங்களின் கூத்தும் நினைவிற்கு வந்து புன்னகைக்கச் செய்யும். ஆனால் அடுத்தடுத்த வேலைகளில் அவன் மும்முரமாகிவிடுகையில், அவை காற்றுப்பட்ட கற்பூரமாகக் கரைந்து கலைந்துவிடும்.
அன்றும் அதுபோலவே தனது அலுவலக அறையில் அமர்ந்து அடுத்த செயற்குழு சந்திப்பிற்கான உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாரா வேளையில் கைபேசி அடிக்க, அவனது கவனம் திரும்பியது அதில்.
ஊரிலிருந்து, பாட்டியிடமிருந்து ஃபோன்.
சற்றே குழப்பமாக அதை எடுத்தான் அவன்.
"ஹலோ, பாட்டி?"
எதிர்முனையிலோ பாட்டியின் குரல் இல்லை. மாறாக வேறொரு பதற்றக்குரல்.
"ஐயா.. பெரியம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க ஐயா... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியலீங்கய்யா... சீக்கிரம் வாங்க!!"
**
இம்முறை நள்ளிரவில் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, குளிர்காற்றின் இதமோ, தமிழ்நாட்டின் மணமோ அவனை சமன்படுத்தவில்லை. மூன்று மணிநேரம் காத்திருந்து கிடைத்த முதல் விமானத்தில் அவசர டிக்கெட்டில் வந்து இறங்கியிருந்தான் ஆதித். மனமெல்லாம் பாட்டியை நினைத்துப் படபடவென அடித்துக்கொண்டது. வீட்டு வாசலில் கார் நின்றதும் குதித்து இறங்கியவன், மூச்சுவாங்கப் படியேறி பர்வதம் இருந்த அறைக்கு ஓடினான்.
கதவைத் திறந்துகொண்டு அவன் உள்ளே நுழைந்தபோது பர்வதம்மாள் கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தார். அவருடலில் பொருத்தியிருந்த இதயமானிகள் ஒரே இடைவெளியில் நிலையாக ஒலிக்க, அதுவே ஆதித்தை அமைதிப்படுத்தியது, அதிசயமாக.
"பாட்டி... ஆதி வந்திருக்கேன்..."
மென்மையாக அழைத்தவாறே அவரருகே அமர, அவனது குரலில் மெல்லக் கண்விழித்துப் பார்த்தார் பர்வதம்.
"ஆ.. ஆதித் கண்ணா..."
பயமும் பதற்றமும் கவலையும் கண்ணீரும் ஒன்றையொன்று மிஞ்சி ஒலித்தன அவரது அழைப்பில். ஆதித் ஆறுதலாக அவரது கையை இறுக்கப் பற்றிக்கொண்டான்.
"பாட்டி.. ஷ்ஷ்... உங்களுக்கு ஒண்ணும் இல்ல. நான் வந்துட்டேன்ல.. எல்லாம் சரியாகிடும்."
அவர் பெருமூச்சு விட்டார்.
"உங்களையெல்லாம் இனி பார்க்கவே முடியாம, கடைசில பேரன் கல்யாணத்த பாக்க முடியாமலேயே போயிடுவேனோன்னு எல்லாம் பயந்துட்டேன் கண்ணா. ஆதித், எனக்கு என்ன வியாதியாம்?"
ஆதித் மிடறு விழுங்கினான். மருத்துவத் தரவுகளின்படி அது அவரது முதல் மாரடைப்பு. இன்னும் இருமுறை அது நிகழ்ந்தால்... ஆதித் தலையசைத்து அவ்வெண்ணத்தை அகற்றினான்.
"ஒ-- ஒண்ணுமில்ல பாட்டி.. BP குறைஞ்சதால மயக்கம் வந்திருக்கலாம்னு சொன்னாங்க..."
"எனக்கு ரொம்பநாள் வாழணும்னெல்லாம் ஆசையில்ல ஆதித். உங்க தாத்தா தவறி ரெண்டு வருஷமாச்சு. எனக்கும் அவர்கிட்டப் போறதுக்கு வேளை வந்துடுச்சு போல.."
"பாட்டி, என்ன பேசறீங்க நீங்க!? நீங்க இன்னும் ரெண்டே நாள்ல பழையபடி எழுந்து நடந்து கம்பெனிக்கே போயிடலாம்! கண்டதை நினைச்சு குழப்பிக்காதீங்க!"
"கவலையில்லாம நிம்மதியா நான் இருக்கணும்னா, உன் கல்யாணத்தை சீக்கிரமா பார்க்கணும் ஆதித். அதுக்கப்பறம் எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. பாட்டிக்காக உன் மனசை மாத்திக்க மாட்டயா கண்ணா?"
ஆதித்தின் முகமும் இப்போது வேதனையில் கசங்கியது. பாட்டியின் கையைத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு, காயமுற்ற பார்வையோடு அவரைப் பார்த்தான் அவன். யோசித்துப் பேசுமுன் அயர்ச்சியில் கண்மூடி உறங்கிப்போனார் அவர்.
ஆதித் சோர்வாகத் தலையைப் பிடித்தவாறு பின்னால் சாய்ந்தான். பெற்றோரின் அலைபேசி அழைப்புகளுக்கு பதில் தந்து அவர்களை ஆசுவாசப்படுத்தியவன், தானே பாட்டியுடன் இருந்து பார்த்துக்கொள்வதாக வாக்களித்தான் அவர்களுக்கு.
