4 தான் என்ற அகங்காரம்
சிலை போல் நின்றிருந்த குகனைப் பார்த்து தன் கண்களை சுருக்கினான் ஸ்ரீராம்.
"என்ன்ன்ன?"
"எஸ்ஆர்கே, மிதிலா, பரத்துக்கு பிஏவா செலெக்ட் ஆகியிருக்காங்க..." என்றான் தயக்கத்துடன்.
"அதனால என்ன? எனக்கு ஒரு பிஏ வேணுமுன்னு உங்களுக்கெல்லாம் தோணலையா?" என்றான் சீரியஸாக, ஏதோ அவர்கள் தான் அவனுக்கு ஒரு உதவியாளர் அவசியமில்லை என்று இருந்தது போல.
மலங்க மலங்க விழித்தான் குகன்.
"நீ தானே உனக்கு பிஏவே வேண்டாம்னு இருந்த...?" என்று கேட்டே விட்டான் குகன்.
"இப்போ எனக்கு வேணும்னு தோணுது. நீ தான சொன்ன, இப்ப செலக்ட் ஆகி இருக்கிறவங்க ரொம்ப எலிஜிபிள் கேண்டிடேட், எல்லா கொஸ்டினுக்கும் ஆன்சர் பண்ணாங்கன்னு...? என்னுடைய எதிர்பார்ப்பை அவங்க ஃபுல்ஃபில் பண்ணலாம் இல்லையா...? ட்ரை பண்ணி பாக்குறேனே..." என்றான் சர்வ சாதாரணமாக.
முயற்சி செய்து பார்ப்பதா? இவன் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?
"ஆனா, எஸ்ஆர்கே..." என்று இழுத்தான் குகன்.
"என்ன பிரச்சினை உனக்கு? எனக்கு ஒரு பிஏ வேணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?" என்று சீறினான்.
"இல்ல... நம்ம இன்டர்வியூ நடத்தினது பரத்தோட பிஏவுக்கு தான்... மிதிலாகிட்டயும் அப்படித் தான் சொல்லியிருக்கு..."
"நம்ம கம்பெனி ஸ்டாஃப்ன்னா, நம்ம சொல்ற வேலையை செய்யணும். நம்ம யாருக்கு சொல்றோமோ அவங்களுக்காக வேலை செய்யணும். புரிஞ்சுதா?"
"புரிஞ்சது"
அதற்கு மேல் அவனுடன் விவாதிக்க முடியும் என்று தோன்றவில்லை குகனுக்கு.
"இன்டர்வியூல செகண்ட்டா வந்த கேண்டிடேட்டை பரத்துக்கு பிஏவா அப்பாயின்ட் பண்ணு."
"நீ சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன்"
மிதிலாவின் பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்து சென்றான் குகன். ஸ்ரீராமின் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
அகங்கார புன்னகையை உதிர்த்தான் ஸ்ரீராம். இப்பொழுது பார்க்கலாம் மிஸ் கூல் என்ன செய்கிறாள் என்று. அவள் இந்த வேலையை ஏற்றுக் கொள்கிறாளா அல்லது மறுக்க போகிறாளா...? நூறு சதவிகிதம் அவள் மறுக்கத் தான் போகிறாள். தன் முன் நிற்கும் ஆற்றல் நிச்சயம் அவளுக்கு இருக்காது. அவள் வேலை செய்யப் போவது யாருக்காக என்று தெரிந்தால், அவள் நிச்சயம் பின்வாங்க தான் செய்வாள். அவள் இந்த வேலையை மறுக்க வேண்டும் என்று தான் அவனும் நினைத்தான். ஏனென்றால், லட்சுமணனுக்கு அருகில் அவள் இருப்பது சரி என்று அவனுக்கு தோன்றவில்லை. ஒருவேளை, இந்த வேலையை அவள் ஏற்றுக் கொண்டாலும், முழுக்க முழுக்க தன் கட்டுபாட்டில் அவளை வைக்க வேண்டுமென்று நினைத்தான் ஸ்ரீராம்.
லட்சுமணன் அவளை விரும்புகிறான் என்பதற்கு அப்பாற்பட்டு, அவள் சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்ட காட்சியை தன் மனக்கண்ணிலிருந்து ஸ்ரீராமால் அழித்தொழிக்கவே முடியவில்லை. சர்க்கரை வியாதிகாரனான அவன், இனிப்பு பலகாரங்களை தொட எப்பொழுதும் துணிந்ததேயில்லை. சர்க்கரை வியாதி இருக்கும் ஒருவர், இவ்வளவு அனாயாசமாய் இனிப்பை சுவைக்க முடியும் என்பதை அவன் கேட்டது கூட இல்லை. அதோடு மட்டுமில்லாமல் அவள் கூறிய வார்த்தைகள் வேறு அவன் மண்டையை குடைந்தது.