ராஜீவை அழைத்து அடுத்த சில நாட்களுக்குத் தன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் எனவும், தனது வியாபார சந்திப்புகளை ஒத்திப்போடுமாறும் ஆணையிட, அவனோ அலறினான்.
"பாஸ்!! அடுத்த வாரத்துக்குள்ள டீலை க்ளோஸ் பண்ணலைன்னா வேற கம்பெனியைத் தேடிப் போயிருவோம்னு GRP ஸ்டீல்ஸ்ல சொன்னாங்களே!? டீல் போயிருச்சுன்னா அப்பறம் எப்படி டர்ன் ஓவர் காட்டப்போறோம்? அப்பறம் எப்படி ஸ்டாக்ஸ் வாங்கப் போறோம்? அப்பறம் எப்படி--"
"எப்படின்னு நான் வந்ததுக்கப்பறம் யோசிக்கலாம். இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காத ராஜீவ். முடிஞ்ச வரைக்கும் சமாளி. நான் மெயில்ல மத்ததை சொல்றேன்."
அடுத்த சில நாட்கள் பர்வதத்தைவிட்டு நொடியும் நீங்காமல், அருகிலேயே இருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டான் ஆதித். உணவு ஊட்டுவதில் தொடங்கி, மாத்திரை தந்து உறங்க வைப்பது வரை அவனே செய்தான். அவர் உறங்கியபோதும் உறங்காமல் அருகிலேயே அமர்ந்திருந்தவன், நடுநிசி வரையில் மடிக்கணினியில் வேலையும் பார்த்தான்; ராஜீவிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பி கம்பெனியையும் நிர்வகித்துக்கொண்டான்.
பர்வதமும் அவனது கவனிப்பில் ஓரளவு தேறினார்.
இருவரும் சேர்ந்து நேரம் செலவிடத் தொடங்கினர்; தொலைக்காட்சி கொஞ்சம், தோட்டத்தில் உலவுதல் கொஞ்சம், சதுரங்கம் சீட்டாட்டம் என்று கொஞ்சம். ஆண்டுக்கணக்கில் பேச மறந்த கதைகளையெல்லாம் பாட்டியும் பேரனும் பேசிக்கொள்ள, பொழுதுகள் இனிதே கரைந்தன.
ஒரு வாரம் கழித்து, அன்று காலை ஆதித் விழித்தபோது, வெகுநாட்கள் கழித்து நன்கு உறங்கிய திருப்தி இருந்தது உடலில். எழுந்து சாவகாசமாக சோம்பல் முறித்தவன், பால்கனி வழியே தோட்டத்தை சிலகணங்கள் ரசித்தான். பின் குளித்து உடைமாற்றிவிட்டு, பாட்டியைத் தேடி அவரது அறைக்குச் சென்றான்.
அவரோ அங்கில்லை.
"பாட்டி...? பாட்டி..!"
கூவியழைத்தவாறே அவன் படியிறங்கி வர, அவனை எதிர்பார்த்திருந்ததுபோல சோபாவில் அவர் அமர்ந்திருக்க, அவர் கையிலிருந்த பெரிய காகித உறையைப் பார்த்தவனின் கண்கள் சந்தேகமாக சுருங்கின.
'குணமடைந்த உடனேயே மீண்டும் பழைய பஞ்சாங்கத்தைத் திறக்கிறாரா!? என் வார்த்தைக்கு கொஞ்சமும் மதிப்பில்லையா அவரிடம்??'
கூர்மையான பார்வையுடனே அவன் வர, அவனது எண்ணம் புரிந்தவராய், "நீ நினைக்கறமாதிரி ஒண்ணும் கிடையாது ஆதித்! போன மாசம் நம்ம கம்பெனி சூப்பர்வைஸர் வந்து பத்திரிக்கை வச்சிட்டுப் போனாரு. நம்ம வீட்டுல தான் நல்ல காரியம் நடக்கப்போறதில்ல.. நடக்குற விசேஷத்துலயாச்சும் கலந்துக்கணும் கண்ணா.." என அதை நீட்டினார் அவனிடம்.
அப்போதுதான் அது ஒரு திருமண அழைப்பிதழ் என்பது புரிந்தது அவனுக்கு. இன்றைய தேதியிட்டிருந்த உறைமேல், பொன்னிறத்தில் எழுதியிருந்த மணமக்கள் பெயரின் இரண்டாவது வரியில் அவனது பார்வை நிலைகுத்தி நின்றது.
சௌபாக்கியவதி சிதாரா சீனிவாசன்.
****************************************
ஓ.....கே....(?????) என்ன நடக்குது இங்க!? தாரா எங்கே? தாராவுக்கு யார்கூட கல்யாணம்?? ஆதித் இங்க இருக்கான், அப்போ மாப்பிள்ளை யாரு??🤔🤔🙄🙄
(Hint: அடுத்த அத்தியாத்திலயே தாரா மறுபடி வரத்தான் போறா..! அதான் தெரிஞ்ச விஷயமாச்சே!?)
பொறுத்திருந்து பார்ப்போம். 🤪
கதை இதுவரை ஓகேவா? பிடிச்சிருக்கா?
வாசித்தமைக்கு நன்றி, வாக்களிக்க மறவாதீர்கள். பிடித்திருந்தால் நண்பர்களிடமும் பகிரவும்! நன்றி!!
மது.