"என் மனதையும், உடலையும் எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்" என்று அவள் கூறிய வார்த்தைகள், அவனது அகங்காரத்தை தொட்டுப் பார்த்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் அவள் அதை எப்படி செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தான் அவன்.
.........
ஸ்ரீராமின் அறையிலிருந்து தான் கொண்டு வந்த பணி நியமன ஆணையை சோகமாய் பரத்திடம் கொடுத்தான் குகன். அதில் ஸ்ரீராம் செய்திருந்த திருத்தம், பரத்திற்கு தூக்கிவாரிப் போட்டது.
"ஸ்ரீராம் கருணாகரனுடைய பிஏ வா?" என்று கூறி திடுக்கிட்டு எழுந்தான் பரத்.
ஆமாம் என்று பரிதாபமாய் தலையசைத்தான் குகன்.
"அண்ணன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே. அவருக்கு மிதிலாவை பிடிக்காது. அவருக்கு மிடில்கிளாஸ் பொண்ணுங்களை சுத்தமா பிடிக்காது."
"அவனுக்கு பொண்ணுங்களயே பிடிக்காது. புத்தியை பேதலிக்க செய்யும் எதையும் அவனுக்கு பிடிக்காது. அது சரி, மிதிலாவை ஏன் அவனுக்கு பிடிக்காது?"
"மிதிலா, அண்ணனோட ஏதோ விவாதம் பண்ணதா பிரியா (பரத்தின் மனைவி) சொன்னா. அன்னைக்கெல்லாம் அண்ணன் கடுகடுன்னு இருந்தாரு"
"விவாதமா? எதைப் பத்தி?"
"அது தெரியல... மிதிலாவும் அதைப் பத்தி எதுவும் சொல்லல"
"அதைப் பத்தி லட்சுமணனுக்கு எதுவும் தெரியாதா?"
"தெரியாது. அவனுக்கு தெரிஞ்சிருந்தா நிச்சயம் என்கிட்ட சொல்லி இருப்பான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, குகா. அண்ணன் ஏன் இப்படியெல்லாம் செய்றாரு?"
"அவன் எப்பவுமே பர்சனல் விஷயத்தோட ப்ரொஃபஷனல் விஷயத்தை மிக்ஸ் பண்ணி பார்க்க மாட்டான். மிதிலா விஷயத்துலயும், அவன் அப்படியே இருப்பான்னு நம்ம நம்பலாம்..." என்று நம்பிக்கை வார்த்தை உதிர்த்தான் குகன்.
"ஆனா, எது அவர் மனசை திடீர்னு மாத்துச்சி?" என்ற பரத்தின் குரலில் கவலை தெரிந்தது.
"யாருக்கு தெரியும்? உங்க அண்ணன், அவ்வளவு சீக்கிரமா யாரையும் தன்னை கணிக்க விடமாட்டான். தனக்கு ஒரு பிஏ வேணும்குற விருப்பமே இல்லாம இருந்தானே..." என்று சலித்துக் கொண்டான் குகன்.
"இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் அவருக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்ல"
"அப்பாயின்மென்ட் ஆர்டரை கொண்டுவர சொன்ன போது கூட, அவன் அதை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லல"
"மிதிலா எனக்கு பிஏ வா செலக்ட் ஆனதுல லக்ஷ்மணனுக்கு ரொம்ப சந்தோஷம். அவன் அக்காகிட்ட இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லனும்னு சீக்கிரம் கிளம்பிப் போயிட்டான். இந்த விஷயம் தெரிஞ்சா, அவன் எப்படி ஃபீல் பண்ண போறான்னு தெரியல" என்று தன் தம்பியை நினைத்து வருந்தினான் பரத்.
"நம்மால ஒன்னும் செய்ய முடியாது, பரா. இந்த முடிவை எடுத்தது ஸ்ரீராம். அவன் முடிவு பண்ணா பண்ணது தான்"
"நான் கிளம்புறேன்"
"சரி, பரா. மிதிலாகிட்ட லக்ஷ்மன் எதுவும் சொல்றதுக்கு முன்னாடி அவனை தடுத்து நிறுத்து"
"இல்ல. அவன் சொல்ல மாட்டான். அவங்களை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு அவன் பிளான் பண்ணியிருக்கான்"
பெருமூச்சுவிட்டான் குகன். தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு கிளம்பினான், எப்போதும் தன் அண்ணன் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்யும் பரத்.
சித்தப்பா பிள்ளைகளாக இருந்த போதிலும், பரத்தும், லக்ஷ்மணனும் ஸ்ரீராம் கிழித்த கோட்டை தாண்டியதில்லை. அண்ணன் மீது கண்ணியமான மரியாதை கொண்டவன் பரத். அதை எப்பொழுதும் பேச்சிலும் கடைபிடிப்பவன். ஆனால், லக்ஷ்மன் சிறுவயது முதலே அண்ணன்களை ஒருமையில் அழைத்துப் பழகிவிட்டவன். கிண்டல், கேலி செய்ய தயங்காதவன். என்றாலும் கூட, அண்ணன்களின் கைக்குள் அடங்கி நடப்பவன் தான். இந்த அண்ணன், தம்பிகளுக்கு எப்போதும் தோளோடு தோள் நிற்பவன் ஸ்ரீராமின் தோழன் குகன். ஃபேஷன் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஸ்ரீராமுக்கு, குடும்பம், நண்பன், அலுவலகம் இது தான் உலகம். ஆனால், அதை அவன் வெளிப்படையாய் கூறுவதில்லை. அவ்வளவு தான்.
பூவனம்
மிதிலாவுக்கு எஸ்ஆர் ஃபேஷன்ஸில் வேலை கிடைத்து விட்டது என்ற செய்தியைக் கேட்டு சந்தோஷப்பட்டாள் நர்மதா. அதே நேரம், ஸ்ரீராமை நினைத்து அவள் பயப்படவும் செய்தாள்.
"லட்சு, மிதிலாவும் ராமுவும் இன்டராக்ட் பண்ற சந்தர்ப்பம் ஏற்படுமா?"
"வாய்ப்பே இல்ல கா. மிதிலா, பராவோட பிஏ. அவளை பாக்குற சான்ஸ் கூட ராமுவுக்கு இருக்காது. மிதிலா கூட டைரக்டா டீல் பண்ண போறது நம்ம பரா தான். அவ நிம்மதியா வேலை செய்வா. கவலைப்படாதீங்க"
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நர்மதா.
"எஸ்ஆர் ஃபேஷன்ஸ் கம்பெனி, மிதிலாவுடைய திறமையை கண்கூடா பாக்க போகுது. அவ ரொம்ப சின்சியர் தெரியுமா...!" என்றான் பெருமையாக லக்ஷ்மன்.
அப்போது அவர்கள் பரத் வருவதைப் பார்த்தார்கள். அவனும் லக்ஷ்மணனை போலவே குதுகலமாய் இருப்பான் என்று நினைத்தவர்கள், அவனது வாட்டமான முகத்தை பார்த்து புரியாமல் நின்றார்கள்.
"என்ன ஆச்சு, பரா?" என்றான் லட்சுமணன்.
ஒன்றும் சொல்லாமல் சோபாவில் அமைதியாக அமர்ந்தான் பரத்.
"என்ன ஆச்சு? உனக்கு ஒரு சூப்பர் கூலான பிஏ கிடைச்சதால, நீ ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு நாங்க நினைச்சுக்கிட்டு இருந்தோமே..." என்றாள் கிண்டலாக நர்மதா.
"அவங்க உண்மையிலேயே எனக்கு பிஏ வா இருந்திருந்தா நான் சந்தோஷ பட்டிருப்பேன்" என்று சோகமாய் கூறிய அவனை பார்த்து இருவரும் முகம் சுளித்தார்கள்.
"நீ என்ன சொல்ற?" என்றான் லக்ஷ்மன்.
"அவங்க, எனக்கு பிஏ வா வேலை செய்யப் போறதில்ல. அண்ணனுக்கு தான் பிஏ வா இருக்கப் போறாங்க"
"என்ன்ன்னது...?" என்று அதிர்ந்தாள் நர்மதா.
"அண்ணன் எல்லாத்தையும் மாத்திட்டாரு. மிதிலா, அவருக்கு வேணுமாம்..."
"என்ன உளர்ற நீ?" என்று அரற்றினான் லட்சுமன்.
"அவங்க, அவருக்கு பிஏ வா வேலை செய்யணும்னு சொல்லிட்டாரு"
"வாட் த ஹெல்... எதுக்காக மாத்தினான்? மிதிலாவை உன்னுடைய பிஏவா தானே குகன் செலக்ட் பண்ணி இருந்தான்?"
"எனக்கு தெரியல" என்றான் பரத்.
"ராமு, மிதிலாகிட்ட சண்டை போட்ட நாளிலிருந்தே எனக்கு கவலையா தான் இருந்தது" என்று கூறினாள் நர்மதா மெல்லிய குரலில்.
"ராமு, மிதிலாகிட்ட சண்டை போட்டானா...? எப்போ...? ஏன்?" என்றான் லட்சுமன்.
"கடைசியா நம்ம வீட்டுக்கு அவங்க வந்திருந்தாங்க இல்ல? அப்போ."
"ஆனா, அவ இதைப் பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே." என்று சலித்துக் கொண்டான் லட்சுமன்.
"ஏன்னா, அவங்க ராமுவை சீரியஸா எடுத்துக்கல"
"எதைப் பத்தி அவங்க சண்டை போட்டாங்க?"
"எனக்கும் அதை பத்தி எதுவும் தெரியல. ஆனா, நான் மிதிலாகிட்ட மன்னிப்பு கேட்டேன்"
"மன்னிப்பா...? மன்னிப்பு கேட்கிற அளவுக்கு அப்படி என்ன கா நடந்துச்சு?" என்றான் பதட்டத்துடன் லட்சுமன்.
அவளுக்கு தெரிந்ததை கூறினாள் நர்மதா.
"என்னக்கா இப்படி சொல்றீங்க...? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவன் மிதிலாவை ஹர்ட் பண்ணா என்ன செய்றது?" என்ற லக்ஷ்மன் முகத்தில் பயம் தெரிந்தது.
"எனக்கும் பயமா தான் இருக்கு" என்றாள் நர்மதா.
"இப்போ நான் மிதிலாகிட்ட என்ன சொல்றது? ஒரு ஃபிரண்டா இருந்து, என்னால அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு நெனச்சேன்..." என்றான் சோபாவில் அமர்ந்து தன் தலையில் கை வைத்த படி லக்ஷ்மன்.
"இந்த வேலை வேண்டாம்னு அவங்க சொல்லலாம் இல்ல?" என்றாள் நர்மதா.
"அவ வேலையில் சேர்ந்து தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கா. அவங்க குடும்பம் ரொம்ப மோசமான எக்கனாமிக் கண்டிஷன்ல இருக்கு. மிதிலாவும் வேலை செய்ற தைரியத்துல, அவங்க அக்காவுடைய கல்யாணத்துக்காக அவங்க அப்பா லோன் வாங்கிட்டாரு. அவ இதுக்கு முன்னாடி வேலை செஞ்சுகிட்டு இருந்த ராஜ் மோட்டார்ஸை இழுத்து மூடும் போது அவ ரொம்ப டென்ஷனா இருந்தா. அவளை அந்த மாதிரி டென்ஷனா நான் எப்பவும் பார்த்ததே இல்ல. அவங்க குடும்பத்து மேல அவளுக்கு ரொம்ப அக்கறை அதிகம்... அதுவும் அவங்க அப்பான்னு வந்துட்டா அவ எதுவும் செய்வா" என்று வருத்தப்பட்டான் லக்ஷ்மன்.
"அவங்கள வேலையில் சேர சொல்லு. நம்ம நிச்சயம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்" என்றான் பரத் நம்பிக்கையூட்டும் விதமாக.
ஆனால் அவர்களுக்குத் தெரியாது, இதில் அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஏனென்றால், இது ஸ்ரீராம் கருணாகரனால் தீர்மானிக்கப்பட்டுள்ள விஷயம். தான் நிர்ணயம் செய்த விஷயத்தில், மற்றவர் தலையிடுவதும் அதை மாற்றியமைக்க நினைப்பதும் அவனுக்கு பிடிக்காத ஒன்று. அவன், யாரையுமே அவ்வளவு எளிதில் திறமைசாலி என்று ஒப்புக் கொள்வதில்லை. அவனிடமிருந்து மதிப்பான வார்த்தைகளை பெறுவதை விட, மௌன்ட் எவரெஸ்ட்டில் ஏறுவது சுலபமானது. அவனை திருப்திப்படுத்துவது என்பது முடியாத காரியம். தேவையில்லாமல் சிரிப்பது கூட அவனுக்கு பிடிக்காது. மனதார யாரையும் பாராட்ட மாட்டான். அதே நேரம், யாரிடமிருந்தும், எதையும் அவனும் எதிர்பார்ப்பதில்லை. அது தான் அவன்...!
இப்போது, அவனுக்கு மிதிலாவை பிடிக்கவில்லை. அல்லது, அவளைத் தனக்கு பிடித்து விடக்கூடாது என்றும் அவன் நினைத்திருக்கலாம். தன்னுடைய நிர்ணயம் எப்போதும் சரியாகத் தான் இருக்கும் என்று நினைக்கும் அவன், காலப்போக்கில் என்ன செய்கிறான் என்று தான் பார்ப்போமே...!
தொடரும்...